உன்னை நினைக்கையிலே — நங்கநல்லூர் J K SIVAN
பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் வாழ்ந்த காலத்தில் டீவியோ , விடியோவோ இல்லை. சேதி சொல்ல பத்திரிகையும் இல்லை. நடந்ததை பிற்காலத்தில் ஜெயதேவர், சூர் தாஸ் சைதன்ய ப்ரபு , போன்ற மஹான்கள் மனதால் கண்டு கழித்து தான் நாம் ரசிக்கிறோம். ஒரு சம்பவத்தை நாமும் மனதில் கண்டு களிப்போம் .
அந்திப்பொழுது. மந்த மாருதம் வீச, யமுனை நதியின் ப்ரவாஹ அலைகள் சலசலவென்று ஒலிக்க , மான்கள் துள்ளி ஓடி விளையாடுவதை பார்த்துக் கொண்டு ராதா அந்த கதம்ப மரத்தடியில் வழக்கமாக உட்காரும் இடத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்தாள். கிருஷ்ணன் இனி வரமாட்டான் என்று தோன்றியது.
”கிருஷ்ணா, நீ வரமாட்டாயா?”பெருமூச்சு விட்டாள் . சரி வீட்டுக்குப் போகலாம் என்று எழுந்தாள்.
அப்போது இமை கொட்டாத அர்த்த புஷ்டி நிரம்பிய இரு விழிகள் தன்னைத் துளைப்பதை உணர்ந்தாள், தனக்குள் சிரித்தாள். கால்கள் விலகிச் செல்ல முயன்றாலும் இதயம் ”நில்” என கட்டளையிட, மனம் தடுத்து, தன் வயமிழந்து அவள் கால்கள் அவளை வழக்கமான அந்த மரத்தடிக்கு நகர்த்தியது.
” கிருஷ்ணா, ஏன் என்னை அழைத்தாய்,?”
” நான் எங்கே உன்னை அழைத்தேன்?”
” என்னை உற்றுப் பார்த்தாயே”
”ஆம். ராதா, உன்னை பார்த்தேன் ரசித்தேன். அதன் பெயர் அழைப்பா?”
” நீ என்னைப் பார்ப்பதன் அர்த்தம் என்னோடு ஏதோ பேசவேண்டும் என்று தானே ? அது தான் கேட்கிறேன் எதற்காக என்று ?
“நினைத்தேன் வந்தாய் நூறு வயது” என்பார்களே. அட , உன்னை நினைத்தேன் வந்தாயே என்று ஆச்சர்யமாக பார்த்தேன்”
” சரி கிருஷ்ணா, சீக்கிரம் சொல் என்ன விஷயம்?”
”உன்னைப் பார்ப்பதற்கோ, நினைப்பதற்கோ, பேசுவதற்கோ விஷயம் ஏதாவது இருந்தாக வேண்டுமோ? ”சொல்லத் தான் நினைக்கிறேன் ,ஆனால் முடியாது “
”ஏன் “
” உன்னோடு இருந்த பல ஜன்ம சமாசாரம் ஒரு பத்து வினாடியில் சீக்கிரம் சொல் என்றால் எப்படி சொல்ல முடியும்? . அதனால் தான் முடியாது என்றேன்”
”சரி, கிருஷ்ணா கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசு. கேட்கிறேன் !”.
கிருஷ்ணன் எதையோ தேடுவதை பார்த்தாள் ராதை.” கிருஷ்ணா, என்ன தேடுகிறாய்?
”என் மனதில் இருக்கிறாய் என்றேன். ஆனால் நீ என் எதிரே நிற்கிறாய், ஓஹோ, மனதிலிருந்து எழுந்து வெளியே வந்து விட்டாயோ? அல்லது ஒருவேளை மனதிலும் இருக்கிறாயோ என்று தேடுகிறேன் ,பார்க்கிறேன்”
”கிருஷ்ணா, நான் உன் எதிரில் நின்றாலும் என் மனத்தில் நீ இருக்கிறாய், என் மனம் உன் மனம் இரண்டுமே ஒன்று தானே. ஆகவே உன் மனத்தில் தேடாதே என் மனதில் தேடு அங்கே என்னோடு நீயும் இருப்பாய்” என்றாள் ராதா
“வாஸ்தவம் ராதா. உனக்கு ஒரு ரகசியமோ உண்மையோ தெரியுமா?”
” நீயே சொல்லேன்”
”நான் என் புல்லாங்குழலை ஏன் கையிலே எப்போதும் வைத்துக் கொண்டு ஊதுகிறேன்?
”இதென்ன கேள்வி கிருஷ்ணா, உன்னை புல்லாங்குழல் இன்றி நினைத்துக் கூட பார்க்க முடியுமா?”
”அது தான் என் ரகசியமே ராதா. அதில் நான் ஊதினால் உலகமே மயங்குகிறதே! அதன் காரணம் தெரிந்தால் சொல்”
”கிருஷ்ணா, நீயே கெட்டிக்காரன். எல்லாமே சரியாக சொல்பவன். செய்பவன். ஆகவே நீயே சொல்லேன் அந்த காரணத்தை”
”ராதா, என் மனதில் இதயத்தில் நீ என்றும் எப்போதும் இருக்கிறாய் அல்லவா?. அதனால் என் மூச்சுக் காற்று உன் நினைவாலே இயங்குகிறது அல்லவா? . எனவே என் மூச்சுக் காற்றை புல்லாங்குழலில் நான் கலந்து ஊதும்போது நீதான் அந்த இசை அல்லவா? என்னை மகிழ்விக்கும் நீ, எல்லாம் நானாகவே இருப்பதால் எல்லா வற்றையும் எல்லோரையும் அதிலிருந்து வேணு கானமாக , இசையாக மகிழ்விக்கிறாய். இப்போது புரிகிறதா?
”ஆஹா, கிருஷ்ணா! … உன் அன்பு, பாசத்தில் கட்டுண்டது நான் மட்டுமல்ல இந்த மூன்று லோகங்களும் கூட . ”
”இப்போது புரிகிறதா நான் உன்னை அழைக்கவில்லை என்று சொன்னது…”
”மீண்டும் சொல்லேன். புரிந்து கொள்கிறேன்”
”என்னுள்ளே மூச்சுக் காற்றாக நீ இருக்கும்போது நான் உன்னை எதற்கு எங்கோ இருப்பதாக கருதி உன்னை அழைக்க வேண்டும்?”
கிருஷ்ணன் ராதையை அருகில் அமர்த்திக் கொண்டான். மயில்கள் மான்கள் கன்றுக் குட்டிகள், பசுக்கள் அவர்களை நெருங்கி அவர்கள் மேல் உரசிக்கொண்டு மடியில் தலை வைத்து பாசத்தோடு பார்த்தன.
புல்லாங்குழலில் பிறந்த கானம் ”காற்று வெளியில் கண்ணம்மாவுடன் கலந்து, ”காற்றினில் ஒரு கீதமாக எங்கும் வியாபித்தது. பூரண சந்திரனும் அதைக் கேட்டு மயங்கி நகராமல் அவர்கள் தலைக்கு மேல் நேராக நின்றான். அவன் ஒளியை நீலநிற மேகங்கள் கலைக்காமல் தூரவே நின்று கிருஷ்ணனை ரசித்தன. அதே வர்ணக்காரன் அல்லவா? ஒரு நெருங்கிய பாசம்.
இப்படி எத்தனையோ மாலை நேர, முன்னிரவு ஆனந்த அனுபவங்கள், பிருந்தாவனத்தில், இன்றும், இப்போதும்,எப்போதும் கண்ணனையும் ராதாவையும் இணைப்பதை நினைத்து வணங்கி கண் மூடி யோசித்தால் நமக்கும் தெரியவரும்.
உங்களுக்கே தெரிந்து விட்டால் பிறகு நான் எதற்கு எழுதவேண்டும். அவசியம் இருக்காதே? யோசித்து கற்பனா உலகில் சஞ்சரியுங்களேன்.