அருணாசல அஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN
அஷ்டகம் 4-8.
4 இருந்து ஒளிர் உனை விடுத்து தெய்வம் அடுத்திடல் விளக்கு எடுத்து இருட்டினை அடுத்திடலே காண். இருந்து ஒளிர் உனை அறிவு உறுத்திடற்கு என்றே மதம் தொறும் வித வித உருவாய் இருந்தனை. இருந்து ஒளிர் உனை அறிகிலர் எனில், அன்னோர் இரவியின் அறிவு அறு குருடரே ஆவார். இணையறும் அருண மா மலை எனும் மணியே, எனது உளத்து இரண்டு அற ஒன்றாய் இருந்து ஒளிர்.
”அருணகிரியே , எதிரே மலை போல் நின்று ஹ்ருதயத்தில் ஆத்ம ஒளிவீசும் (‘போல’ என்ன? நீயே ஞானமலை தானே),உன்னை மறந்து விட்டு வேறு எங்கோ எவரையோ கடவுள் என தேடுவது எதைப் போல் தெரியுமா? விளக்கை கையில் எடுத்துக்கொண்டு இருட்டை தேடுவது மாதிரி. ஞானப்ரகாசத்தை ஒளிமயமாக வழங்கவே, நீ ஒவ்வொரு மதத்திலும், தத்துவத்திலும் நம்பிக்கையிலும் ஒளிவீசுகிறாய். மனதில் ஒளிரும் ப்ரம்ம ஞானமே, உன்னைத் தெரியவில்லை என்றால், அவன் சூரியனை அறியா குருடன் என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு நொடியும் என் உள்ளத்தில் ஒளிவீசும் ஞான சிகரம் நீ.
5 ” மணிகளில் சரடு என உயிர்தொறும் நானா மதந்தொறும் நீ தான் ஒருவனா மருவினை. மணி கடைந்து என மனம் மனம் எனும் கல்லில் மறு அற கடைய நின் அருள் ஒளி மேவும். மணி ஒளி என பிறிது ஒரு பொருள் பற்றும் மரு உறல் இலை. நிழல் படி தகட்டின் விண்மணி ஒளி பட நிழல் பதியுமோ? அருண நல் ஒளி மலை, உன்னின் மறு பொருள் உண்டோ?
மணிகளை மறைத்து அதன் உள்ளே இணைத்து நிற்கும் கயிறு,கம்பி போல தான் அருணாசலா, நீ ஒளிவீசுபவன். உன்னை ஒவ்வொரு மதமும் தத்துவமும், நம்பிக்கையும் வெவ்வேறு பெயரில் அறிந்தால் தான் என்ன? தேய்த்து தேய்த்து கல்லை ஒளிவீசச் செய்வது போல, கல் மனத்தை கடைந்து செதுக்கி, தேய்த்து அதன் குறைபாடுகளை நீக்கி, உன்னுடைய ஆத்ம ஒளி வீச செய்யவேண்டும். பாலிஷ் செய்யப்பட வைரக்கல் போல் உலக விவகாரங்கள் இல்லாமல் மனம் பண்படும். எதிலும் அப்புறம் பற்று கொள்ளாது. ஒளி இல்லாமல் நிழல் விழுமா? உன்னை அன்றி வேறே எது ஆத்ம ஞானம் தருவது?
6 அறிவு ஒளி உளமே நீ ஒரு பொருள் உண்டு. உனில் அலது இலா அதிசய சத்தி உளது. நின்று அணு நிழல் நினைவு நிரை அறிவோடே நிகழ்வினை சுழலில், ஒர் சில்லால் நின்றிடும் நிழல்படம் நிகர், நிழல் சக விசித்திரம் உள்ளும் கண் முதல் பொறி வழி புறத்தும் அந் நினைவு ஒளி ஆடி கண்டன. அருள் குன்றே, நின்றிட சென்றிட, நினை விட இன்றே.
இருப்பது ஒன்று, ஞானத்தை மலரச்செய்யும் ஹ்ருதயம், அதில் உறையும் நீயே ஸர்வ சக்தி கொண்ட எல்லாமும் ஆவாய். மனத்தில் எண்ணற்ற எண்ணங்கள் மத்தாப்பூ சுடர் மாதிரி தோன்றி மறையும், சுழலும். மனம் கண்ணாடி உலகத்தை பிரதிபலிப்பது. உள்ளும் புறமும் ஓடியாடும் இடைவிடா தோற்றங்கள். அருணாசலா , உன்னைப்போல் அசைவற்று என் ஹ்ருதயம் மனத்தின் ஓட்டத்தின் மாறுபாடுகளுக்கு இடம் கொடாமல் விலக்கட்டும் .
7. ‘அகம் எனும் நினைவு இன்று எனில், பிற ஒன்றும் இன்று. அது வரை, பிற நினைவு எழில், ‘ஆர்க்கு?’, ‘எற்கு’, ‘அகம் உதி தலம் எது?’ என ஒன்று. உள் ஆழ்ந்து உள தவிசு உறின், ஒரு குடை நிழல் கோவே. அகம் புறம், இரு வினை, இறல் சன்மம், இன்பு துன்பு, இருள் ஒளி எனும் கனவு இன்று. இதய மன்று அகம் அசலமா நடமிடும் அருணமலை எனும் எலை அறும் அருள் ஒளிக் கடலே.
”நான்” எனும் எண்ணம் இல்லை என்றால், மற்ற எந்த எண்ணமும் இல்லை. அதுவரை தோன்றும் மற்ற எண்ணங்கள் யாரை சார்ந்தவை? எங்கிருந்து ”நான்” தோன்றும்? உள்ளே ஆராய்ந்து தேடி, ஹ்ருதய பீடத்தை கண்டுபிடித்தால் அதில் உட்கார்ந்திருக்கும் சக்கரவர்த்தி ஆத்மா நீயே, ஞானம் எனும் ஒரு குடைக்கீழ் ஆள்பவன். உன்னை சரணடைந்தால், இரட்டைகள், பிறப்பு இறப்பு, சுக துக்கம், இருட்டு வெளிச்சம், நல்லது,கெட்டது , தீமை, நன்மை,ஸத் அஸத் கர்மாக்கள், போன்றவை, உள்ளும் புறமும் என்னை தீண்டாது. எதுவுமே கிடையாது. என் ஹ்ருதயத்தில் அருணகிரி, அருணாசலம் என்ற ஒரே ஞானம் மட்டுமே ஒளிவீசும்.
8 ”கடல் எழும் எழிலியால் பொழிதரும் நீர்தான் கடல் நிலை அடைவரை தடை செயின் நில்லாது. உனில் எழும் உடல் உயிர் உனை உறு வரையில் உறு பல வழிகளில் உழலினும் நில்லாது. இட வெளி அலையினும் புள்ளுக்கு நிலை இலை; நிலம் அலது இடம் இலை; வரு வழி செல்ல கடன். அருண பூதரனே, உயிர் வரு வழி சென்றிட, இன்பக் கடல் உனை மருவிடும்.
மேகங்கள் நீரை மழையாய் பொழியும், கடலை அடையும், கடலிலிலிருந்து பொங்கும். அது போல அருணாசலா, அருணகிரி, உன்னிடமிருந்து ஆத்மா என்னில் பொங்கட்டும். வழியில் எங்கெங்கோ சுற்றினாலும் என் மனம் உன்னை அடைந்தபின் மயங்காது. எங்கெங்கோ ஆகாயத்தில் பறந்தாலும் பிறவிக்கு அங்கே இளைப்பாற நிற்கவோ, தங்கவோ, உட்காரவோ இடம் உண்டா? வந்த வழியே தானே அது திரும்ப வேண்டும். அருணாசலமே , எங்கு திரிந்தாலும் ஆத்மா உன்னிலிருந்து புறப்பட்டு உன்னிடமே வந்து சேரும்போது விளையும் ப்ரம்மானந்தத்தை எப்படி சொல்வது எழுதுவது.