சிவ வாக்யர் – நங்கநல்லூர் J K SIVAN
தமிழில் கணக்கற்ற நீதி நூல்கள் உள்ளன. ஆயிரம் ஆயிரம் வருஷங்களாக பல ரிஷிகள் ஞானிகள், மஹான்கள் நமக்கு அளித்த பொக்கிஷம். அவற்றை அழியாமல் காத்து, அவற்றின் பயனை முழுதும் துய்க்க வேண்டிய நாம் துரதிர்ஷ்ட வசமாக அவற்றை கவனிப்பாரின்றி அழிவதற்கு காரணமாக இருப்பது ஞாயமா? எத்தனை பேருக்கு சிவவாக்கியர் பற்றி தெரியும்.? அவர் பாடல்கள் அடுத்த தலைமுறைக்கு அறியப்படாமலே மறைந்து விடும். பள்ளியில் இதை சொல்லித்தர யாரும் இல்லை. வீட்டிலேயும் தெரியாது. படிக்க ஆளில்லை. தேவையற்ற, பயனற்ற விஷயங்களில் மனம் ஈடுபடும் வாய்ப்பு தான் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
இன்று சில சிவ வாக்கியர் பாடல்கள் சொல்கிறேன். அனுபவித்து மற்றவர்களுக்கும் பரப்புங்கள். இது எனக்கல்ல, தமிழுக்கு, அற்புத நீதிக்கு, பக்திக்கு செய்யும் கைங்கர்யம்.
ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.
நமசிவாய என்ற அஞ்செழுத்துக்குள்ளே அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகி, அதிலேயே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் அமர்ந்திருக்கின்றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும், அறிவும் மனமும், ஒளியும் இருளும், இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான் அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது. நம்மை உய்விக்கிறது.
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி ஏனய்யா தேடுகின்றீர்கள்?. அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாமல், அவனை நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருப்பதை உணர்ந்தீர்களா?. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் வரை மனிதர்கள் அறிய வில்லையே. பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற எண்ணற்ற கோடி மக்கள் என்றைக்கு அவர்கள் இதயத்துக்குள்ளேயே சோதியாக இறைவன் கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே. என்ன பயன்?
“உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீறேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே”.
நம் உடம்பில் கழுமுனை நாடியில் மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாயு. காற்று ஒன்று. ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றதே அதைத் தெரியுமா? இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின் கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் போது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது.. அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .ஆதலால் இதனை நன்கு அறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். நிறைய பயிற்சியும் முயற்சியும் வேண்டும். தொடர்ந்து முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தியானத்தில் ஈடுபடுபவர்கள் கிழவர்களாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். . நம் உடம்பே சிவசக்தி அருளால் மெய்ப்பொருள் நிறைந்ததாகும். இது உண்மை
“வடிவு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேண்டும் என்பனே
நடுவண் வந்து அழைத்த பொது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தொட்டி கைக் கொடுப்பரே”.
அழகிய பெண்ணைக் கண்டு ஆசை மனைவியாக மணமுடித்துக் கொண்டவன் அப்பெண்ணை வேறு ஒருவன் தொட்டு விட்டால், ”எங்கே அவன், அவனை விடாதே அவனைப் பிடித்துக் கட்டுங்கள்.முதலில் அவனை வெட்டவேண்டும்” என்று அரிவாளை எடுப்பான். . அந்த அழகிய பெண்ணை விதிவசத்தால் எமன் வந்து உயிரை எடுத்துப் போய்விட்டால் அப்போது யாரை விரட்டி இவரை வெட்டுவான்? மிக அழகிய பெண்ணாயிற்றே என்று இறந்து போன அந்த பெண்ணின் பிணத்தை அப்படியே வீட்டிலேயே வைத்திருக்க முடியுமா? அவ்வுடம்பில் பிணவாடை வீசி நாற்றமடிக்குமல்லவா? . ஆகவே அதனை அந்த ஆசைப்பட்ட அழகிய உடம்பை, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தோட்டியின் கையில் கொடுத்து
அவன் அவ்வுடலை தொட்டுத் தூக்கி எரிக்கவோ, புதைக்கவோ செய்யும்போது பேசாமல் பார்த்துக்கொண்டு தானே இருப்பான்.காசும் கொடுப்பான். .அப்போது மட்டும் அந்த தொட்டியின் மீது கோபம் வருவதில்லையே? அது ஏன் என்று யோசியுங்கள். அந்த அழகின் மீதிருந்த மோகமோ அன்போ எங்கே போயிற்று? என சிந்தியுங்கள். . அப்போது புரியும் அழியும் பொருள்களின் மீதுள்ள ஆசை நிலைப்பதில்லை என்று.
“என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது கொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே”.
எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் இதுவரை அறியாத மூடனாக அல்லவோ இருக்கிறேன். அப்பரம்பொருளை பல இடங்களில் தேடியும், நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை அப்புறம் அல்லவோ நான் அறிந்து கொண்டேன். . தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை யார் காண வல்லவர்கள்? என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் இருந்து, அந்த உண்மையை யான் இப்போது உணர்ந்து கொண்டேன்.