THULASI DAS – J K SIVAN

ஸ்ரீ ராம தரிசனம் 6 –  நங்கநல்லூர்  J K  SIVAN
துளசி தாஸர்

நல்லவர்கள், சாதுக்கள்,  தான் எப்போதும்  சில  துஷ்டர்களால், கெடுமதியாளர்களால்  சோதனைக்குள் ளாவார்கள்.
 ”எங்கே  நீ அடிக்கடி  ” ஸ்ரீ ராம் ஜெயராம் சீதாராம்” என்று  சொல்வது உண்மை யென்றால் அதோ தெரிகிறது சிவன் கோவில் அங்கே இருக்கிறது பார்  அந்த கல் நந்திக்கு  வாய், வயிறு நிறைய  ஏதாவது  ஆகாரம் கொடு, அது சாப்பிடுவதைப் பார்த்தால்  நாங்கள் உன் வார்த்தை, நீ சொல்வது எல்லாம், உண்மை என்று நம்பு கிறோம்” என்றார்கள்.  . மற்றவர்கள் சிரித்தார்கள்.  துளசிதாசர் இதை கேட்டு வருந்தவில்லை, கவலைப்படவு மில்லை.  அவர் ஸ்ரீ ராமனடிமை.
”தசரத ராமா,  நீ  படாத  சோதனையா நான் படுகிறேன்… எல்லாம் உன் சித்தப்படி தான் நடக்கிறது. நீ இருக்கும்போது எனக்கென்ன தனியாக ஒரு  பெருமை.  அவர்கள் சொல்வதை நிறைவேற்ற நீ நினைத்தால் அது தானாகவே  நடக்கட்டும். உன்னை வணங்கி நான் அவர்கள் சொல்வது போல் செய்கிறேன் .எதுவும் உன் அருளால் உன்னுடைய  அவன் திட்டப்படி தானே நடக்கிறது என்பதால்  இதுவும்  உனது விளையாட்டோ? உன்   சங்கல்பத்தின் படி தானே  இந்த உலகத்தில்  எல்லாமே  நடக்கிறது.”
மனதார  ஸ்ரீ ராமனை வேண்டிக்கொண்டு  துளசி தாசர்  உடனே  தோட்டத்துக்கு சென்றார்.    ஸ்ரீ ராம நாமத்தை சொல்லிக்  கொண்டே  அருகம்புல்  கை  நிறைய பறித்தார். கீரைகளைப் பறித்தார். வாயகன்ற  ஒரு பாத்திரத்தில் குடிக்க ஜலம்  எடுத்துக் கொண்டார். நேராக எதிரே சிவன் கோவிலுக்கு சென்றார். என்ன நடக்கிறது   பார்க்கலாம் என்று வேடிக்கை பார்க்க  அனைத்து  பிராமணர்களும்  நிழல் போல்  துளசி தாசரைப் பின் தொடர்ந்தார்கள்.    ”பரமேஸ்வரா,  தயாநிதியே,  என்று அந்த பழங்கால  சிவலிங்கத்தை வணங்கினார்.   கண்குளிர தரிசித்தார்.  நீ தான் என் ராமன்,  நீ  ஹாலஹால  விஷத்தையே  அருந்தியவன்.  இந்த புல் கட்டை, கீரையை நான் பக்தியோடு பறித்துக்  கொண்டு  வந்திருக்கிறேன். இதை   உன் பிரதம சிஷ்யனும்   உன்  இஷ்ட வாஹனமுமான  நந்திகேஸ்வரனை  ரசித்து சாப்பிடச் சொல்லப்பா”  என்கிறார் துளசிதாசர்.கையில் கீரைக்கட்டு, புள் கத்தையோடு,  கல் நந்தியை வலம் வந்தார். நந்தியின் சிலை முன் நின்றார். நந்திகேஸ்வரனை போற்றினார். கண்களில் பக்தியால் ஜலம் வழிந்தது.
”நந்திகேஸ்வரா, நான் தான் மகாபாபி,  உன் எதிரேயே  இத்தனை காலமும் நான் வாழ்கிறேன். இருந்தாலும்  இன்று இவர்கள்  சொல்லும் வரை  ஒருநாளும்  எனக்கு உன்னை வணங்கி உனக்கு ஆகாரம் தர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏனோ  தோன்றவில்லையே. என் ராமன் அருளால், பரமேஸ்வரன்  அனுக்ரஹத்தால் இன்று எனக்கு அந்த பாக்யத்தை  இந்த பிராமணர்கள் அளித்தார்கள். அவர்கள் சிரஞ்சீவியாக வாழ வேண் டும்.  நீ  என்னை மன்னித்து விடு.   எல்லோரும் இன்புற்று, நோய் நொடி யின்றி  வாழ கிருபை புரிவாய். நான் அளிக்கும் இந்த சிறிய  ஆகாரத்தை மனதார ஏற்றுக் கொண்டு என் தவறுகளை மன்னிக்க வேண்டும். ராமனடிமை நான். இந்த ஏழை பிராமணன் ஏதோ தவறான வார்த்தைகள் சொன்னாலும் ஸ்ரீ ராம் ஜெய்ராம் சீதாராம் என்று சொன்னதால் அவன் பாபங்கள் தீர்ந்து விட்டன என்று நான் சொன்னது உண்மையானால்  இந்த ஆகாரத்தை  நீ ஏற்றுக் கொண்டு அருளவேண்டும்”
 நந்தியை வணங்கி கைநிறைய  புல்லை, கீரை கட்டுகளை நந்தியின் வாயருகே கொண்டு சென்றார்.  அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது.  இதுவரை உலகம் காணாத அற்புதம்.
காலை மடக்கி உட்கார்ந்திருந்த கல் நந்தி மெதுவாக எழுந்தது. ”புஸ்” என்று ஒரு பெரு மூச்சு விட்டது. ஹுங்கார சப்தம் எங்கும் எதிரொலித்தது. நந்திகேஸ்வரன் பெரிய   கண்களை  சுழற்றி  எல்லோரையும் ஒரு முறை பார்த்தான்.  துளசிதாசர் சந்தோஷமாக நீட்டிய  கீரைகளை, புல்கட்டை  வாய் திறந்து  நீண்ட  நாக்கினால் சுழற்றி வாங்கி கொண்டு வாயில் நிரப்பிக்கொண்டு தாடையை அசைத்து  கடித்து மென்று  தின்றான்.

ஆஹா,  நந்தி அத்தனை கீரைகளையும் புல் கட்டுகளையும் சாப்பிட்டுவிட்டு பாத்திரத்தில் நிறைந்திருந்த நீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டது. அடுத்த கணம் மீண்டும் கல்சிலையாக அமர்ந்து விட்டது. பாத்திரங்கள் காலி.
 அப்புறம் என்ன?   எல்லா ப்ராமணர்களும்  அங்கே நிற்கவில்லை. அவர்கள் தான் துளசிதாஸரின் காலடியில் ”எங்களை மன்னித்து விடுங்கள்”என்று  கீழே விழுந்துவிட்டார்களே.   அந்த புதிய  பிராமணனும்   ஜெய் ராம்  சீதாராம் என்று உரக்க கத்திக்கொண்டே  ஆடினான்.
எல்லோருக்கும் போஜனம் நடந்தது.
துளசி தாசர்  ஒரு கல்  நந்தியை புல்கட்டு, கீரைகள் சாப்பிட வைத்தார் என்ற சேதி காட்டுத்தீ போல் எங்கும் பரவியது. அவரது  பரிபூர்ண ராம பக்தியை  ஏற்கனவே அனைவரும் அறிந்திருந்தார்கள்.   அவர்  வால்மீகி அவதாரம் என்ற சொல் வேகமாக பரவி அனைவரும் அவரை போற்றினார்கள்.   அவரை பரிசோதித்த பிராமணர்கள் மிக்க மரியாதையோடுஅவரை வணங்கி ஆஸ்ரமத்தில் நுழைந்தார்கள். வெளியூரிலிருந்து வந்த ர் பிராமணன்,  ”பிராமணர்களை கொன்றவன் நான்” என்று சொன்னவனோடு சேர்ந்து அனைவரும் போஜனம் அருந்தினார்கள். ராமநாம பாராயணம் நடந்தது. காசியில் இருந்த அனைத்து பிராமணர்களும் அன்று அங்கே  அந்த துளசி தாசர் ஆஸ்ரமத்தில் ஆனந்தமாக  ராமநாம பாராயணத்தில் ஈடுபட்டார்கள்.

காலம் இவ்வாறு  காசியில் ஆனந்தமாக  அவரது ஆஸ்ரமத்தில் ராம நாம கோஷத்தோடு ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு நாள்  ஒரு விசித்திரமான  சம்பவம் நடந்தது. அது  என்ன வென்று அடுத்த பதிவில் அறிவோமா?தொடரும் 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *