என்னத்தை அபிஷேகம் பண்ணுவது – நங்கநல்லூர் J.K. SIVAN
”என்ன சிவன் சார், சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதுவும் தனக்குத் தானே? வெயில் அதிகமா?” என்றார் போஸ்ட் மாஸ்டர் மார்க்க பந்து (ஒய்வு பெற்றவர்)..நண்பர். எப்போதாவது வருவார்.
”மார்க்க பந்து. நான் ஒரு வினோத லோகத்தில் இருந்தேன். சந்தோஷமாக இருந்தது”
”எனக்கும் அது பற்றி சொல்லுங்களேன்?”
”அதற்கென்ன. தாராளமாக. உட்காருங்கோ சொல்கிறேன். இது ஒரு சிவ பக்தன் பற்றிய விஷயம். தெலுங்கில் ஒரு அருமையான பாட்டு கேட்டேன். அது என்ன அர்த்தம் என்று பார்த்தேன் அது தான் என்னை மகிழ்வூட்டியது. டாக்டர் பால முரளி கிருஷ்ணா பாடிய சின்ன பாட்டு. ரொம்ப ஆலாபனை ஸ்வரப் ப்ரஸ்தாரம், ராகம் தானம் பல்லவி, தனி ஆவர்த்தனம் எதுவும் இல்லை. பாவம் (bhava) மட்டுமே நெஞ்சை தொடுகிறது”.
”என்ன பாட்டு சார்?
”ஏமி சேதுரா லிங்கா. ஏமி சேதுரா?.
”ஹே சிவலிங்கா, நான் என்னடா செய்வேன்? சொல்லு. நான் என்ன செய்வேன்?”
”ஏமி சேதுரா லிங்கா. ஏமி சேதுரா?.
”ஹே சிவலிங்கா, நான் என்னடா செய்வேன்? சொல்லு. நான் என்ன செய்வேன்?”
”கங்க உதகமு தெச்சி நீக்கு,லிங்க பூஜலு சேதமண்டே கங்கநுன்னா சாப கப்பா
எங் கிலந்துன்னாதி லிங்கா மஹானுபாவா , மாலிங்க மூர்த்தி, மாதேவ சம்போ (ஏமி )
எங் கிலந்துன்னாதி லிங்கா மஹானுபாவா , மாலிங்க மூர்த்தி, மாதேவ சம்போ (ஏமி )
” ஹே சிவா, நீ அபிஷேகப் ப்ரியனாச்சே. உனக்கு குளிர குளிர கங்கை நீரால் அபிஷேகம் பண்ணலாம் என்று ஆசையோடு கங்கை நீர் கொண்டு வரப்போன இடத்தில் ஒரு குட்டித்தவளை என்னைப்பார்த்து ”சாமி எதுக்கு இந்த தண்ணியை எடுத்துக் போறீங்க?”
‘ஏன் இந்த கங்கை தண்ணிக்கு என்ன?”
”ஒண்ணுமில்லே, எங்களை மாதிரி தவளைங்க, மீனுங்க இதிலேயே குளிக்கிறோம், எச்சமிடறோம், எச்சில் துப்பு றோம். அதைப் போய் சாமிக்கு….? என்று தடுத்தது. மஹானுபாவா, மஹா லிங்கமே, மஹாதேவ சம்போ, நான் என்ன செய்வேன். சொல்லு நான் எப்படி அப்படிப்பட்ட புனிதமற்ற கங்கை நீரால் உனக்கு அபிஷேகம் செய்வேன்?”
”அக்ஷயாவுல பாடி தெச்சி அரிப்பித்தமு சேதமண்டே அக்ஷயாவுல லேகா தூதா எங்கிலந்துன்னாதி லிங்கா
மஹானுபாவா , மாலிங்க மூர்த்தி, மாதேவ சம்போ (ஏமி )
”சரி அப்படியென்றால் கங்கை நீரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். அதோ தெரிகிறதே அந்த பசுவின் பாலைக் கறந்து அதில் அபிஷேகம் பண்ணினால் ஆஹா அதற்கு ஈடு ஏதேனும் உண்டா? என்று பசுவினருகே சென்று பாலைக் கறந்தேனா, அப்போது பார்த்து தான் சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். யார் சிரித்தது என்று பார்த்தேன். கன்றுக்குட்டி தான்.
”ஏன் சிரிக்கிறாய் என்ன விஷயம்? என்ன ஹாஸ்யம் இங்கே பால் கறப்பதில்?”
”இல்லை தாத்தா, சிவலிங்கத்துக்கு கோ மாதாவின் பால் அபிஷேகம் என்று நீங்கள் சொன்னது காதில் விழுந்தது. இதைப் போய் யாராவது அபிஷேகம் பண்ணுவார்களா? எச்சில், அதுவும் நான் குடித்த மீதி! என் வாய் எச்சில் பட்டதை அந்த பரமேஸ்வரனுக்கு அபிஷேகம் பண்ணுகிறேன் என்கிறீர்களே என்று சிரிப்பு வந்தது”
”ஓஹோ இது எனக்கு தோன்றவில்லையே. இந்த எச்சில் பசும் பாலால் உனக்கு அபிஷேகமா? மஹானுபாவா, மஹா லிங்கமே, மஹாதேவ சம்போ, நான் என்ன செய்வேன். சொல்லு நான் என்ன செய்வேன்?”
”தும்ப பூவுலு தெச்சி நீக்கு துஷ்டுகா பூ சேதமண்டே கொம்ம கொம்மகு கோடி தும்மேத
எங்கிலாந்துன்னாதி லிங்கா,மஹானுபாவா , மாலிங்க மூர்த்தி, மாதேவ சம்போ (ஏமி )”
இப்படியாகி விட்டதே, கண்ணெதிரே இருக்கும் தோட்டத்தில் சில வெண்மையான தும்பைப் பூக்களையாவது சிலது பறித்துக் கொண்டு வந்து என் உள்ளங்கவர் கள்வன் உலகநாதனுக்கு சாற்றினால் என்ன என்று தோன்றியது. தும்பைப் பூக்களை பறிக்கும்போது உய்ங் என்று கத்திக்கொண்டே சில தேன் வண்டுகள் என்னிடம் பேசினதை தான் இப்போது சொல்கிறேன்:
”வேண்டாம் இது எங்கள் எச்சில் பட்டது. இதனால் சிவனுக்கு அர்ச்சனை பண்ணாதீர். அந்த பாவம் எங்களை சேரவேண்டாம் ” என்று தடுத்துவிட்டது.
”மகாதேவா, அப்பனே உனக்கு எந்த விதத்தில் அபிஷேகம் செய்வது, எதை அளிப்பது பேசாமல் என் இதயத்தை எடுத்துக் கொள். அதுவும் ஏதாவது கெட்டுப் போவதற்குள்” என்று தோன்றியது அந்த பக்தனுக்கு
அந்த பாடலைக் கேளுங்கள் .
மனதிற்கு இனிமையாக இருந்தது எனக்கு? உங்களுக்கு?? click the link given
https://youtu.be/DOzbVCepY6w