பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
” பஸ்ம தாரணம்” – விபூதி அணிவது.
பெரியவாளும் நானும் என்னறையில், அவர் என் எதிரே அழகான படமாக இருந்தாலும் அந்த காந்த சக்தி மிகுந்த புன்சிரிப்பு. ஆழ்ந்த பார்வை, இதற்கெல்லாம் அர்த்தம் எனக்கு புரிந்து விட்டது. இனி நான் முன்பு போல் அவரை நேரில் பார்ப்பதோ,பேசுவதோ முடியாது. மனதால் தான் பேச முடியும். வெகு நேரம் பார்த்துக்கொண்டே இருந்த என் மனத்தில் புகுந்து என்னவோ கேட்கிறாரே அது என்ன?
‘என்னடா,உன் மனசிலே ஓடற எண்ணம் எனக்குத் தெரியாது என்கிற நினைப்பா உனக்கு?”
”இல்லை பெரியவா, உங்களுக்கு தெரியாதது, நீங்க இல்லாத இடம் எது பெரியவா, நீக்க சர்வஞர், சர்வ வியாபி. அது சரி என் மனசிலே நான் இப்போ என்ன நினைச்சேன் சொல்லுங்களேன்?”
”என்னிடம் கேள்வி கேட்க தயாரா நீ என்ன கேள்வி வச்சிருக்கேன்னு சொல்லட்டுமா?…”பெரியவா, எனக்கு உங்க வார்த்தைகள் சிலவற்றை உங்க வாயாலேயே கேட்கணும்” – இந்த கேள்வி தானே.”
”ஆமா பெரியவா. நமஸ்காரம் பண்ணி கேக்கறேன். சொல்லுங்கோ.”
”பெரியவா, எதுக்கு விபூதி இட்டுக்கணும்” அது பத்தி சொல்லுங்கோ’—- இது தானே உன் முதல் கேள்வி. சொல்றேன் கேளு:
”லோகத்திலே எல்லாருமே பரமேஸ்வரனுடைய பிரஜைகள். சிவன் மஹாபிதா. அவனுக்கும் உபதேவதைகளுக்கும் ப்ரீதி பண்ண யக்ஞம் செய்கிறோம். அக்னி காரியம் இல்லாம வைதிக மதமே இல்லை. உலகம் முழுவதுமே வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி ஹோமம் போல பல அக்னி காரியம் பண்ணினார்கள். அக்னி காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் என்று ஒன்று வழக்கம் உண்டு. வைஷ்ணவர்களாக இருந்தால் பாஞ்சராத்ர ஆகமத்திலுங்கூட ஹோமங் களுக்குப் பிறகு ஹோம பஸ்மத்தை எடுத்துத் தரித்துக் கொள்ள வேண்டும். சப்த த்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்ம தாரணம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டன. அதற்கு நாமே காரணம். நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள வேண்டும். வைதிக மதம் முன்போலவே எல்லா இடங்களிலும் வரவேண்டும். இதற்கு நம்மிடத்தில் அனுஷ்டானம் வரவேண்டும். பஸ்மதாரணம் அவசியம். பஸ்மம் சிவ ஸ்வரூபம். கலியுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்குவதற்கு பஸ்மதாரணம், ருத்ராக்ஷதாரணம், சுத்த ஸ்படிக ஸ்வரூப த்யானம், வில்வ அர்ச்சனை இதெல்லாம் மிக அவசியம். புரியறதா?”
நம்முடைய பெரியவர்கள் தங்களுடைய அனுபத்தின் மூலமே வெளியே சிவ காரியங்களைச் செய்து, உள்ளே அதற்கு ஏற்ற விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் மிலிட்டரிக்காரன். போலீஸ்காரன் எல்லாம் யூனி பாஃரம் போட்டால் வீரத் தன்மை வருகிறது என்று சொல்லுகிறான். அப்படித்தான் பக்தி வரவேண்டும், சாந்தம் வர வேண்டும், சத்தியம் வர வேண்டும் என்றால் நாம் ‘சிவ’ சின்னங்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் அனுபவ பூர்வமாக சொல்லி இருக்கிறார்கள். வெளியில் நாம் செய்கின்ற சில சம்ஸ்காரங் களினாலே உள்ளே சில நன்மைகள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் வெளி வேஷம் என்று யாரோ சிலர் நினைத்தால் அது அவர்களைப் பொறுத்தவரை வெறும் வேஷமாகவே போய்விடும் .
”நான் ஆத்மார்த்தமாக ஜீவனை பரிசுத்தம் செய்து கொள்வதற்காகச் சின்னங்களை அணிகிறேன்” என்று ஒருவன் நினைத்தால் சத்தியமாக அவனுக்குள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது. புறத்திலே தரிக்கும் சின்னங்கள் ஆத்மாவுக்கு உபயோகப்படுகின்றன.
”இதையும் கேளு. நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக் கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்தோ மானால் நமக்கு ஒருவேளை அன்னங் கிடைக்கலாமா? அதற்கு யோக்கியதாம்சமே இல்லையே. அப்படி இருக்கிறபோது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச்வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார்.
சகல வஸ்துக்களும் அழிந்தாலும் கடைசியில் தான் ஒன்று மட்டுமே எஞ்சியதாக, சத்தியமாக இருக்கிற பஸ்மத்தை நெற்றியிலும், ஸ்வபாவமாகத் துவாரங்களுடனும் முகங்களுடனும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற ருத்ராக்ஷங்களைக் கழுத்திலும், சாக்ஷாத் மஹாலட்சுமியின் வாசஸ்தலமாகிய வில்வத்தைச் சிரசிலும், வேதத்தின் மத்யமணிக்கு, நடு நாயக மணிக்கு, ஒப்பாக விளங்குகிற ‘சிவ’ என்னும் இரண்டுஅக்ஷரங்களை நாக்கிலும், சுத்த ஸ்படிக ப்ரகாச மஹாலிங்கத்தை உள்ளத்திலும் தரித்துக்கொண்டு ஜன்ம சாபல்யத்தை அடைய வேண்டும்.