ஒரு முதியவர் குரல் கேட்கிறதா? நங்கநல்லூர் J K SIVAN
எழுபதைத் தாண்டி விட்டாலே நமக்குள் சில மாறுதல்கள் உண்டாவதை கவனித்திருப்பீர்கள். அதுவும் எண்பது தாண்டி எண்பத்தைந்தாவதில் இருக்கும் போது என்ன தோன்றுகிறது?
கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்த்தால், ஆரம்பத்தில் உலகமே அப்பா அம்மாவாக தான் இருந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களோடு, நம்மோடு கூடப்பிறந்த அக்கா, அண்ணன் , தங்கை தம்பி களிடமும் பாசம் நிரம்பி இருந்தது. அப்புறம் கல்யாணம் ஆகி மனைவி என்று ஒருவள் வந்து வாழ்க்கையில் சேர்ந்து கொண்டாள் . பாசம் நேசம் எல்லாம் அங்கேயும் பகிரப்பட்டது. அப்புறம் உலகமே நமது குடும்பம், மனைவி, மக்கள் என்று சுருங்கி விட்டது. எண்ணம் சிந்தனை எல்லாமே அதன் மேலேயே சுற்றி சுற்றி வந்தது. அப்புறம்…
பறவை கூட்டில் குஞ்சுகளுக்கு இடம் இல்லை இப்போது. இப்போது எண்ணம் பூரா என் மேலேயே இருக்கிறது. பகிர்தல் குறைந்து பூராவும் என்னை நானே நேசிக்க ஆரம்பித்துவிட்டேனோ? என் சுமை குறைந்து விட்டதோ? நான் என்ன உலகத்தை சுமந்து கொண்டிருக்கும் அட்லாஸ் ATLAS என்ற பலிஷ்டனா? என் 75 கிலோவை என் கால்களால் தாங்க முடியாத போது எப்படி அதிக சுமை தாங்குவது?என்று தோன்றி விட்டதா? என்னை யாரும் தேடவில்லை,என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று ஒரு எண்ணம் வந்து விட்டதோ?
பிடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து விட்டது. முன்பெல்லாம் எதற்கும் யாரோடும் பேரம் பேசி விலை குறைத்து வாங்குவதில் சமர்த்தன் என்ற எண்ணம் இருந்ததே. அதைக் காணோம்? காசு சம்பாதித்து சேர்க்கும் எண்ணம் போய்விட்டதோ? ஒரு சில ரூபாய்க ளை ஏழை வியாபாரிகளுக்கு பேரம் பேசாமல் வீட்டுக் கொடுப்பதால் எங்கோ சில குழந்தை களுக்கு படிக்கவோ, சாப்பிடவோ உதவட் டுமே என்று மனம் நினைக்க ஆரம்பித்து விட்டதோ?.
பணியாளர்களுக்கு ஒரு சில காசுகள் கேட்காமலேயே கூட கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் தோன்றும் ஆனந்தம் கண்ணாடிபோல் மனதில் சந்தோஷத்தை பிரதிபலிக்கிறதோ? பரம சுகம். எனக்காக உழைத்தவர் களுக்கு இது கூடவா செய்யக்கூடாது?
இளம் ரத்தத்தில் பெரியவர்கள் சொன்னதையே . பழங்கதையையே , திருப்பி திருப்பிச் சொல்லும்போது ”இதை எத்தனை தரம் கேட்பது?. சொன்னதையே சொல்லிக்கொண்டு போர்”அடிக்காதே” என்று தோன் றுமே. இப்போது நான் பழங்கதை சொல்லும்போது தான் பழமை எப்படி மீண்டும் அந்த குதூகல வாழ்க்கையில் மனத்தைக் கொண்டு செல்கிறது. அடிக்கடி அங்கே பயணம் செய்யலாமே என்று விரும்புகிறது” புரிகிறது.
முன்பெல்லாம் யாருடனாவது பேசும்போது அவர்கள் பேச்சில் தப்பு, திருத்தம் கண்டுபிடித்து சொல்வது பெருமையாக இருந்தது. நமக்கு தான் எல்லாம் தெரியும் என்ற மமதையோ? இப்போது புத்தராகிவிட்டேனோ? யாரையும் திருத்த, தவறை சுட்டிக்காட்ட எனக்கு உரிமை இல்லை என மனது புரிந்து கொண்டுவிட்டதா? . பேசாமல் தலையாட்டி அமைதியாக கேட்கும் போது அவர்களுக்கும் சந்தோஷம், எனக்கும் உள்ளே மன அமைதியோ?
யார் என்ன சிறிய செய்கை,உதவி செய்தாலும், சொன்னாலும் அவர்களை பாராட்டி பேசுகிறேன். அதனால் அவர்கள் மனம் குளிருகிறது. என்னோடு அன்பாக இருக்கிறார்கள். யார் என்ன சிறிய உதவி செய்தாலும் மனம் குளிர நன்றி நன்றி என்று சொல்லும்போது உள்ளே ஒரு புத்துணர்ச்சி புறப்படு கிறது.
முன்பு என் உடைகள் ஆடம்பரமாக, நாலு பேர் பார்த்து மெச்சக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததல்லவா? இப்போது எங்கே அதைக் காணோம்?. சொக்காய் வேஷ்டி கசங்கி இருந்தாலும் ஒரு பட்டன் சட்டையில் இல்லாவிட்டாலும் கவலையில்லை. ‘ ஆள் பாதி ஆடை பாதி’ எல்லாம் பறந்து போய் விட்டது. இப்போது அதெல்லாம் தேவையில்லை. ஒருவனை பிறர் மதிப்பது அவன் ஆடையால் அல்ல, அவன் உள்ளத்தால், குணத்தால் என்று புரிந்து விட்டது. இவ்வளவு லேட்டாக
வா?
என்னை ஒரு பொருட்டாக மதிக்காதவர்கள் மேல் முன்பெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வருமே.. இப்போது அது லக்ஷியம் இல்லை. பேசாமல் எங்கோ ஒரு மூலையில் அமைதியாக அமர்கிறேன் அல்லவா? நிம்மதியாக இருக்கிறது. என்னை யார் எதற்கு மதிக்க வேண்டும்? என் மதிப்பு தெரியாவிட்டால் எனக்கே முதலில் என்ன நஷ்டம்? என்ன நான் பெரிதாக யாரும் இதுவரை செய்யாததை எல்லாம் செய்து கிழித்து விட்டேன் என்று தோன்றுகிறதல்லவா?
என்னை சிலர் முட்டாளாக கருதினாலும், தண்டம் என்று நினைத்தாலும் மனதில் எந்த பாதிப்பும் இல்லை. நான் எவரோடும், எந்த போட்டியிலும் பங்கேற்க வில்லையே?. எந்த உணர்ச்சியும் , அகம்பாவமும், கர்வமும் இப்போது என்னிடம் கிடையாதே. யாராவது என்னிடம் வந்து பேசாவிட்டாலும் நானாக போய் ”என்னடா கோபு சொக்கியமா? உடம்பு நன்றாக இருக்கிறாயா? வீட்டில் எல்லோரும் நலம் தானே? என்று கேட்பதில் என்ன குறை? அகம்பாவம் இருந்த இடத்தில் அடுத்தவர் மேல் அக்கரை இருந்தால் நல்லது தானே? தனிமை எல்லோ ருக்கும் ஒத்து வராது. கொன்றுவிடும்.
ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தால் ”இன்று தான் என் கடைசி நாள்” என்ற எண்ணத்தோடு அதை அருமையாக, அழகாக செலவழிக்க தெரிந்து கொண்டு விட்டேன். நான்செய்யும் எந்த காரியமும் எனக்கு சந்தோஷத்தை தருவதோடு மற்றவர்களுக்கும் துளியாவது சுகத்தை, சந்தோஷத்தை தரட்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. நான் படித்து எழுதும் பதினெட்டு இருபது மணி நேரமும் ஒரு வலியாக,சுமையாக தோன்றவில்லையே. எல்லை இல்லா இன்பத்தை அல்லவோ தருகிறது.எனக்கு நண்பர்கள் பல ஆயிரத்தைதாண்டிவிட்டார்களே. இதனால் தானோ? சந்தோஷம் பகிர்வதால் குறையா மல் அதிகரிப்பது வாஸ்தவம் தான்.புரிந்து கொண்டு விட்டதால் அந்த ரஹஸ்யத்தை உங்களிடமும் சொல்கிறேன். நோ fees !