கிருஷ்ணம்மா – என் தாய் — நங்கநல்லூர் J K SIVAN
நான் கிருஷ்ணனை பல உருவங்களில் பாரதியாரோடு சேர்ந்து அனுபவித்தவன். அதில் ஒரு அவதாரம் கிருஷ்ணனைத் தாயாக. கிருஷ்ணம்மாவாக. ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் பல் வேறு நிகழ்ச்சிகளை சில வருஷங்களாக நங்கநல்லூர் ராம்நகர் 2வது மெயின் சாலையில் திருமதி ஜெயலட்சுமி சூர்யநாராயணன் தம்பதிகளுடன் ஆதரவோடு அவர்கள் இல்லத்தில் ரெண்டாவது மாடி ஹாலில் நிகழ்த்தி இருக்கிறேன். நான் சொன்ன கிருஷ்ணம்மா திருமதி ஜெயலக்ஷ்மியின் தாய். எங்கள் நிகழ்ச்சிகளில் முடிந்தவரை பங்கேற்பவர்.
நான் நிஜமாகவே ஒரு கிருஷ்ணம்மாவோடு பழகி இருக்கிறேன், பேசி இருக்கிறேன். என் மீது பிள்ளை போன்ற பாசம் கொண்ட ஒரு தாய். பேச்சில் பாலக்காட்டு தமிழ் மணம் வீசும். கிட்டத்தட்ட நூறு வயது வாழ்ந்த கருணை மிக்கவர் . கிருஷ்ணார்ப்பணம் என்ற பெயர் கேட்டாலே கண்களில் ஒளி, முகத்தில் புன்னகை. சமீபத்தில் மறைந்தாலும் என்றும் நெஞ்சில் நிறைந்தவர்.
”கிருஷ்ணா, நீ படைத்த பிறவிகளிலேயே மிகச் சிறந்த பிறவி எது என்றால் அது ”தாய்” என்று எங்கள் எல்லோருக்குமே தெரியும். அதனால் தான் தாயை வழிபடும் தெய்வங்களில் முதலாவது ஸ்தானத்தில் வைத்து போற்றுகின்றோம். உன்னை பாரதி, தாயாகப் பார்த்த அந்த அழகைப் பாரேன்.
ஒரு குழந்தை பெண்ணாகப் பிறக்கிறது. அதுவும் தாயிடம் பால் உண்கிறது. வளர்கிறது. விளையாடுகிறது. ஆணினின்றும் வேறுபட்டு அது வளர்ந்து ஆணுக்குத் துணையாகி அவனை ஆட்கொள்கிறது. பிறகு தான் தாய்மை என்ற சீர் பெற்று தனித்து உயர்கிறது. இப்போது அந்தப் பெண் ஒரு தாய். ”அம்மா” என்று எல்லோராலும் போற்றப்படுபவள். பெண் தாய்மை உற்றதும் அதன் சிசுவுக்கு அவளிடமே ஆகாரம் வைத்த உன் கருணையை எந்த வார்த்தையால் எழுதுவேன். அது கழுதையோ குதிரையோ பன்றியோ, நாயோ,எதுவாக இருந்தாலும், தாய் என்றவுடன் எங்கிருந்து பாசம் தியாகம் எல்லாம் தானே அவளிடம் சேர்கிறது. தான் பசியில் வாடினாலும் தன் சிசுவுக்கு சதா அவளிடம் பால் உண்டே. அம்மா நீ தான் கண்ணன்.காக்கும் கடவுள். கண்ணா, ‘சகல உயிர்க்கும் நீ தாயல்லவோ’ . இதோ பாரதியின் கவிதை:
உண்ண உண்ணத் தெவிட்டாத – அம்மை
உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே – என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், – என்னைக்
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே – பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். 1
இன்பமெனச் சில கதைகள் – எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் – கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் – எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; -அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடை வேன்.”