பழந்தண்டலம் ஐராவதேஸ்வரர் – நங்கநல்லூர் J K SIVAN
நேரம் வேகமாக நழுவிக்கொண்டே போகிறது. பன்னிரண்டு மணிக்கு முன்பே சில கோவில்கள் மூடிக் கிடக்கிறது.காரணம் எவரும் வருவதில்லை என்பதால் அர்ச்சகர் கதவைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்கோ வேறு எங்காவது வேலைக்கோ போய்விடவேண்டிய கட்டாயம். சம்பளமோ கிடையாது..குடும்பத்தில் அனைவருக்கும் வயிறுகள் இருக்கிறது. அதன் பசியைப் போக்க எங்கோ ஏதோஒரு வேலை செயது தான் சம்பாதித்து உணவு பொருள்கள் வாங்க வேண்டும். பசியாறச் செய்யவேண்டும் என்ற நிலை.
நிசப்தமான தண்டலம் கிராமத்தை விட்டு வெளியே கிளம்பினோம். எங்கு விசாரித்தாலும் பழந்தண்டலம் இருக்கும் இடம் சரியாக சொல்வார் இல்லை. பூந்தண்டலமா? ஸ்ரீ பெரும்புதூர் பக்கமா? என்றெல்லாம் புரியாத கேள்விகள். சுற்றிச் சுற்றி ஒருவழியாக சந்து பொந்துகளில் நுழைந்து பழந்தண்டலத்தை அடைந்த போது கோவில் வாசல் திறந்திருந்தது. கர்பகிரஹம் மூடப்பட்டிருந்தது. அர்ச்சகர் இல்லை.
1500 வருஷ பழங்கால சோழன் கட்டிய கோவில். ஆனந்தவல்லி சமேத ஐராவதேஸ்வரர் கிழக்கு பார்த்த லிங்கம் அம்பாள் தெற்கே பார்த்து நிற்கிறாள். அர்ச்சகர் இல்லாவிட்டாலும் பூட்டி இருந்த கம்பிக்கதவு வழியாக எண்ணெய் பிசுக்கு வஸ்திரம் தரித்து மேலே ஒரு மஞ்சள் பூ மலையை தரித்துக்கொண்டு எண்ணெய் தீப ஒளியில் ஐராவதேஸ்வரர் காட்சி தந்தார். ஒருகாலத்தில் இவர் இந்திரனின் யானை ஐராவதத்துக்கும் அதன் வழிபாட்டை, தவத்தை மெச்சி கருணையோடு அருள் பாலித்து ஐராவதேஸ்வரர் என்ற பெயர் கொண்டவர். அம்பாள் ஆனந்தமாகவே இருக்கிறாள்.
யாரோ ஒரு உள்ளூர்க்காரர் தனது நாலு – ஐந்து வயது பேத்தியோடு அப்போது எங்களைப் போலவே ஆலயத்துக்கு வந்த போது அந்த குழந்தை என் கையைப் பிடித்துக்கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டது. ஆனந்தவல்லியோ?
கஜப்பிரஷ்ட கட்டமைப்பு கொண்ட கர்பக்ரஹ விமானம் . அநேக சோழர் காலத்து கோவில் இப்படித்தான் அமைந்துள்ளது.
இப்போதெல்லாம் எல்லா கோயில்களுக்கு என்று உள்ள குளங்கள் காணாமல் போய் க்ரஹங்களாகி விடுவது மரபு ஆகிவிட்டது. பராமரிப்பு என்பதை எந்த கிராமத் திலும் கோவில்களில் பார்க்க முடியவில்லை. பக்தர்களை விட்டால் அவனது ஆலயங்களை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த பகவானுக்கு வேறு வழியில்லை. அரசன் இல்லை என்பதால் அரசாங்கம் அதைப் பற்றி கவலைப் படவில்லையோ என்ற என்ற நிலையில் வேறு என்ன வழி?.
அமைதியான ஆளில்லா ஆலயத்தை சுற்றி தரிசித்தோம். அழகிய சிலைகள் கோஷ்டத்தில், கணேசர், மஹா விஷ்ணு, பைரவர். காஞ்சிபுரத்தை சுற்றி 108 சிவாலயங்களை சோழ ராஜாக்கள் நிர்மாணித்திருப்பதில் பழந்தண்டலம் ஐராவதீஸ்வரர் ஆலயம் ஒன்று.
அழகான குட்டி நந்திகேஸ்வரன் கண்ணைப் பார்க்கிறான். மூலவர் ஐராவதீஸ்வரரரை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அந்தந்த ஊர்க்காரர்கள், அருகே வசிப்பவர்கள் அவர்கள் ஊர் கோவில்களை பராமரிக்க, தொண்டாற்ற ஒரு குழு அமைத்துக் கொள்ளுங்கள், வெளியிலிருந்து வருபவர்களும் நிச்சயம் உதவுவார்கள். பழந் தண்டல சிவநேசர்கள் இந்த கோவிலைப் பற்றிய விவரங்கள் இருந்தால், சேகரித்தால், எனக்கு அனுப்பினால் மற்றவர்களுக்கும் அதை விநியோகிப்பேன். 1500 வருஷ கோவில்களைப் பற்றி நாம் அறிந்திராத எத்தனையோ விஷயங்கள் நிச்சயம் இருக்குமே.