ஆயுர்வேதம் – நங்கநல்லூர் J K SIVAN
உடம்பு சரியில்லை என்றால் குணப்படுத்த எத்தனையோ வழிகள் நமது பாரத தேசத்தில் இருக்கிறது. வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பு, இங்கே பாட்டி வைத்யம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, நாட்டு வைத்தியம், யூனானி வைத்யங்கள் நடைமுறையில் இருந்தது. இதெல்லாம் தவிர மணிமந்த்ர ஒளஷதம் வேறு. ஒவ்வொன்றைப் பற்றியும் நான் சொல்லப்போனால் நீண்ட பதிவாகிவிடும் ஓடிவிடுவீர்கள்.
சமீபத்தில் சில நூறு ஆண்டுகளாகத்தான் அல்லோபதி என்று அல்லல் படுத்தும் வெள்ளைக்கார வைத்யம் வந்து எல்லாவற்றையும் ஜீரணித்து விட்டது.நமது நம்பிக்கை, பழக்கத்தை மாற்றி விட்டது.. ஹோமியோபதி 1755க்கு அப்புறம் பிறந்தது. சாமுவேல் ஹான்மேன் என்ற ஜெர்மனிக்காரர் அறிமுகப்படுத்திய வைத்தியம்.
ஆயுர் வேதம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இயற்கையோடு ஒட்டிய வைத்தியம். உடம்பு,மனம் ஆத்மா சம்பந்தப்பட்ட வைத்தியம். ஆயுசு+வேதம் ரெண்டும் கலந்த வைத்தியம் தான் ஆயுர்வேதம். வேதாசாரப்படி உயிர்வாழும் கலை . சரகர், சுஸ்ருதர் போன்ற ரிஷி டாக்டர்கள் காலத்தியது. ஆயிரம் ஆயிரம் வருஷங்களாக நமது தேசத்தில் பின்பற்றி வரும் வைத்தியம். 6000 வருஷங்களுக்கு முன்பே ரிக்வேதத்தில் ஆயுர்வேதம் சொல்லப்பட்டிருக்கிறது.
உடலை குணப்படுத்தி நீண்ட நாள் வாழச்செய்வது. “Swasthyas swasthya rakshanam” ஸ்வஸ்தியஸ் ஸ்வஸ்திய ரக்ஷணம் என்று ஸ்லோகம் சொல்கிறது. உடலில் உள்ள குறைகளை நீக்கி ஒழுங்காக உடம்பு சொன்னதைக் கேட்க செய்வது. ”அதுரஸ்ய விகார் ப்ரஷமணாம்ச” என்கிறது.
எந்த மொழி பேசினாலும் இந்தியர்கள் அநேகர் பின்பற்றியது ஆயுர்வேத வைத்தியம். இப்போது உலகெங்கும் பரவியுள்ளது. ரிஷிகள் ஆத்ம ஞானத்தை மட்டும் சிந்திக்காமல் தேக ஆரோக்கியத்தையும் சிந்தித்து வழிகாட்டி யிருக்கிறார்கள். வாழ்க்கை விஞ்ஞானம் முதலில் உபதேசித்தது ப்ரம்மா. ப்ரம்ம ஸம்ஹிதை இன்றும் இருக்கிறது இதை நிரூபிக்க. முதல் வியாதி ஜுரம். பாரத்வாஜ ரிஷி இந்திரனிடமிருந்து ஆயுர்வேதம் கற்று மற்ற ரிஷிகளுக்கு தெரிவித்தார். இந்தியாவை முஸ்லிம்கள் ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலும் ஆயுர்வேதம் நிலையாக வழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருந்தது. உள்ளம் உடல் ரெண்டையும் கட்டுப்பாட்டில் ஒரே சீராக வைத்துக்கொள்ள ஆயுர்வேதம் உதவுகிறது. வேர் சக்தியுள்ளதாக இருக்கும் வரை மரத்தின் கிளைகள் இலைகள் உயிரோடு இருக்கும். அது போல் உள்ளம்,உடம்பு ரெண்டையும் சீராக்க, மனம், புலன்கள், இவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். உணவு, தூக்கம்,உழைப்பு, சுத்தம்,வாழ்க்கை முறை, இதையெல்லாம் ஆயுர்வேதம் கவனத்தி கொண்டது. மூன்று தோஷங்கள் மனிதனை வாட்டுபவை. பித்தம் வாதம், கபம், இவை பஞ்ச பூதங்களால் நமது உடலை பீடிப்பவை. வாதம் காற்று, ஆகாயம் சம்பந்தமானது. மூச்சு, ரத்த ஓட்டத்தை,மனதின் எண்ணங்களை கண்காணிப்பது.வாதம் இல்லாமல் பித்தமும் கபமும் தலை காட்டாது.
பித்தம் உஷ்ணம், நீர் சம்பந்தப்பட்டது. ஜீரணம் சரியாக ஆகவேண்டுமானால் அது பித்தத்தின் வேலை.கபம் பூமி, ஜலம் சம்பந்தப்பட்டது. உடம்பின் சீதோஷ்ண நிலை இந்த மூன்றிலும் தான் அடங்கி இருக்கிறது. சரியான அளவில் இவை அமைந்தால் தான் ஆரோக்யம். வைத்தியர்களுக்கு நாடியில் இது தெரிந்து விடுகிறது. கபம் முதலில் ஆக்கிரமிப்பது நுரையீரலை. ஆஸ்த்மா, போன்ற வியாதிகள் நமக்கு தெரியுமே.கபம் குளிர்காலத்தில் தலை விரித்தாடும். பித்தம் கோடைகாலத்தில் உச்சத்தில் வாட்டும். வாதம் எப்போதுவேண்டுமானாலும் துன்புறுத்தும்.ஆரோக்யமான சூழ்நிலையில் முன்னோர்கள் வாழ்ந்தார்கள். சரியான ஜீரணசக்தி ஆதாரமான ஆரோக்யம். பஞ்ச பாதங்களிலிருந்து வியாதியும் அதை நிவாரணம் செய்யும் மருந்துகளும் பிறக்கிறது.
ஆகவே ஆயுர்வேதம் இயற்கை வைத்தியமாக, மூலிகைகள், வேர்கள்,தண்டுகள், கிழங்குகள் இவற்றை உபயோகிக்கிறது. ப்ராஹ்மி, மஞ்சள், அஸ்வகந்தா,கத்தாழை,எருக்கு , இஞ்சி,மிளகு, ஜீரகம், இவையெல்லாம் முக்கியமான பெயர்கள். இருபது முப்பது மூலிகைகளை சேர்த்து தயாரிக்கப்படும் ரசாயன மருந்து வகைகள்.
தலைவலியா, ஜலதோஷமா, முதுகுவலியா, இந்தா மாத்திரை, விழுங்கிய உடனே ”ஹா போய்விட்டது, உடம்பு சரியாகி விட்டது”என்று விளம்பரத்தில் தான் ஆங்கிலேயே மருந்து விற்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் அப்படி அல்ல. எதனால் வியாதி என்று ஆராய்ந்து அதன் மூலத்தை கண்டுபிடித்து கொஞ்சமாக நிவர்த்தி செய்து முழுதும் அகற்றுவது. நீண்ட ஆயுளைத் தருவதாலே தான் அதற்கு ஆயுர் வேத வைத்தியம் என்று பெயர்!