GRAPHIC MEMORY — J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN

அபூர்வ ஞாபக சக்தி

மஹா பெரியவாளின் ஞாபக சக்தி அபூர்வமானது, அதிசயமானது. எத்தனையோ பேர் அதைக் கண்டு பிரமித்து சிலையாகி இருக்கிறார்கள். ஒரு ரெண்டு சம்பவம் இந்த பதிவில் குறிப்பிடுகிறேன்.
வடக்கே இருந்து ஒரு குடும்பம் காஞ்சி பெரியவா தரிசனத்துக்கு வந்தது.அதில் ஒரு நடுவயது பெண்மணி.
எதிரே ஹிந்தி மட்டுமே பேசும் அந்த குடும்பம் வணங்கி நின்றது.அந்த பெண்மணியைப் பார்த்த மஹா பெரியவா அருகே ஹிந்தி தெரிந்த தொண்டர் மூலம் மொழிபெயர்க்க சொன்ன சம்பாஷணை:
“திதிகளில் முதல் கடைசி எது ?
”அமாவாசை”
”அதில் கடைசி எழுத்தை எடுத்தால் என்ன வரும் ?”
”அமாவா ”
”உன் பெயர் அது தானே?”
” நான் தான் அமாவா!” என்றவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.
“என்னை இதற்கு முன் பார்த்திருக்கிறாயா?
“நான் பார்த்ததில்லை!”
“நான் உன்னைப் பார்த்திருக்கிறேன்”
”ஆமாம்,ஆமாம்! எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது”
”எப்படி எப்போது என்று சொல்”
“நான் சின்னக் குழந்தை, இரண்டு வயது இருக்கும். அப்போது எங்கள் தாத்தா மஹா பெரியவாளை எங்கள் அரண்மனைக்கு வர வழைத்துப் பாதபூஜை செய்திருக்கிறார்
,அப்பா சொல்லி கேட்டிருக்கிறேன். அப்போது பார்த்திருப்பேன். அப்பா தாத்தா சொல்லி எனக்குத் தெரியும். அப்போது நான் சின்னக் குழந்தையானதால் எனக்குப்பெரியவர்களைப் பார்த்த நினைவு இல்லை” என்று சொன்னாள், அந்தப் பெண்மணி.
காசி யாத்திரை சென்றிருந்த சமயம் மஹா பெரியவா அந்த ஜமீன்தாருடைய ஸமஸ்தா னத்தின் அழைப்பின் பேரில் அவர்கள் வசிக்கும் ஊருக்கு சென்றிருக்கிறார். வந்திருந்த அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் இருபத்தைந்து பேர்கள் தரிசனம் பெற மிகவும் பக்தி சிரத்தையுடன் வந்திருந்தார்கள்.அந்த சமஸ்தானத்தின் பெயர் நமக்கு நினைவில்லை.

இன்னொரு சம்பவம்:
ஒருசமயம் ஒரு முதிய தம்பதிகள், ஒரு தாத்தாவும், பாட்டியும் காஞ்சிபுரத்தில் பெரியவா
தரிசனத்துக்கு வந்தபோது காலை ஏழு மணி. மஹா பெரியவா ஒரு வாதாமரத்தின் கீழே, சாக்கில் அமர்ந்திருந்தார்கள். எதிரே கைகூப்பிக்கொண்டு நின்றார்கள் தம்பதிகள்.
பெரியவா அவர்களுடன் நிகழ்த்திய சம்பாஷணை:
“இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்கள் வீட்டு வாசலிலே இருந்ததே…. இன்னும் இருக்கோ?”
“ஆமாம் இன்னும் இருக்கு பெரியவா”
” பார்த்து இருபது வருஷத்துக்கு மேலே ஆகியிருக்கும். இப்போ பெரிசா வளர்ந்திருக்குமே”
” ஆமா பெரியவா, நிறைய காய்க்கிறது; தெருப்பசங்கள் கல்லை வீசியெறிந்து வாதாம் பழத்தைப் பொறுக்கித் தின்கிறதுகள்.”
“உங்கா வீட்டு கூடத்திலே ஒரு பத்தாயம் இருந்ததே…அதிலே கறையான் அரிச்சு, ரிப்பேர் பண்ற மாதிரி ஆயிருந்ததே…”
“அதை அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதில்தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வைக்கிறோம்…”
“ஒரு சிவப்புப் பசுமாடு கன்னு போடாமல் இருந்ததே…”
“ ஓ அதுவா. அப்புறம் ஆறு கன்னு போட்டுட்டு சமீபத்தில்தான் தவறிப் போச்சு. கன்றுக் குட்டிகள் எல்லாம் நன்றாய் இருக்கு. நல்ல வம்சம்…”
“ஒரு அய்யங்கார் கணக்குப் பிள்ளை இருந்தாரே? திருநக்ஷத்திரம் எண்பதுக்கு மேல் இருக்குமோ?”
“ரொம்ப நல்ல வைணவர். இப்போதான் சதாபிஷேகத்துக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வைகுண்டம் போயிட்டார்…”
“எட்டுக்குடி முருகனுக்கு, தைப்பூசம் காவடி எடுக்கிற வழக்கமாச்சே. உங்க புத்ராள் யாராவது வந்து விடாமல் காவடி எடுக்கிறாளா?”
“ பெரியவா கிருபையாலே எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் விடாமல் நடந்திண்டிருக்கு..”
“வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைனாயகி அம்மாள், பம்மல் சம்பந்த முதலி யார் நாவல்கள், மதன காமராஜன், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நிறைய வைச்சிருந்ததே இப்பவும் அதெல்லாம் இருக்கா…யாராவது படிக்கிறாளா?”
“புஸ்தகங்கள் இருக்கு, யாரும் படிக்கிறதில்லே..”
“ராமாயணம் பாராயணம் செய்து கொண்டிருந்ததே . தொடர்ந்து நடக்கிறதா?
“கண் சரியாகத் தெரியல்லே, ஒரு சர்க்கம் மட்டும் இப்போ தெல்லாம் படிக்கிறேன்…”

இந்த சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை!
கிராமத்துக்கு எத்தனையோ இருப்பது முப்பது வருஷத்துக்கு முன்னால், பெரியவா
இவர்கள் வீட்டுக்கும் விஜயம் செய்து, ஒரு மணி நேரம் போல் அந்த வீட்டில் தங்கி யிருந்தார். அப்போது அவர் கண்ணில் பட்டதை,கேட்டதை, இப்போது பார்த்தது போல் கேட்டதுபோல் அப்படியே காமிரா காட்சியாக தருகிறாரே….எப்படி அவர் மனதில் இதெல்லாம் பதிவாகிறது..!
பாட்டி ஆச்சர்யத்தோடு சொன்னாள்:
“பெரியவாளுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்கே…..நான் அந்த அகத்திலேயே ரொம்ப நாள் இருந்திருக்கேன். பெரியவா சொன்னதில் பாதி விஷயம் எனக்கே நினைவேயில்லை….”
பெரியவா அப்போது அந்த எண்ணச் சூழலை அப்படியே மாற்றி விடும் போல ஒரு உயர்ந்த தத்துவத்தைச் சொல்லி, கேட்டுக் கொண்டிருநதவர்களையெல்லாம் வானத்தில்
பறக்க வைத்து விட்டார்கள்!
“ஆமா…இதெல்லாம் என்ன ஞாபகசக்தி…? ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்க மாட்டேங்கிறதே…மனதில் ஈஸ்வரன் அம்பாள் ஞாபகம் தான் எப்போதும் இருக்கணும். அதற்கு பழக்கப்படுத்திக்கணும். ”

மஹாபெரியவாளின் ஆதங்கம் இப்படி இருக்குமானால், நாமெல்லாம் அதை நிறைவேற்ற பகவத் சிந்தனையில் கொஞ்சமாவது தினமும் ஈடுபடுவோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *