A LESSON TO LEARN J K SIVAN

அகந்தை வேண்டாம்.- நங்கநல்லூர் J K SIVAN
என் கதைகளில் அடிக்கடி கிருஷ்ணன் வருவான். இந்த சின்ன கதையை முன்பே ஒரு முறை எழுதின ஞாபகம் இருக்கிறது. அதனால் என்ன. இன்னொருதடவை நானும் இதை எழுதி உங்களோடு படிக்கிறேன்.ஹே கிருஷ்ணா, இதை எழுத வைத்த உனக்கே இதை அர்ப்பணித்து உன் பிரசாதமாக என் முகநூல் நண்பர்களுக்கு வழங்குகிறேன்.
அர்ஜுனன் தீர்த்த யாத்திரை கிளம்பி முதன் முறை யாக தெற்கு நோக்கி நடக்கிறான். தென்கோடி தமிழகம் வந்துவிட்டான். ”அட இது என்ன ஊர். ராமேஸ்வரம்….”ஓஹோ இங்கு தான் ராமருக்காக வானர சைன்யம் சேது பாலத்தைக் கட்டியதா?” சுற்றிப் பார்த்தான். அவனுக்குள்ளே ஒரு எண்ணம் பளிச்சிட்டது
ஸ்ரீ ராமன் சிறந்த வில்லாளியாச்சே. அவனால் தனது அம்புகளை கொண்டே சிறந்த பாலம் அமைக்க முடியுமே? ஏன் வானர சைன்யத்தின் உதவியை நாடினான்? என்னாலேயே இத்தகைய பாலத்தை சரங்களால் அமைக்க முடியுமே?. ஒருவேளை ராமனுக்கு எனக்கு என் வில் வித்தையில் நம்பிக்கை இருப்பதை போல் தன்னுடைய வில்வித்தையில் நம்பிக்கை இல்லையோ? நம்பிக்கை குறைவோ? இதற்கு யார் பதில் சொல்வார்கள்? ராமேஸ்வரம் வரை நடந்து சென்றவன் ஒரு காட்டில் ஒரு சிறு கோவில ருகில் செல்லும்போது அங்கிருந்து ராம் ராம் என்று நாம ஜபம் கேட்கிறது. அர்ஜுனன் நேராக அந்த கோவிலுக்குள் நுழைந்தான். என்ன ஆச்சர்யம்!. அவனுக்காகவே அங்கு காத்திருந்தது போல ஆஞ்சநேயர் அமர்ந்துகொண்டு ராம நாம ஜபம் செய்து கொண்டிருந்தார். அவரே தக்க ஆசாமி என்று தன்னுடைய கேள்வியை அவரிடம் கேட்க என்று அர்ஜூஜனுக்கு தோன்றியது.
”வா அர்ஜுனா” இந்தா ராம பிரசாதம்”
”நமஸ்காரம் ஹனுமான் அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம்? கேட்கலாமா?
”கேள் முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்”
”ஏன் ராமர் தன்னுடைய அம்புகளால் சேது பாலம் அமைக்காமல் வானர சைன்யங்களின் உதவியை நாடினார்?”
“ ஏன் ராமர் அம்பு பாலம் கட்டவில்லை என்று கேட்டாயே அது வானர சைன்யங்களின் பலத்தை தாங்க கூடியதில்லை!!.
“ஆஞ்சநேயா, அப்படிச் சொல்லாதீர்கள். நான் கட்டும் அம்பு பாலம் எந்த பாரத்தையும் தாங்கக்கூடியது. எத்தனை வானர சைன்யங்களும் அதன் மீது செல்லலாம்?
“ நீ சொல்வதை நான் நம்பவில்லை, அர்ஜுனா!”.
அர்ஜுனனுக்கு தனது வில் வித்தையைப் பழித்து யாராவது பேசினால் கடும் கோபம் வரும். கொல்லக் கூட தயங்க மாட்டான்.
“என்ன போட்டி ஹனுமான், உங்களுக்கும் எனக்கும். நான் கட்டிய அம்பு பாலம் நொறுங்கினால் நான் உடனே தீ மூட்டி அதில் மாள்கிறேன். நீங்கள் தோற்றால் உங்களுக்கும் அதே விதி. சரியா?? சவால் விட்டான் அர்ஜுனன்.
ஆஞ்சநேயர் ஒப்புக்கொண்ட பின் அர்ஜுனன் வில்லை எடுத்தான். கண் இமைக்கும் நேரத்தில் அவனது சரங்கள் ஒரு பாலத்தை எதிரே அமைத்தது.’ ‘பார்த்தீர்களா ஹனுமான்?’ இப்போது என்ன சொல்கிறீ ர்கள்?”’
‘ அர்ஜுனா, உன் சீட்டு கட்டு பாலம் என் ஒருவனை
யே தாங்காதே எப்படி ராமரின் வானர சைன்யத்தை தாங்க முடியும்? இதோ பார் வேடிக்கையை. “ஜெய் ஸ்ரீ ராம்” என்று ஆஞ்சநேயன் தன் வாலால் அந்த பாலத்
தை ஒரு தட்டு தட்ட அது பொடிப் பொடியாய் நொறுங் கியது. தோல்வியை ஒப்புக்கொண்ட அர்ஜுனன் தீ மூட்ட தொடங்கினான்.
“கிருஷ்ணா, நான் தோல்வியடைந்து விட்டேனடா, உன்னை இனி பார்க்க எனக்கு முகமே இல்லை” .என்று தீயில் குதிக்கு முன் அங்கு ஒரு பெரியவர் வந்தார்.
“என்ன நடக்கிறது இங்கே?” என்று ஆஞ்சநேயரை கேட்க அவன் விவரம் சொன்னான்
.“இது தவறு, உங்கள் போட்டிக்கு யார் சாட்சி?” “ஒருவருமில்லை”
“சாட்சியில்லாத போட்டி செல்லாது. நீங்கள் மீண்டும் போட்டி போடுங்கள் நானே வேண்டுமானால் சாட்சி யாக இருக்கிறேன்” என்றார் பெரியவர்.
“சரி, எ ன்று இருவரும் ஒப்புக்கொண்டு அர்ஜுனன் மீண்டும் அம்பு பாலம் அமைக்க ரெடி! . அவன் உள் மனதில் தோல்வி நிச்சயம் என்று பட்டது.
“ஹரே, கிருஷ்ணா உன்னை வணங்கி ஏதோ ஆரம்பிக்கிறேன் தோற்றால், அடுத்த ஜன்மத்தில் சந்திப்போம்”-
அர்ஜுனன் சரங்களால் பாலம் கட்டிவிட்டான். ஆஞ்சநேயன் சிரித்து கொண்டே அதன் மீது தன் வாலால் தட்டினான். அசையவில்லை. காலால் உதைத்தான். கால் தான் வலித்தது. அதன் மீது ஏறி முழு பலத்துடன் குதித்தான். பாலம் இம்மியும் அசைய வில்லை. ஆஞ்சநேயன் ஆச்சர்யமுடனும் அதிர்ச்சி யுடனும் முகம் கவிழ்ந்து யோசித்தான். என்ன ஆயிற்று?. பெரியவர் முடிவை கூறி விட்டார்: .
“அர்ஜுனனால் முதலில் அம்புகளால் பாலம் கட்ட முடிந்தது. அப்போது ஆஞ்சநேயனால் அந்த பாலத்தை நொறுக்க முடிந்தது. காரணம் என்ன தெரியுமா?. அது அர்ஜுனன் தன் வில் வித்தை கர்வத்தால் கட்டிய பாலம் அது. ஆகவே ஆஞ்சநேயன் ஸ்ரீ ராமனின் நாமத்தை சொல்லி வாலாலேயே நொறுக்க முடிந்தது. இப்போது ஆஞ்சநேயன் தன் பலத்தின் மீது இருந்த கர்வத்தால் அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனை வேண்டி அமைத்த பாலத்தை நொறுக்க முயற்சித்தது தோற்றது. இவ்வளவே.”
இருவரும் பெரியவர் காலில் விழுந்து வணங்கி எழுந்தபோது அங்கு பெரியவரை காணோம்!
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அங்கே அவர்கள் எதிரே நின்று கொண்டு இருவரையும் “என் இரு கண்கள் நீங்கள் அகம்பாவம் வேண்டாம் உங்களுக்கு” என்று அருளினார்
கிருஷ்ணனின் அறிவுரை நமக்காக மட்டுமே என்று புரிந்து கொள்வோமா? சர்வம் கிருஷ்ணமயம் ஜகத். அவனன்றி ஓர் அணுவும் அசையாதே .

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1414

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *