’சூரியா, இதோ என் நமஸ்காரம்’’- நங்கநல்லூர் J K SIVAN
ஆதித்ய ஹ்ருதயம்
பூமியில் ராக்ஷஸர்கள்,கொடியவர்கள் ஆதிக்கம், அக்கிரமம் அதிகமாகும்போது பகவான் தானே அவதரித்து, கடின தவம் செய்து, அதீத பலம் பெற்றதால் அஹம்பாவத்தோடு திரிந்த அரக்கர்களை ஒடுக்கி, அழிப்பது வழக்கம்.
இலங்கேசன்,ராவணேஸ்வரன் சிவபக்தன். தவவலிமையால் பெற்ற வரத்தின் பெருமையால் எவராலும் தன்னை அழிக்க முடியாது என்ற இறுமாப்பு கொண்டவன். அவன் கேவலம் ஒரு மனிதனால் தன்னை வெல்ல முடியும் என்று எண்ணவில்லை. ஆகவே மனிதனால் மரணம் நேரக்கூடாது என்று வரம் பெறவில்லை. அதன் காரணமாகவே ஸ்ரீமந் நாராயணன் தசரத சக்ரவர்த்தியின் புதல்வனாக மானிடனாக அவதரித்து ராவணனை வென்று கொன்றான் என்பதுதான் ராமாயணம்.
இலங்கையில் ராம ராவண யுத்தத்தில் தன்னந்தனியனாக, வானரர்கள் உதவ, ராமன் அதிக சக்தி வாய்ந்த ராவணனை எதிர் கொள்கிறான். அப்போது ராமன் முன் தோன்றிய அகஸ்தியர் ராமனுக்கு நீ சூரியனை ஹ்ருதயத்தில் ஏற்று வணங்கி அவன் அருளால் சக்தி பெற்று எதிரிகளை வெல்வாயாக. என்று சூரியனின் சக்தியை ஆதித்ய ஹ்ருதயமாக உபதேசிக்கிறார். சூர்யன் சர்வ வல்லமை படைத்தவன். உயிர் காப்பவன்.
ராமனுக்கு சூரியனின் அனுக்ரஹம் கிடைக்க உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயம் இப்போது முதல் துவங்குகிறோம்.
ராமன் த்ரேதாயுகத்தை சேர்ந்தவன். 7000 வருஷம் முன்பு வாழ்ந்தவன். நாம் விஞ்ஞான காலத்தில் வாழ்கிறோம். சூரிய ஒளியின் மஹத்வம் நமக்கு தெரியும். அதுவே ஜீவாதார சக்தி என்று புரியும். அதை உணர்வதற்காகவாவது இதை படிப்போம். அப்படியே அகஸ்தியர் கூறும் மந்திரத்தின் உட் பொருளும் அறிவோம். ராமன் அதால் பயன் பெற்றதைப் போல் நாமும் தினமும் இதை உச்சரித்து பயனடைய ஒரு காசும் செலவில்லை.
இந்த மந்திரம் பற்றிய சில விவரங்கள்:
அகஸ்தியர் இதற்கு ரிஷி.
ஸ்வரம்: அனுஷ்டுப் (சந்தஸ் )
தெய்வம்: சூரியநாராயணன் ஆதித்யனின் ஹ்ருதயத்தில் இருப்பவன். அவனே ராமன் அவனே நாராயணன் அவனே எல்லாம். பரம்பொருள்.
சங்கராந்தி, பொங்கல் சமயத்தில் வருஷா வருஷம் ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது எனக்கு வழக்கம். இப்போது உபரியாக ஒரு முறை சூரியனை வேண்டுவோம். சமீபத்தில் சூரியனின் கதிர்கள் வீச்சு அதிகமாகி உள்ளது ஆகஸ்ட் மாதத்தில் கூட சூரிய வெப்பம் தாங்கமுடியாத நிலை இப்போது பூமியை வாட்டுகிறது. அவன் அருளால் அனைத்துயிர்களும் வாழ வேண்டும் என நமஸ்கரிக்கிறேன்.
அடுத்த பதிவிலிருந்து இன்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் பாராயணம் பண்ணுவோம்.