MUKKOODAL PALLU – J K SIVAN

நெஞ்சை அள்ளும் நாட்டுப்பாடல்   –    நங்கநல்லூர்  J K  SIVAN முக்கூடல் பள்ளு 

நேற்று  ஒரு  நண்பர்  முக்கூடல் பள்ளுவிலிருந்து  ஒருவரி  எழுதி இது எந்த பாடல், யார் இயற்றியது ? என கேட்டிருந்தார். அவருக்கு  அது முக்கூடல் பள்ளுவில் வரும்  வரி அதைப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன். எனக்கு முக்கூடல் பள்ளு வை ஞாபகப்படுத்தியதற்கு அந்த நண்பருக்கு நன்றி.
தமிழ் ஒரு பெரிய  கடல். அதில் எத்தனையோ வகையான  இலக்கியங்கள்  கலந்துள்ளது. அதில் ஒன்று  பள்ளு  என்ற வகை நாட்டுப் பாடல். கிராமியமானது. எளிதாக புரியும். காவடிச் சிந்து  மாதிரி  அதற்கென ஒரு காந்த சக்திகொண்ட  சந்தம் உண்டு. கேட்கும்போது சுகமாக இருக்கும்  படிக்கும்போது நாவில் இனிக்கும்.

 அக்காலத்தில் பல கிராமங்களில் இத்தகைய  பள்ளு  பாடல்கள்  வழக்கத்தில் இருந்தன. நமக்குத் தெரிந்து ஒரு  ப்ரபல பள்ளு   முக்கூடற்பள்ளு .   முக்கூடல்  கிராமம்  திருநெல்வேலிக்கு வடகிழக்கே உள்ளது.  சித்ரா நதி, கோதண்டராம நதி, ரெண்டும்  தாமிரபரணியில் கலப்பதால் முக்கூடல் என்று கிராமத்துக்கு பெயர்.  அந்த ஊரில்  உள்ள  கோவிலில்  பெருமாள்  பெயர்  அழகர். இன்னொரு பெயர்  செண்டு அலங்காரர்.  அவர்  மீது பாடப்பட்டது  முக்கூடல் பள்ளு.   என்னயினாப் புலவர்  என்பவர்  எழுதியது . அவருக்கு இன்னொரு பெயர்  வேளான் சின்னத்தம்பி. உண்மையிலேயே இவர் தான் இயற்றினாரா என்பதும் தெரியாமல் போய்விட்டது. முக்கூடலுக்கு  இப்போது  பெயர்  சீவலப்பேரி.  பாண்டிய ராஜா  மாறவர்மன் ஸ்ரீவல்லபன் கி.பி. 12- ஆம் நூற்றாண்டில் கட்டிய ஏரி ஸ்ரீவல்லபன் ஏரி   என்பது தான் உடைந்து சிதைந்து குறுகி  சீவலப்பேரி ஆனது..முக்கூடல் பள்ளு  17ம் நூற்றாண்டு காவியம்.   காவை வடமலைப் பிள்ளையன், ஆறை அழகப்ப முதலியார், திருமலைக் கொழுந்துப் பிள்ளையன் ஆகிய செல்வர்கள் முக்கூடற் பள்ளில் பாராட்டப்பட்டுள்ளனர். பள்ளர்கள்  என்ற  வகுப்பினர்  அப்பிரதேசத்தில் வாழ்ந்தனர்.   அவர்கள் வாழ்க்கை பற்றிய  பாடல்கள் பள்ளு.

முக்கூடல் பள்ளு வில்   ஒரு பள்ளன்  அவன் இரு மனைவியர் பாத்திரங்கள்.  மூத்த மனைவி வள் (முக்கூடற்பள்ளிபள்ளி) முக்கூடலைச் சேர்ந்தவள்,. வைஷ்ணவி.  இளைய பள்ளி (மருதூர்ப் பள்ளி) திருப்புடைமருதூரைச் சேர்ந்தவள். சைவத்தை சேர்ந்தவள். பள்ளன் அழகக் குடும்பன். பள்ளியர் இருவரும் தத்தம் ஊர் வளம் பாடுதல், மழை வேண்டுதல், பெருமழை பெய்தல், மூவாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்தல், விளைச்சல், அறுவடை, பள்ளன் இளைய பள்ளியுடன் மோகங் கொள்ளுதல், மூத்த பள்ளி பண்ணையாரிடம் புகார் கூறல், பண்ணையார் பள்ளனை ஏசல், இரு பள்ளியர்களுக்குமான பூசல், பள்ளியர் இருவரும் தமக்குள் சமாதானமாதல், பள்ளன் உடல் தேறுதல் மற்றும் மங்கல வாழ்த்துடன் முடிகிறது இதை நாடகமாக  நாட்டியமாக வெகுகாலம் மக்கள் மத்தியில்  சென்றடைந்து  ப்ரஸித்தமாகியது. இப்போது காணோம்.

மேலே வானத்தில்  கருப்பாக  மேகக்கூட்டம்  அலைகிறது. ஓஹோ மழை நாளைக்கு ஜோ என்று பெய்யப்போகிறது.  தெற்கே  ஈழப்பக்கத்திலுருந்து மழை மேகம் அசைந்து வருகிறது.  மேற்கு பக்கத்தில் மலையாள தேசத்திலிருந்து மின்னல் பளிச்  பளிச்சென்று விடாமல் கண்ணைப் பறிக்கிறது. ஓவென்று  பேரிரைச்சளுடன்  ரெண்டு நாளாக  குளிர் காற்று எலும்பை துளைத்து  உடம்புக்குள் செல்கிறது.  தென்மேற்கு  பருவக்காற்று மழை பற்றி சொல்கிறார்கள்  புரிகிறதா? காற்று  மழை மேகம் மட்டுமா பள்ளர்கள்  பார்க்கிறார்கள். வாய் ஓயாமல் சொறித் தவளைகள் மண்டை வெடிக்க ஒரே ஸ்வரத்தில் கத்துவது நிற்கவில்லை.தவளை கத்தினால்  மழை வரும்.  வயலில் எங்கு பார்த்தாலும் நண்டுகள்  சுறுசுறுப்பாக  வளை  தோன்றுகிறது. அது தானே அதன் வீடு. வானம்பாடிகளுக்கு மழை என்றால்  படு குஷி.  கீதம் இசைக்காமல் இருக்குமா? அழகர் கோவிலை ஒட்டி உள்ள  மாந்தோப்பு பண்ணை யில் அருகே உள்ள  சேரியில் பள்ளர்களின் சந்தோஷத்துக்கு கேட்கவேண்டுமா? விவசாயிகள் மழைவரும்போது ஆனந்தம் கொண்டு  ஆடிப் பாடி  துள்ளிக் குதிக்கமாட்டார்களா,  வாருங்கள் ஒன்றாக சேர்ந்து ஆடுவோம் என்கிறது இந்த எளிய  முக்கூடல் பாடல். இது போல் எத்தனையோ  அருமையான  பாடல்கள் கொண்டது. 

”ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி காற்றடிக்குதே
கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே
மழை தேடி ஒரு கோடி வானம் பாடி ஆடுதே
போற்று திருமாலழகர்க்கேற்ற மாம்பண்ணைச்
சேரிப் பள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித் துள்ளிக் கொள்வோமே”

பள்ளியர் பூசல் என்ற  ஒரு பாடலையும் சொல்கிறேன்.  இதில்  சைவப்பள்ளி  வைணவப்பள்ளி  ஆகிய இரு பள்ளன் மனைவிகளும் ஒருவள்  மற்றொருவளின்  சாமியைப் பற்றி சொல்வது:
சைவ பள்ளி:  ”என்னடி  உங்க  சாமி விஷ்ணு    சீதை மேலே ஆசைப்பட்டு  பொன் மான் வேஷம் போட்டு வந்த  ராக்ஷசனை  துரத்திக்கொண்டு ஓடினவன் தானே.  சீதை மேலே ஆசைப்பட்டு  ராவணன் தூக்கிக்கொண்டு போனப்போ, தம்பியோடு  கடலைத் தாண்டி போனவன்”
வைணவ பள்ளி: உங்கள் சாமி எப்படிப்பட்டவர் னு மறந்துட்டியா?  பொய்வழக்கு போட்டு சுந்தரனை பாவம் அடிமையாக்கி அவன் திட்டினால் சந்தோஷமாக  நிந்தாஸ்துதியாக ஏற்றுக்கொண்ட சிவன் தானே.
சை. ப. :  உங்க  கிருஷ்ணன் திட்டு வாங்கலியா? சிசுபாலன்  நூறு தடவை திட்டினப்ப  தானே உறைச்சுது அவனுக்கு. நீளமாக  நீலமாக  பாம்பில் மேல் படுத்தாலும்  குள்ளனாக  வந்து யாசகம் கேட்டவன் தானே. ”
வை.ப:    ரொம்ப ஓட்டாதே .  உங்க  சிவனுக்கு இடுப்பில் கட்ட துணி கூட கிடையாது.   எங்கேயோ போற  புலியைப் புடிச்சி தோலை உரிச்சு அவன் கட்டிக்கிறான் அதை வேட்டியாக ”
சை .ப.    அட  இதைப்பார்ர்ரா,, இவை சொல்றது. இவை சாமி  ரொம்ப கோடிஸ்வரன். போடி சர்தான்.  உங்க சாமி மரத்திலே இருக்கிற பட்டையை தானே இடுப்பிலே உடம்பிலே சுத்திக்கிட்டு  14 வருஷம் மரஉரி  கட்டிக்கிட்டவன் தானே  உங்க  சங்கு சக்கர கையன்.
வை.ப:   முதல்லே  சோறு உண்டா உன் சாமி சிவனுக்கு.  பிக்ஷாடநன் என்று  மண்டையோட்டில் சோறு பிச்சை கேட்டு அதுவும் கிடைக்காம  பசிக்கு  விஷத்தை வாரி உண்டவன் நீலகண்டன்….
சை .ப:  அடிரா சக்கைன்னானாம்.  உங்க  சாமி லக்ஷணம் தெரியாதா?  மாட்டுப்பின்னாலே  ஓடி கன்னுகுட்டிக்  குடிக்க வேண்டிய  பாலை தான் குடிச்சு, வீடு வீடா கதவை உடைச்சு உள்ளே போய் வெண்ணை  திருடி, அதுவும் பசிக்கு போதாமல்  பொய்  மண்ணைத்தின்னவன் கதை எனக்கு தெரியாதா?”
இதை தான் கீழே உள்ள  பள்ளுப்பாட்டு  வரிகள்  சொல்கிறது:

”மாதொருத்திக்கு ஆசைப்பட்டுப் பொன்னின் மாயமாம் – பனி
மலையேறிப் போனான் உங்கள் மத்தன் அல்லோடி
காதலித்துத் தம்பியுடன் சீதை பொருட்டால் – அன்று
கடலேறிப் போனான் உங்கள் கண்ணன் அல்லோடி
வலிய வழக்குப் பேசிச் சுந்தரன் வாயால் அன்று
வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன் அல்லோடி
புலிபோல் எழுந்து சிசுபாலன் வையவே – ஏழை
போல நின்றான் உங்கள் நெடுநீலன் அல்லோடி
சுற்றிக்கட்ட ஒரு முழத்துண்டு மில்லாமல்                                                                                                                                               புலித்தோலை உடுத்தானுங்கள் சோதி அல்லோடி.                                                                                                                                   கற்றைச் சடைகட்டி மரவுரியும் சேலைதான் பண்டு                                                                                                                கட்டிக்கொண்டான் உங்கள் சங்குக் கையன் அல்லோடி                                                                                                                                       நாட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல் வாரி                                                                                                                                             நஞ்சையுண்டான் உங்கள் நாதனல்லோடி                                                                                                                                                                மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கில்லாமல்                                                                                                                                           வெறும் மண்ணையுண்டான் உங்கள் முகில் வண்ணனல்லோடி ” 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *