THIRUMOOLAR – J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN
திருமூலர்

சிவனை  அர்ச்சிக்கும்  மந்திரப்  பூக்கள்
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென் றேத்திடு நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே.
பழைய கால  தமிழ்  கல்வெட்டுகள் போல  கண்ணுக்கு தெரிந்தாலும்   கருத்தை  உணரமுடியாத  எழுத்துக்கள். புரியாதவை. பழக்கமில்லாதவை.  அவற்றை யாராவது அறிஞர்கள் விளக்கிச் சொன்னால் தான்  நமக்கு  அதன் அருமை தெரிய வருகி றது.
 திருமந்திரத்தை  இயற்றி  உன்னைப்  போற்றிப்  பாடும்  எனக்கு  சிவபெருமானே  உன் திருவருள் வேண்டும். உன்கருணை வேண்டும். மாயம் கர்மங்கள் அகல வேண்டும்.  உன்னால் தானே  அவை  விலகும்.  ஜென்மம்  மரணம். துன்பம் ஏதுமில்லாத கடவுள்  நீ.       இந்திராதி தேவர்களைக்  காப்பவன்.  உன்னருளால் தான் உன்னையே  உணரமுடியும்.  நீ  மாசிலாமணி.  சகல உயிர்களுடன் உடன் நிற்பவன்.
 சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித்தாமரை யானே.

அப்பனே, சிவனே,  உனக்கு  இணையாக  வேறு எந்த தெய்வத்தைச்  சொல்ல முடியும்?  எங்கே தேடினாலும்  கிடைக்காதே. காணமுடியாதே.   அனைத்துலகங்களுக்கும் அப்பால்   ஜக ஜோதியாக   மினுக்கும்  பொன்னார் மேனியனே, செஞ்சடை மேல்   தீ வண்ணம்  போல  ஒளிவீசும் சந்திர சேகரன்.    சதா தவத்திலமர்ந்து  அளப்பரும்  சக்தி கொண்டவனே. மெய்யன்பர்களின் அன்பால் விளங்கும்  தாமரை  நெஞ்சங்களில் வாழ்பவனே  என்கிறார் திருமூலர்.
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர் 1புகு மாறறி யேனே.

சிவபிரானே, சகல உயிர்களாகவும்,  அவற்றின் உள்ளே  இருப்பவனாகவும்,  வெளியே  வேறாக  காட்சி தருபவனாகவும்  இருப்பவனே.   நீ எங்கும் நிறைந்தவன். உன் அருளும் துணையும் இன்றி வேறெதுவும் இயங்கக்  கூடியதில்லை.
 முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப்பாகின்ற போதகத் தானே.

மும்மூர்த்திகள்  ஆக்கல்  காத்தல்  அழித்தல்  எனும் தனித்தனி தொழிலே உடையவர்கள்.  எனினும் நீ  மூன்றும் ஒன்றானவன். நீ  முழுமுதல் கடவுள். மங்களம் தரும்  மகேஸ்வரன். ஈடு இணையற்றவன்.  எல்லா உயிருக்கும் உறுதுணையாக  அம்மையப்பன். தீயோரை அழித்து நல்லோரைகாப்பவன்.
 தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

காலாக்னியை விட   கடும் தீயை  உமிழ்பவன்.  அதே சமயம்  கருணை கொண்டு குளிர்ந்த நீர் போன்ற  அன்புள்ளம் கொண்டவன்.  அருளுடன்  அனைத்துயிரையும் இயக்கியாள்பவன். உன்னை,உன்னருளை  முழுமையாக  எவர்  அறிந்து உரைக்க முடியும்.? அறியவொண்ணா பேரருள்  நீ.  பக்தர்கள் நெஞ்சில் வாழ்பவன். மணி வாசகர் சொன்னது ஞாபகம் வருகிறது. தாயினும் நினைந்து  சாலப் பரிவுடன்  பாலூட்டுபவன்.  அணுவில் அணுவாகி  அண்டத்தில் பேரண்டமானவன்.
தொடரும் 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *