ராமாயண ரஹஸ்யம்…இதுவா..!! நங்கநல்லூர் JK SIVAN
ராமாயணம் என்றால் நமக்கு அது ராமரைப் பற்றிய கதை என்று தான் தெரியும். வால்மீகி முனிவர் எழுதியது, அப்புறம் தமிழில் கம்பர் எழுதியது. அவ்வளவு தானே? வால்மீகிக்கு முன்பே பல ரிஷிகள் ராமனைப் பற்றி சொல்கிறார்களே. ராமன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் தானே வால்மீகி அவருக்கு முன்பு யார் எப்படி சொல்லி இருக்க முடியும் என்று யோசிப்பதில்லை.
ராமாயணம் என்பது வானசாஸ்திரம் என்பதால் அநேகர் பல காலம் முன்பே அறிந்தவர்கள் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். ரா என்றால் ஸம்ஸ்க்ரிதத்தில் உஷ்ணம், வேகம், சூரியன் என்று அர்த்தம். மா என்றால் அளவு. அயனம் என்றால் ஒரு பாதையில் பயணம். அசைவு. சூரியன் வடதிசையில் பயப்பதை உத்தரயணம், தெற்கே நகர்வதை தட்சிணாயனம் என்று சொல்கிறோமல்லவா?
எகிப்தில் ரா என்றால் ஒரு கடவுள். சூரியனை ப்போல ஒளி மிகுந்த கடவுள்.
சூரியனின் ஒளிப்பயணம் தான் ராமாயணம் என்று அவர்கள் கருத்து. சூரிய சித்தாந்தம் என்கிற நூலில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் நீலகண்ட சோமயாஜி என்பவர் இது பற்றி எழுதியிருக்கிறார்.
கோள்தாத்யாயம் என்கிற அத்தியாயத்தில் நாலு நகரங்கள் பூமத்திய ரேகை நேர்கோட்டில் 90 டிக்ரீ சுழற்சியில் யவகோடி, லங்கா, ரோமகா , சிந்தபுரி என்ற பெயரில் இருந்தது என்கிறதாம்.
அட, ராமாயணத்தில் லங்கை வந்துவிட்டதே. மஹா பாரதத்தில் சகரர்கள் பூமியைத் தோண்டும்போது எட்டு தீவுகள் தென்பட்டதாம். ஸ்வர்ண ப்ரஸ்தம், சந்த்ர சுக்லம், ஆவர்த்தனம், ரோமானகா, மந்தாருன்ஹா,பஞ்சஜபியம் , சிம்ஹளம், லங்கா என்று அவற்றுக்கு பெயர். அட, இதோ பாருங்கள் லங்கைத் தீவு வந்துவிட்டது. சிம்ஹளம் இலங்கை ரெண்டுமே இப்போது தெரிந்த சிங்களம் இலங்கை என்ற ஒரே விஷயம் தான். ராமாயணத்தில் எங்குமே ராவணன் சிங்களன் என்றோ, அதை ஆண்ட ராஜா என்று சொல்லவில்லையே. லங்காபுரி, லங்கேசன் என்ற வார்த்தைகள் தான் தெரியுமே..
ராமன் நிறம் வெள்ளையல்ல, கருப்பு. அவன் தெற்கே பிறந்த ராஜா, தமிழன் என்கிறார் ஒருவர். எங்கே எதைப் படித்தாரோ இதைச் சொல்ல. நிரூபணம் எதுவும் இல்லை. ராமன் எந்த மொழியில் அனுமன், சுக்ரீவன், வாலி, ராவணன், போன்றவர்களுடன் பேசினான்? என்று ஒருவர் மண்டையைக் குடைந்து கொண்டு ஆராய்ச்சி பண்ணி எல்லோருக்குமே தமிழ் தான் தாய் மொழி என்று அனுமானம் பண்ணுகிறார்.
தெற்கே யாரும் ஸமஸ்க்ரிதம் பேசவில்லையே ,பேசியிருந்தால் ஒரு கால்வாசி பேராவது இன்றும் அந்த மொழியில் பேசிக்கொண்டிருப்பார்களே என்று அவர் தீர்மானம். சமஸ்க்ரிதத்தை விடுங்கள். ஹிந்தியே கூட யாரும் அதிகம் பேசவில்லையே இன்னும்.
”அதெல்லாம் தப்பு. ஸமஸ்க்ரிதம் தான் எல்லாமொழிகளுக்கும் தாய்”. என்றும் சொல்கிறோம்.தமிழ் 8000 வருஷங்களுக்கு முன்பு கூட பேசப்பட்டிருக்கிறது. அந்த தமிழ் வேறே நாம் பேசும் இந்த தமிழ் வேறே என்று தோன்றுகிறது. மெசபொடே மியா, எகிப்த், தென்னாபிரிக்கா மேற்கு ஐரோப்பா, போன்ற இடங்களில் தமிழர் இருந்திருக்கிறார்கள் என்கிறார் ஒரு சரித்திர ஆராய்ச்சிக்காரர். தமிழர்களுக்கு தென்கிழக்கு ஆசியா,ஜப்பான் நாட்டு தொடர்பு இருந்திருக்கிறதாம்.
கொலம்பஸ் மேற்கிந்திய தீவுகளை கண்டுபிடிக்கும் முன்பே சோழர்கள் பெரு எனும் நாட்டை அறிந்தவர்கள்.அங்கே வாழ்ந்த பழங்குடி மக்கள் இன்காஸ் என்பவர்கள் சோழ பரம்பரை என்று ஒரு ஆச்சர்ய குண்டு போடுகிறார் நீலகண்ட ஸாஸ்திரியார் . பெரு எனும் நாட்டில் சிசோ எனும் சூரிய கடவுள் இருக்கார். நம் ஊர் கொனாரக் சூரிய கோவில் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் குடியேறிய தமிழர்கள் ரகுகுல மாணிக்கம் என்று தம்மை அடையாளம் காட்டுகிறார்கள். ரகு வம்சம். ராமர் பரம்பரை. சிபி தான் செம்பியன் எனும் சோழ வார்த்தை. தசரதனின் முன்னோர்கள். முசு குந்தன் தான் சோழ ராஜா முச குந்த சோழன்.ரெண்டாம் தமிழ் சங்க காலத்தவன். ஆகவே ராமன் சோழ ராஜா. சூர்ய வமிசம். தமிழ் ஸம்ஸ்க்ரிதம் ரெண்டும் தெரிந்தவன்.
இதெல்லாம் அறியும்போது ஒன்று நிச்சயம், நாம் அறிந்த சரித்திரம் வெள்ளைக்காரர்கள் காலத்தில் எழுதியது. மேற்குக்கு கிழக்கு தாழ்ந்தது என்ற நோக்கத்தில் எழுதி இருக்கலாம் என்கிறார்கள். ஏதுவானால் என்ன. சில விஷயங்கள் படிக்கும் போது இப்படியும் நடந்திருக்கலாமோ என்று நம்பவைக்கிறது. அவரவர் யோசித்து சிந்தித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.
இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.