இவர் ஒரு சிம்ஹாசனாதிபதி –
நங்கநல்லூர் J K SIVAN
நடாதூர் அம்மாள்
என்ன சார், அம்மாள் என்று ஒரு ஐயா உண்டா? ஏன் இருக்க கூடாது. சூடாமணி என்று ஆண்களும் உள்ளார்கள், பெண்களும் இருக்கிறார்கள். நடனம் என்று பெண்ணும் உண்டு, ஆணும் உண்டு. மஹா பெரியவளையே நிறைய பக்தர்கள் காமாக்ஷி என்று தான் வணங்குவார்கள். சில வீடுகளில் காமாக்ஷி, காமாக்ஷி சுந்தரம் என்று பையனுக்கு பேர் வைப்பது வழக்கம். ‘சுந்தரம், காமாக்ஷி’ என்ற பெயர்களை படிக்கும்போது இது ஆணா பெண்ணா என்று யோசித்திருக்கிறேன்.
எனக்கு தெரிந்து சுப்ரமணிய அய்யங்கார், பார்த்தசாரதி அய்யர் எல்லாம் இருக்கிறார்களே. சைவம் வைஷ்ணவம் என்பவை மனதளவில் தான் வித்தியாசமானவை. சிவன் என்று எனக்கு பெயர்,நான் அதிகம் விரும்பி எழுதுவது கிருஷ்ணனைப் பற்றி. அதற்காக நான் சிவனை,கணேசனை,சுப்பிரமணியனை, அம்பாளை பற்றியும் நினைக்காதவனா? மனம் பூரா பக்தி நிரம்ப, நிறைய எழுதுகிறேன்.
வைஷ்ணவ நூலகளை படிக்க நேர்ந்தது. அதில் ஒன்றில் ஸ்ரீ நடாதூர் அம்மாள் என்ற ஒரு மஹானைப் பற்றி படித்தேன். அதை நாலு பேருக்கு சொல்லவேண்டும் என்று தோன்றியது.
நடாதூர் என்பது ஊர். அம்மாள் என்பவர் ஒரு வைஷ்ணவ ஆசார்யன்.
ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சிஷ்யரான கூரத்தாழ்வா னுக்கு ஒரு பிள்ளை. அவர் பெயர் மஹா தயா தேசன் அவருக்கு இன்னொரு பெயர் மகா கருணீகர். அவர் ஸ்ரீ ராமானுஜரின் இளைய சகோதரி கமலாம்பாவை மணந்தார். இந்த மகா தயா தேசன் தான் நடாதூர் அக்ரஹாரத்தை ஸ்தாபித்தவர். சம்ஸ்க்ருதத்தில் நடம் என்றால் தாமரை மலர். தாமரை என்றாலே எந்த ஸ்ரீ வைஷ்ணவரும் பெருமாளின் திருவடியைத் தானே நினைக்கிறார் . அதுவே நினைவாக மனதில் நிரம்பி வேறு எதையும் நாடாத அவர்கள் ஊரும் ‘நாடாதார்’ ஊர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் காலம் எல்லாவற்றையும் மாற்றுவது போல் நாடாதார் நாடாதூர் ஆகியதாக ஒரு வழக்கு.
மகா தயா தேசனின் மகன் வரத விஷ்ணு என்கிற சுதர்சனர் தான் நடாதூர் ஆழ்வான். ஸ்ரீ ராமானு ஜருக்கு ஸ்ரீ பாஷ்யம் எழுதுவதற்கு எப்படி உதவி யாக கூரத்தாழ்வான் இருந்தாரோ அதைப் போலவே நடாதூர் ஆழ்வானும் தனது ஆசார்யன் ஸ்ரீ ராமானுஜ ருக்கு அணுக்க தொண்டர். ராமானுஜரின் மதிப்பை பெற்று அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்ரீ பாஷ்யம் வியாக்யானம் எழுதும் படியாக பணிக்கப்பட்டவர். ஸ்ரீ ராமானுஜரால் சொல்லப்பட்ட பிரம்ம சூத்திர சித்தாந் தங்களை ஓலைச்சுவடிகளில் எழுதியவர். ஸ்ரீ பகவத் ராமானுஜர் நடாதூர் ஆழ்வானை ”ஸ்ரீ பாஷ்ய சிம்ஹா சனாதிபதி ” என்று கௌரவித்தார் என்றால் அவர் எவ்வளவு விஷயஞானம் உள்ளவர் என்பது புரியும்.
நடாதூர் ஆழ்வானின் மகன் தேவராஜாசாரியார் என்கிற தேவ சூரி. ஸ்ரீ பாஷ்யம் பிரசங்கத்தில் புகழ் பெற்று ‘கதக கேசரி’ என்ற பட்டம் பெற்றவர். அவர் மனைவி லக்ஷ்மி அம்மாள். வெகுகாலம் இவர்களுக்கு புத்ர ப்ராப்தி இல்லை. தாயார் பெருமாளிடம் வேண்டி பெருமாள் அருளால் அவருக்கு புத்ரப் ப்ராப்தி உண்டானது என்பார்கள்.
அப்படி பிறந்த குழந்தைக்கு தங்கள் கோத்ரம் பெயருடன் காஞ்சி பெருமாளின் பெயரையும் சேர்த்து ஸ்ரீவத்ச வரதன், வரத குரு, என்று நாமகரணம் செய்தனர். இவர் தான் பிற்காலத்தில் நடாதூர் அம்மாள். ஒரு தாயைப் போல அவர் வரதராஜனை போஷித்து வழிபட்டவர்.
”யானைக் கூட்டத்திலே அவர் ஒரு சிம்மமாக திகழ்ந் தவர்” என்று ஸ்ரீ பாஷ்யம் உரைக்கிறது. காஞ்சி வரத ராஜ பெருமாளை பேரருளாள பெருமாளே என மனம் நிறைந்து வேண்டி, நின் திருவடிகளே சரணம் என்று தன்னை அவனுக்கு அர்ப்பணித்துக்கொண்டவர்.
நடாதூர் அம்மாள் சுவாமி 1165 கி.பி. யில் பிறந்தவர் என்பார்கள். இதற்கு இணையான தமிழ் வருஷம் பார்த்திவ ஆண்டு. தந்தையைப் போலவே மகன் கல்வி கேள்வியில் தேர்ச்சி பெற்றார். பாட்டன் ஸ்ரீ நடாதூர் ஆழ்வானிடமே ஸ்ரீ பாஷ்யம் கற்க ஏற்பாடாயிற்று. வரத குருவுக்கு வரதராஜனின் மேல் தான் அலாதி பக்தியும், பாசமும் உண்டே.
ஒரு நல்ல நாள் பார்த்து நடாதூர் ஆழ்வான் பேரன் வரத குருவுக்கு ”அகில புவன” என்று உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.
”அப்பா, தாத்தா ஏன் எம்பெருமானார் ”அகில” என்று ஆரம்பித்தார். ”சகல” ”நிகில” என்பவையும் அதே அர்த்தம் தானே கொடுக்கிறது?”
”மகனே, உடையவருக்கு தெரியாததா? ”அ” தானே முதல் உயிர் எழுத்து. ஸ்ரீ நாராயண தேவராஜன் எல்லா உயிர்களையும் காப்பவன் மேலும் அவன் முழு முதற் கடவுள் என்பதால் உடையவர் உயிர் எழுத்தில் முதலாவதை ப்ரயோகம் செய்திருக்கலாம்.”
இப்படி கேள்வி கேட்ட மகனின் அறிவுப் பசி அப்பாவுக்கு தெரிந்து விட்டது. தாத்தா நடாதூர் ஆழ்வானுக் கோ விருத்தாப்யம் நெருங்கிவிட்டது. எனவே மகனை திருவெள்ளறை யில் இருந்த ஆசார் யன் எங்களாழ்வானிடம் கல்வி பெற அனுப்பினார்.
ஒருநாள் இரவு, பெருமாளை சந்தோஷமாக ஆத்மார்த்தமாக ஸ்லோகம் சொல்லி வழிபட்டுக் கொண்டிருக் கும்போது ஆலய பட்டாச்சார்யர் சுடச்சுட பால் கொண்டுவந்து பெருமாளுக்கு நைவேத்யம் செய்ததைப் பார்த்துவிட்டு திகைத்துபோனார் வரத குரு .
”இவ்வளவு சூடான பாலை பருகினால் என் வரதனின் ம்ருதுவான இளம் நாக்கையும் அதரத்தையும் அது புண்ணாக்கி விடுமே ” என்று அஞ்சி ”நிறுத்து” என்று பட்டாசார்யாரை கடிந்தார்.
பிறகு சூடான அந்த பாலை விசிறி ஆற்றி உஷ்ணம் சற்று குறைந்த பிறகு திரு ஆராதனை செய்தார். பெருமாளுக்கு வரத குருவின் வாத்சல்யம் மிக்க மகிழ்ச்சி அளித்ததால் அவரைத் தன் தாயாக கருதி ”என் அம்மா” என்று அழைத்தார். அன்று முதல் வரதகுரு, நடாதூர் என்ற ஊர் பெயருடன் ”அம்மாள்” என்ற பெருமாள் அளித்த சொல்லோடு நடாதூர் அம்மாள் என்றே பெயர் பெற்றார். இன்றும் அப்பெயரில் விளங்குகிறார். ஒரு தாயைப் போல அவர் காஞ்சி வரதராஜனை போஷித்து வழிபட்டவர்.
நடாதூர் அம்மாள் காஞ்சி வரதராஜ பெருமாளை பேரருளாள பெருமாளே என மனம் நிறைந்து வேண்டி, நின் திருவடிகளே சரணம் என்று தன்னை அவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.