சிவ வாக்கியர் – நங்கநல்லூர் J K SIVAN
”புரியாமலே இருப்பான் ஒருவன்”அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்”
இதுவரை எத்தனையோ படித்தாய் விட்டது. நிறைய கேட்டாகிவிட்டது. ஆனால் இன்னும் புரியவில்லை. அதுதான் இறைவனா?. யோசிக்க முயல்வதில்லை. யோசிக்கலாமே என்ற எண்ணம் உள்ளே அடிவாரத்தில் தலை எடுத்தாலும் சரி அப்பறம் பார்ப்போம் என்று அதை அப்படியே அமுக்கி கீழே தள்ளுகிற ஸ்வபாவம் விஸ்வரூபம் எடுக்கிறது.
எங்கோ ஆழ் மனதில் அப்பப்போ யார் அவன், அவனைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற மெல்லிய ஆர்வம். மீண்டும் கேட்பது, படிப்பது ரசிப்பது, மறப்பது. இது என்னையும் சேர்த்து அனேகர் வாழ்வில் தொடர்ந்து நடந்து வருகிறதே.
பல ஆயிரம் வருஷங்களுக்கு முன் — அவரைப்பற்றி இன்னும் சரியாக தெரியக்கூட இல்லை. காலமோ, இயற்பெயரோ, ஊரோ தெரியாத ஒரு சித்தர் . அவரைப் பற்றி யார் யாரோ என்னன்னவோ சொல்கிறார்கள். நாத்திகர், சைவராக இருந்து வைணவரானவர் . அவர் தான் பின்னால் திருமழிசை ஆழ்வார் என்று. ஒரே confusion. வேண்டாம். நாம் அதற்குள்ளே எல்லாம் போகத் தேவையே இல்லை.
”ஆணியடிச்சாப் போல” என்பார்கள். ”பொட்டுலெ அறைஞ்சாப் போல பளிச் சென்று ” என்று சொல்கிறோம். சரியான வார்த்தை. அது உண்மைதான். சிவ வாக்கியர் பாடல்களில் இது தெளிவாகத் தெரியும். புரியும். இதை ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளே அலசினால் பளிச்சென்று புரிபடும். புது அர்த்தமும் கிடைக்கும்.
நீங்களே படியுங்கள்:
”கோயிலாவது ஏதடா ? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே”.
கோயில் கோயிலாக போகிறாயே. இதுவரை எத்தனை குளங்களில் ஸ்நானம் செய்து புண்ணியம் தேடியிருக்கிறாய். எங்கெங்கோ சென்று திரிந்து அலைந்து சலித்து களைத்து கோவிலையும் குளத்தையும் நாடினாயே . அந்த கோவில்கள் குளங்கள் எல்லாம் உனக்குள்ளேயே இருப்பதை என்றாவது ஒரு நிமிஷம் நீ உணர்ந்ததுண்டா?. பிறந்தான் இறந்தான் என்று ஒவ்வொருவனைப் பற்றியும் பேசுகிறோமே, அதோ பார் நேற்று இருந்தது இன்று இல்லை என்று மாற்றங்க ளைப்பற்றி மணிக்கணக்கில் பேசுகிறோமே. அந்த மாற்றங்கள், பிறப்பு இறப்பு இவை யாவுமே மாயை. இருப்பது போல் தோன்றும் அது உண்மையிலேயே இல்லாதது என்று என்றாவது ஒப்புக்கொண்டதுண்டா?
”செய்யதெங்கி லே இளநீர் சேர்த்த கார ணங்கள்போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்த ர்முன்னம் வாய் திறப்ப தில்லையே”.
உன் கண்ணெதிரே நிற்கிறதே உயரமான தென்னை மரம். குலை குலையாக பச்சையும் பழுப்புமாக எத்தனை எத்தனை பெரிய இளநீர்கள் தொங்குகின்றன என்பதை தலை ஒடித்து அண்ணாந்து பார்க்கிறாயே. ஒரு விஷயம் யோசித்தாயா? யாரப்பா அவ்வளவு உயரத்தில் ஒவ்வொரு தேங்காயை கொண்டு போய் தொங்கவிட்டது? யார் அதன் உள்ளேயும் இனிமையான சுவையான இளநீரை நிரப்பியது? காரணம் ஏதாவது சொல்ல முடிகிறதா?. இது தான் இங்கேயும். என் மனத்தில் நான் அறியாமலேயே பிறந்தது முதல் என் இறைவன் என்னைக் கேட்காமலேயே என்னுள், என் மனத்தைக் கோயிலாகக் கொண்டு குடியிருக்கிறான். ஆனால் நான் ஏன் இன்னும் அவனைத் தெரிந்து கொள்ளவில்லை, புரிந்து கொள்ள வில்லை? புரிந்து கொண்டால் நான் அடுத்த கணமே மௌனமாகி விடுவேன். ஏன் தெரியுமா? என்னால் அந்த ஆச்சர்யத்தை அதிசயத்தைச் சொல்ல முடியாது. சொல்ல வார்த்தை கிடையாதே. அனுபவிக்கவே நேரம் போதாதே.
”என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே”
என் மனத்தில் அந்த பகவான் இருப்பதை நான் இது காலம் உணராமலேயே இருந்து விட்டேன். இந்த பிறவியில் மட்டும் அல்ல. எனது எத்தனையோ பிறவியிலும் கூட இது தான் என் நிலைமையோ? தெரியவில்லை. இப்போது தெளிவு பிறந்து விட்டதே. நான் நானில்லை. நான் அவன். என்னிலே அவனை இதுவரை யாராவது கண்டிருக்கிறீர்களா? என்னை விடுங்கள். உங்களிலேயே நீங்கள் அவனைக் கண்டதுண்டா? அப்படி மட்டும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே தானாக நின்ற, நிற்கும் அவனை அறிந்துகொண்டால் ……… மேற்கொண்டு என்னால் யோசித்துக் கூட பார்க்கமுடியாத கற்பனை இன்பம், ஆனந்தம் அல்லவோ இது.