seshadri swamigal J K SIVAN

ஒரு அற்புத ஞானி –  நங்கநல்லூர்  J .K. SIVAN

”வெளியூர் வெளியூர்”

சென்ற  ஞாயிற்றுக்கிழமை 12.2.2023   சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜென்ம ஸ்தலமான வழூர்  சென்று அங்கே அற்புதமாக உருவாகி இருக்கும் மணிமண்டபத்தை தரிசித்து அங்கே சில மணித்துளிகள்  தியானத்தில்  ஈடுபட்டேன்.அது பற்றி விரைவில் எழுதுகிறேன்.  அதற்குள்  ஒரு  அற்புதமான சம்பவம் சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றி ஏற்கெனவே எழுதி  இருந்தாலும் மீண்டும் நினைவூட்டுவது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.  திருவண்ணாமலையில் ஒரு பக்தர்.   அவர் பெயர்  T .S . குப்பு ஸ்வாமி அய்யர். வயதானவர். அரசாங்கத்தில் பெரிய உத்யோகஸ்தராக இருந்து ஒய்வு பெற்றவர். வெகுகாலமாக சேஷாத்ரி ஸ்வாமிகளை பக்தியோடு வழிபட்டு  வருபவர். அவர் ஒரு நாள் ஸ்வாமிகளை அணுகி வணங்கி  தயங்கியபடியே  ஒரு கேள்வி கேட்டார்;”சுவாமி, எனக்கு ஒரு உபதேசம் அருளவேண்டும்”  என்று கேட்டார்.
அன்று ஸ்வாமிகள்  ஏதோ சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்த நேரம் அது.  ஆகவே  சிரித்துக்கொண்டே ”என்னடா,உபதேசமா வேணும்? உனக்கா?, சரி  நா சொன்னா கேப்பியா?””சுவாமி அது எனக்கு பாக்யம். கண்டிப்பாக ஸ்வாமிகள் சொல்படி நடப்பேன்.”
”சரி சுண்டக்கா சாப்பிடு. சாப்பிட்டா மோக்ஷம் கிடைக்கும், போய்ட்டு வா ” என்றார் ஸ்வாமிகள்
குப்புஸ்வாமி  ஐயருக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன இப்படி சொல்கிறாரே. விளையாட்டு தானா எப்போதுமே? என்று நினைத்து தைரியமாக  சுவாமியிடம்  மேலும் கேட்டார். ”ஸ்வாமிகள் சொல்றது புரியவில்லையே எப்படி?…. ”ஸ்வாமி  சொன்னது  புரியாததால்  அதன் அர்த்தம் புரியாமல்  ஸ்வாமிகளிடம்  விளக்கம் எதிர்பார்த்தார்.
”எப்படின்னா கேட்டே, ராமன் எப்படி ராமனோ, லக்ஷ்மணன் எப்படி லக்ஷ்மணனோ, சுண்டைக்கா எப்படி சுண்டைக்காயோ  அப்படி தான் .”. ஸ்வாமிகளை பொறுத்தவரையில் கோபம் என்றால் ராக்ஷஸன் என்று பெயரிட்டு அழைப்பார். அதுபோல் ‘தியாகம்’ என்பதை சுண்டைக்காய் என்பார்.

இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் சம்சாரிகளுக்கு உலகில் சர்வ சங்க பரித்யாகம் பண்ணுவது என்றால் இயலாத காரியம். பற்று, பாசம், நேசம், பந்தம், பிடிப்பு, பதவி, எல்லாமே ஜாஸ்தி அல்லவா? இதெல்லாவற்றையும்  உதறித் தள்ளு என்றால் எப்படி முடியும்?
இந்த சுண்டைக்காய் (தியாகம் புரிவது) சமாச்சாரத்தை தான் ”கஸ்சித்தீர … தஸ்ய  தீரா: பாரிஜாநந்தி யோனிம்’ தியாகேன ஏகே அம்ருதத்தவ மானசு: ” என்று வேதம் விடாமல் சொல்கிறது. தியாகத்தால் தான்  முக்தி கிடைக்க வழி என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பூக்கள் வேறே வேறயாக கலர், அழகு, ஸைஸ், மணம் என்று இருந்தாலும் எல்லாவற்றிற்குள்ளும் மகரந்த தந்து இருக்கிறதே, என்னன்னவோ வஸ்துக்கள் கண்ணில் படுகிறது, கடம், குடம், மடம் , படம், மலை, மாலை, இலை , குலை, ஆடு, மாடு இருக்கிறது என்கிறோமே, அந்த எல்லா வஸ்துக்களிலும் ”இருக்கிறது” இருக்கிறது” என்று சொல்லப்படுவது மட்டும் தான் முக்கியம்.  அது தான்  ஆத்மா.ஸ்ரீ ராமன் முதற்கொண்டு சுண்டைக்காய் வரை என்று ”எல்லாமும் அடங்கிய” என்ற அர்த்தத்தில்  ஸ்வாமிகள்  சொல்கிறார். வெவ்வேறாக இருந்தாலும் எல்லாவற்றிலும் உள்ள  ஆத்மா பற்றிய  ஞானம் அவசியம். அதை அடைய மற்ற எல்லாவற்றையும் தியாகம் செய்யவேண்டும்.  இந்த ஆத்ம ஞானம் வேறே எதையாவது கெட்டியாக பிடித்துக்கொண்டு  அதை  தியாகம்  செய்யாவிட்டால் எப்படி கிடைக்கும்?குப்புஸ்வாமி ஐயருக்கு  புரிந்ததோ இல்லையோ, இதுவரை அது பற்றிய விவரம் தெரியவில்லை.
இதேபோல் திருவனந்தபுரம் ராஜம் ஐயருக்கும் ஒரு அருமையான உபதேசம் ஒருமுறை கிடைத்தது.  ராஜம் ஐயர்  அடிக்கடி திருவண்ணாமலை ஏதாவது ஜோலியாக வருவார். சேஷாத்திரி சுவாமி பக்தர்.  அவருக்கு கிடைத்த உபதேசம் என்ன?
”நீ யார் எதுக்கு வந்தே இங்கே?”இப்படி  ஐயரிடம் ஸ்வாமிகள்  ஒரு தரம் கேட்டார். ”சுவாமி  நான் ஏதோ ஒரு சில முக்கியமான வியாபார வேலை நிறைய  இங்கே  இருக்கு. அதுக்காக வந்தேன்” ”டேய்  ராஜம், இங்கே ஒண்ணுமில்லை. வெளியூர் வெளியூர்” என்றார்   ஸ்வாமிகள்  ஸ்வாமிகள் பேசுவது தான் யாருக்குமே புரியாதே. ராஜம் ஐயர்  தலையை சொரிந்துகொண்டார். ஸ்வாமிகள் ஏதோ சொல்கிறார் என்ன என்றே நமக்கு புரியவில்லையே.  பின்னர்  அவருக்கு யாரோ  ஸ்வாமிகள் பற்றி நன்றாக புரிந்தவர் ஒருவர்  விளக்கினார்.

ஸ்வாமிகள் ”இங்கே ஒன்றுமில்லை” என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்றால் ”திருவண்ணாமலையில் உலக விவகாரம் சம்பந்தப் பட்ட எதுவுமே கிடையாது. இது அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமான அருளொளி நிறைந்த பெரு ”வெளி”. பரிபூரணமான ஆனந்தம் ஒன்றே. தேஜோமய வெளி” நிறைந்த ஊர் என்று அர்த்தம்.”வெளியூர் வெளியூர்” என்று ரெண்டு தடவை அழுத்தமாக சொன்னது  இது  ஞானப் பெருவெளி நிறைந்த ஊர்  என்று உணர்த்துவதற்காகத்தான். 

”திருவண்ணாமலை எதற்கு வந்தாய்?” என்று யாராவது கேட்டால், ‘பொண்ணு கல்யாணம், மாமனார் வீடு, துணிமணி வாங்க, வியாபார விஷயமாக என்று எல்லாம் சொல்லாதே. இங்கே அருணாசலனை பார்க்க வந்தேன். ஜோதியைக் காண வந்தேன் ஆத்ம ஜோதி தரிசனத்துக்கு வந்தேன் ” என்று சொல்லவேண்டும் என்கிறார்.
இது தான் சேஷாத்ரி ஸ்வாமிகள்.   எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா!

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *