வாழ்க்கைப் பள்ளி – நங்கநல்லூர் J K SIVAN
பகவான் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு விதமான உடலைக் கொடுத்திருக்கிறான் என்று நினைத்துப் பார்க்கும்போது அவன் கெட்டிக்காரத்தனம் புரிகிறது. மிகப்பெரிய ஆச்சர்யம் என்ன? பார்ப்பதற்கு ஒன்று போலவே இருந்தாலும் ஒவ்வொரு ஜீவராசியும் வெவ்வேறு. உருவத்தில் எங்கோ ஏதோ வித்யாசம் இருக்கிறது. இரட்டையர்கள் நிச்சயம் ஒன்று போலவே ரெண்டும் இல்லை. உடலை விட்டுவிடுங்கள். உள்ளம், மனம் எப்படி ஒவ்வொரு ஜீவனுக்கும் வேறுபடுகிறது. எத்தனையோ எண்ணற்ற கோடி ஜீவன்களும் எப்படி தனித்தன்மையோடு இருக்கிறது. அதிலும் நாம் மனிதர்கள் ரொம்ப பாக்கியசாலிகள். மற்ற ஜீவன்களுக்கு இல்லாத ஸ்பெஷல் சலுகை நமக்கு கொடுத்திருக்கிறான். அவன் கொடுத்த அறிவு, புத்தி, நினைவு, பேசசு சக்தி, பார்க்கும் சக்தி இதெல்லாம் வேறு வேறாக இருந்தாலும் நம்மில் சிலர் உபரியாக நமக்கு கொடுத்த சலுகைகளை லக்ஷியம் பண்ணாமல் கொடுத்த பகவானையே மனசாக்ஷி இன்றி வாயில் வந்தபடி கண்டபடி இழிவாக பேசி, திட்டி எழுதி மகிழ்கிறான். ஆனாலும் இறைவன் இதை ரசித்து சிரிக்கிறான். குழந்தை ஆசையான, பெற்ற தாய் தந்தை முகத்தில் உதைத்தாலும் கோபிக்காமல் முத்தம் கொடுக்கிறார்கள் இல்லையா.கருணையே வடிவான பகவான் நம் குறையை லக்ஷியம் செய்வானா?
”இந்தா” என்று நாம் கேட்பதற்கு முன்பாகவே நமக்கு பகவானால் தானாகவே கொடுக்கப்பட்டது இந்த உடம்பு. இதை பாதுகாப்பாயோ, கெடுத்துக்கொள்வாயோ எல்லாம், உனது புத்தி போனபடி தான் என்று விட்டு விட்டான். கடைசி வரை உன்னோடு நீ விரும்பினாலும் இல்லாவிட்டாலும் இருப்பது இந்த உடம்பு. இதை உன்னிடம் காசு வாங்காமல் கொடுத்திருக்கிறான் கருணையுள்ள அந்த கடவுள்.
நீ பாடம் கற்றுக்கொள்ள பீஸ் வாங்காத பள்ளிக்கூடம் ஒன்றை வேறு கொடுத்திருக்கிறான் இந்த உடம்பைக் கொடுத்த கிருஷ்ணன். அந்த பள்ளிக்கூடம் எல்லோருக்கும் இலவசமாக எந்த கட்டு திட்டமும் இல்லாமல் அளித்திருக்கிறான். அந்த பள்ளிக்கூடத்தின் பெயர் ”வாழ்க்கை”.
இங்கே மார்க் கிடையாது. தப்பு சரி என்று எதுவும் கிடையாது. பாடங்கள் எங்கு நோக்கினும் நிறைய இருக்கும். வாத்தியார் இல்லாத இந்த பள்ளிக்கூடம் இது. இந்த விசித்ர பள்ளிக்கூடத்தில் நீ தான் மாணவன். நீயே உன்னை மாணவனாகவும் நீயே கற்றுணர்ந்த வாத்யார், உன் அனுபவம் தான் பாடம். அதுவே உன்னை நீ விரும்பியபடி வளரவைக்கும். நம்முடைய மற்ற பள்ளிக்கூடங்கள் போல இங்கே சிலபஸ் SYLLABUS எதுவும். இந்த பாடத்தை இவ்வளவு வருஷம் படிக்கவேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை. வாழ்க்கை பள்ளிக்கூடம் உன் செயலால், சொல்லால் உன் மனதால் நீ செய்பவற்றின் விளைவுகளை நீயே புரிந்துகொண்டு அடுத்த பாடத்திற் கு நீ தயாராகும் வரை அது உன்னை விடாது. விழுந்து வாரி, முண்டியடித்து வளரவேண்டியது உன் பொறுப்பு. சோதனைகள் நிறைய அதில் உண்டு. ரோடுகளில் ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறதே அது போல. வாழ்க்கை பள்ளிக்கூடத்தில் ஒரு கட்டத்திலிருந்து இன்னொன்றுக்கு தேறுவதும் தேராததும் திரும்ப திரும்ப முயற்சிப்பதும் உனது முயற்சியில், உனது கையில் தான் இருக்கிறது. இந்த பாடத்தில் தோல்வி கண்டவன் வெற்றி அடைய சந்தர்ப்பம் நிறைய கொடுக்கப்படும்.
இன்னொரு அருமையான அதிசயமான விஷயம் என்ன தெரியுமா? வாழ்க்கை ப்பாடம் எல்லோருக்கும் ஒரே மாதிரி அல்ல. ஒவ்வொருவரும் வித விதமான பாடம் கற்றுக் கொள்ளலாம். கற்றுக்கொள்ளும் வரை பாடம் திரும்ப திரும்ப தயாராக இருக்கும். கற்று முடித்தபின் தான் அடுத்த பாடம் எதிரே வந்து நிற்கும்.
கற்றுக்கொண்ட பாடம் முடிவு பெறாது. இந்த உடம்பு, அதாவது நீ, இருக்கும் வரை பாடம் வெவ்வேறாக மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். படித்த பாடம் புதிது புதிதாக மாறும் அதிசயம் இந்த பள்ளிக் கூடத்தில் மட்டுமே.
உன்னோடு பாடம் படிக்கும் ஒவ்வொருவரும் (மாணவரும்) உனது முகம் காட்டும் கண்ணாடி அவர்களையோ அவர்கள் கற்றுக்கொண்ட பாடத்தை பற்றியோ நீ விமர்சிக்க உனக்கு அதிகாரம் இல்லை. ஏன் என்றால் உன்னையே நீ விமர்சிப்பது அது என்று அல்லவோ ஆகிவிடும். நீ பார்ப்பது முகம் காட்டும் கண்ணாடி என்றேனே. நீ அவர்கள் என்று நினைத்து உன்னையே தான் வேறு வேறு ரூபத்தில் வாழ்க்கையில் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாய். எனவே மற்றவர் படிப்பினை உனக்கு தான் முதலில்.
இந்த பள்ளிக்கூடத்தில் உன்னை பரிசோதனைக் கூடத்தில் விட்டிருக்கிறார்கள். நீ எந்த உபகரணத்தை எடுத்து என்ன பரிசோதனை செய்கிறாயோ அதன் விளைவு எப்படி இருக்கவேண்டுமோ அப்படி அமையும். அதனால் உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உபகரணம், பொருள்கள் எல்லாவற்றையும் உபயோகப்படுத்தும் முன் அது பற்றி யோசி.
இந்த பள்ளிக்கூடத்தில் கேட்கப்படும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடைகள் உன்னிடமே தான் கொடுக் கப் பட்டிருக்கிறது. பதிலை யோசித்துவிட்டு அப்புறம் கேள்வியை தொடு. இதில் தேவை உன் கவனம், நம்பிக்கை, பொறுப்பு, மனசாட்சி.
ஒன்று முக்யமாக நினைவு கூற வேண்டும். இந்த பள்ளிக்கூடத்தில் நீ படிக்கும்போது உனக்கு ஒரு முக்யமான பொருள் — பேனா, பென்சில், பலகை, போல — கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பெயர் புத்தி. பென்சிலைக் கூறாக தீட்டிக்கொண்டு தான் எழுத உட்காருவோம். அதுபோல் இந்த புத்தியை தீட்டி வைத்துக் கொண்டு, இது பேனாவாக இருந்தால் அதற்கு தேவையான மசி வேண்டுமே அது போல் ஒரு மசியும் பள்ளிக்கூடத்திலேயே நிறைய வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மசியின் பெயர் அறிவு, ஞானம். அதை புத்தியில் நிரப்பிக்கொண்டு பள்ளியில் பாடம் படித்தால், தேறினால் தூர நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் வாத்யார் (கிருஷ்ணன்) நம்மை அருகிலே அழைத்துக்கொள்வார். அது தான் பாடம் படித்த பிறகு கிடைக்கும் ப்ரமோஷன்.
வேதங்கள் உபநிஷதங்கள் சொல்லும் உண்மைகளை வைத்துக் கொண்டு தான் இந்த கட்டுரை ஒரு குட்டி கதை போல் எழுதியிருக்கிறேன். புரிகிறதா. எனக்கு பாஸ் மார்க் உண்டா?