பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
நண்பன் சுந்தர ராம மூர்த்தி – நங்கநல்லூர் J K SIVAN
மஹா பெரியவா அருளுக்குப் பாத்திரமானவர்களில் ஒருவர் என் என் நண்பர் காலஞ்சென்ற சுந்தர ராமமூர்த்தி. சமஸ்க்ரிதம், தமிழ், பெங்காலி, ஆங்கிலம்,ஹிந்தி, அனைத்திலும் எழுத படிக்க தெரிந்தவர். சிறந்த அறிஞர். பம்பாய்,கல்கத்தாவிலெல்லாம் பெரிய தனியார் கம்பெனியில் உயர்ந்த உத்யோகத்தில் இருந்தவர். சக்தி உபாசகர். ஸ்ரீ வித்யா உபாசனையில் சிறந்தவர். தினந்தோறும் ஆறு ஏழு மணி நேரம் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், நவாவரண, ஸ்ரீ சக்ர மந்த்ர உபசார, சாஸ்த்ரோக்தமான பூஜை செய்து விட்டு மத்யானம் ரெண்டு மணிக்கு மேல் சாப்பிடுபவர். இன்னொரு முக்கிய விசேஷம். மஹா பெரியவா பக்தி சிரத்தையோடு மதித்து வணங்கிய பருத்தியூர் க்ரிஷ்ண சாஸ்திரிகள் பேரன். உடம்பு பூரா விபூதி ருத்ராக்ஷ மாலைகளோடு தான் அவரைப் பார்க்கலாம். ஓவியர். மஹா பெரியவாளை , ஓவியம் வரைந்து மகிழ்வித்தவர். ம்ருது பாஷிணி. அவருடைய அனுபவம் ஒன்றை அவரே சொல்ல கேட்போம்.
”நான் காலேஜில் படித்துக் கொண்டிருந்த சமயம், லூதியானா ஷால் விற்கும் கம்பெனி ஒன்றிலிருந்து எனக்கு ஒரு
BOX CAMERA பரிசாகக் கிடைத்தது. முதன்முதலாகப் பெரியவாளையும், புதுப்பெரியவாளையும் போட்டோ பிடிக்க
வேண்டும் என்ற ஆசையில் பிலிம் போட்டுக் கொண்டு ஸம்ஸ்கிருதக் கல்லுரிக்குப் போய் விட்டேன்.புதுப் பெரியவாளை (ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்) போட்டோ பிடிப்பது எளிதாக இருந்தது.
அனால், பெரியவாளிடம் போன போது, “நீ தான் சைத்ரீகனாயிற்றே; என்னை சித்திரமாக வரை, பிறகு போட்டோ பிடிப்பது
பற்றிப் பார்க்கலாம்” என்று கூறி விட்டார். அந்த நிலையில் பெரிதும் ஏமாற்றமாகவே இருந்தது. உற்சாகம் இருக்கவில்லை.
பலஆண்டுகள் கழிந்தன. எனக்கும் திருமணமாகி விட்டது. ஒருநாள் பழைய சமாச்சாரங்களை எல்லாம் பேசிக்
கொண்டிருந்தபோது, இதைப் பற்றி பேச்சு எழுந்தவுடன், என் மனைவி, “பெரியவாள் சொல்லியும் நீங்கள் எப்படி அவர்
சித்திரத்தைப் போடாது இவ்வளவு நாள் இருந்தீர்கள்” என்று கூறி உடனே ஒரு படத்தையும் போட வைத்தாள்.கலைஞனுக்கு முதல் படம்தான் கஷ்டமே தவிர பிறகு உற்சாகம் வந்துவிடும்.
அன்று ஆரம்பித்து இன்று வரை பல ஓவியங்களை அடியேனால் பெரியவாளின் அநுக்ரஹத்தால் போட முடிந்தது.
ஒவ்வொரு வருஷமும் போட்ட படங்களையெல்லாம் பெரியவாளிடம் கொடுத்து ஆசிகளைப் பெற முடிந்தது.
ஆனால் போட்டோ பிடிக்க மட்டும் இன்று வரை பெரியவாளின் உத்தரவு கிடைக்கவில்லை.
ஒரு தடவை பெரியவாளின் படங்களைக் கொடுக்க காஞ்சிபுரம் போனபோது ஸ்வாமிகளிடம், “இதையெல்லாம்
போட்டு வைத்திருக்கிறேனே தவிர இவற்றை என்ன செய்வது என்று தெரியவில்லை. பல பேர் கண்காட்சியாக,
காமகோடியின் பெயர் விளங்கும் இடங்களில் வைக்கலாம் என்கிறார்கள். பெரியவாள் உத்தரவு எப்படியோ அப்படியே
செய்கிறேன்” என்று விண்ணப்பித்துக் கொண்டேன்.
“செய்யலாமே” என்ற பெரியவாள் பிறகு அதைப் பற்றியே பிரஸ்தாபிக்காமல் வந்திருந்த பக்தர்களிடம் பல்வேறு
விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எங்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு அம்மாள், “பெரியவாள் நீங்கள் கேட்டதை மறந்து போய்விட்டார்
போலிருக்கு, மறுபடி கேளுங்கள்” என்றார். அது ஸ்வாமிகள் காதிலும் விழுந்திருக்க வேண்டும்.
ஏனெனில் எங்கயோ பின்னால் நின்று கொண்டிருந்த விதந்து (கைம்பெண்) ஆகிவிட்ட ஒரு வயதான அம்மாளைக் கூப்பிட்டு, “நீ வற்றிலைச் சுழியிலே இன்னார் பெண் தானே, ஐந்து வயதாக இருந்தபோது, உன் அப்பாவுடன் வந்திருக்கிறாய். உங்கள் ஊரில் எல்லோரும் சிருங்கேரியைச் சேர்ந்தவர்கள். உங்கள் அப்பா மட்டும் இந்த மடத்துக்கு விசுவாசமாக இருந்தார். உன் பிள்ளை எப்படி இருக்கிறான்? ” என்று விசாரித்தார்.
அந்த அம்மாள் தன் ஐந்தாவது பிராயத்துக்குப் பிறகு மடத்துக்கு அன்றுதான் வந்திருக்கிறார். நெஞ்சுருகிப் போய்விட்டார்.
“என்னை இந்தக் கோலத்திலும் அடையாளம் கண்டு விசாரிக்கிறாரே! இவருக்கா ஞாபகமறதி வரும் ?” என வியந்தார்.
கடைசியில் அன்று மாலை பெரியவாள் நான் கொண்டு போயிருந்த சித்திரங்களை எல்லாம், காலடி கீர்த்தி ஸ்தம்பத்தில்
நிரந்தரக் கண்காட்சியாக வைக்கப்பட வேண்டும் என முடிவு செய்தது, அவர் இந்த சிறியவனையும் எவ்வளவு தன் கருணையால் உயர்த்தினார் என்பதையும், இந்த விஷயத்துக்கு எவ்வளவு தீர்க்கமாக நாளெல்லாம் ஆலோசித்திருக்கிறார் என்பதையும் காட்டியது.”++
சுந்தரராமமூர்த்தி அடிக்கடி என்னைக் கூப்பிட்டு பேசுவார். பெரியவாளை பற்றி,லலிதாம்பிகை,அம்பாளை பற்றி பல கோவில்களில் அவள் தரிசனத்தைப் பற்றி தான் அடிக்கடி பேசுவோம். என்னைப் பாடச் சொல்லி கேட்பார். கடைசியாக மறைவதற்கு முன் ஒரு பெரிய தடிமனான புத்தகம் எழுதினார் . அது அவர் தாத்தா பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் பிரசங்கம் பண்ணிய ரஸ நிஷ்யந்தி பற்றிய அற்புத நூல். ”ரஸ ஆஸ்வாத தரங்கிணி” என்ற பெயர் கொண்ட புத்தகம். அதை அவர் எழுதும்போது அடிக்கடி அது பற்றி விவாதிப்போம், பேசுவோம்.
புத்தகம் அச்சில் வெளிவரும் முன்பே சுந்தரராமமூர்த்தி மறைந்து விட்டார். அதில் விஸ்வாமித்ரர் தசரதனிடம் போய் ”உன் மகன் ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு”என்று கேட்கும்போது தசரதன் எப்படி என்கண்மணி 16 வயதான பாலகன் ராமனை காட்டுக்கு ராக்ஷஸர்களோடு யுத்தம் பண்ணி விஸ்வாமித்ரர் யாகத்தைக் காவல் காக்க அனுப்புவது என்று திணறும்போது, வசிஷ்டர் தைர்யம் சொல்லி விஸ்வாமித்ரரோடு ராமனை அனுப்ப சொல்கிறார். அப்போது விஸ்வாமித்ரர் தசரதனிடம் நூறு வித விஷயங்களை எடுத்து சொல்லி ”ராமன் யார் என்று உனக்குத் தெரியாது எனக்கு தெரியும் ”அஹம் வேத்மி” என்று சொல்லும் அற்புத விஷயம். அதை நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். மீண்டும் எழுதுகிறேன்.
சுந்தர ராமமூர்த்தி எழுதிய புத்தகம். ரெண்டு பாகங்கள். 2000த்துக்கு மேல் பக்கங்கள் கொண்ட வெயிட்டான புத்தகங்கள். ரூபாய் 5000 நன்கொடையாக கொடுப்பவர்களுக்கு வழங்கப்படும் புத்தகம். கிடைக்கும் நன்கொடை பூராவும் மஹா பெரியவா மணிமண்டபம் அமெரிக்காவில் கட்டப்படும் கைங்கர்யத்துக்கு சேர வேண்டியது என்று முடிவெடுத்தவர் . அவர் விருப்பப்படியே அவர் மகன் அவர் மறைவுக்கு பின்னர் ஒருநாள் நங்கநல்லூர் வந்து ”அப்பா உங்களுக்கு ஒரு செட் புத்தகம் கொடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார். இந்தாருங்கள் ”என்று ரெண்டு பாகங்களையும் அளித்தார்.எவ்வளவு தூய நட்பும் பாசமும் என்னிடம் என்று வியக்கிறேன். நினைக்கும்போதே என் நண்பனின் நினைவு கண்களை நீரால் குளிப்பாட்டி கன்னத்தில் வழிகிறது. என்னைக்காட்டிலும் ஒரு சில வருஷங்கள் இளையவர். இருந்தாலும் எத்தனையோ மடங்கு என்னைக்காட்டிலும் உயர்ந்த மஹா பெரியவா பக்தர். ஞானி. ”சுந்தரராமா உன்னை மீண்டும் எப்போது காண்பேன்?”