கந்தன் வள்ளி கதை – நங்கநல்லூர் J K SIVAN
மஹாகவி சுப்ரமணிய பாரதி மாதிரி இன்னொருத்தன் இனிமே தான் பிறக்கணும். ஆஹா என்ன தமிழ்! எவ்வளவு எளிய சுந்தர நடை. என்ன கற்பனை, என்ன தேசப் பற்று. எவ்வளவு சங்கீத ஞானம். என்ன தைர்யம்! இதோ பாரதியின் ஒரு கற்பனை. அவரே சொல்கிறார் கேளுங்கள்:+++
”ஒரு வீட்டு திண்ணையில். அதன் மேல் தென்னை ஓலைப் பந்தல். குறுக்கும் நெடுக்குமாக ஏழட்டு மூங்கிற் கழிகளைச் சணல் கயிற்றால் சட்டம் கட்டி மேலே தென்னங் கீற்றுகளை பரத்திய பந்தல். ஒரு மூங்கிற் கழியிலே கட்டியிருந்த சணல் கயிறில் ஒரு சாண் கயிறு மிச்சம். அது தொங்கி ஒருநாள் சுகமாக காற்றில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது. அதற்கு துளி கூடக் கவலை இல்லை. சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும். கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது. இன்று அப்படியில்லை படு ‘குஷால்’. எனக்கும் இந்தச் சணல் கயிற்றுக்கும் சிநேகம். இருவரும் பேசுவோம்.
“கயிற்றினிடத்தில் பேசினால், அது பதில் மறுமொழி சொல்லுமா? பேசிப்பார், பதில் சொல்கிறதா இல்லையா என்பது அப்போது தான் உனக்கு தெரியும். இந்த கயிறு இருக்கிறதே அது சந்தோஷமான நேரத்தில் தான் பேசும். இல்லாவிட்டால், உம்மணா மூஞ்சி. பேசாது. பெண்களைப் போல. அடேடே சொல்ல மறந்தேனே . இந்த தென்னை ஓலை பந்தலில் மூங்கில் கழியில் ரெண்டு சணல் கயிறு துண்டுகள். ஒன்று இல்லை. ரெண்டு. ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண். பக்கத்திலேயே தொங்கிய ரெண்டு சணல் கயிறு துண்டுகள்.
சாண் நீள கயிறு ஆண்; கந்தன். மற்றொன்று பெண்; வள்ளி. கணவனும், மனைவியும். ரெண்டுக்கும் அளவு கடந்த காதல் அன்பு. ஒன்றையொன்று எப்போதும் ஆசையோடு பார்த்து சிரித்து பேசும். இதோ ரெண்டும் பேசப்போகிறது. நான் திண்ணையில் இருந்தேன். கந்தன் வள்ளி மீது கை போட வருகிறது. வள்ளி பின்வாங்குகிறது. அந்த நேரம் பார்த்து தானா நான் அங்கே இருக்கணும் .கந்தனோடு பேசினேன்.
“என்ன, கந்தா, சௌக்கியந்தானே. சந்தர்ப்பம் சரியில்லாத நேரத்தில் வந்து விட்டேனா. போய்விட்டு அப்புறம் வரட்டுமா?“அட போடா, வைதிக மனுஷா .உன் முன்னேகூட லஜ்ஜையா? என்னடி, வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?”
“சரி, சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்கவேண்டாம்”– வள்ளி. கந்தன், கடகடவென்று சிரித்துக் கைதட்டி விட்டு என் எதிரிலேயே குதித்து, வள்ளியைக் கட்டிக்கொண்டது.
வள்ளி கீச்சுக்கீச்சென்று கத்தியது. உள்ளூர மனதில் வள்ளிக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு சந்தோஷந் தானே?
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்தி, உள்ளதைச் சொல்வதில் என்ன குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?
வள்ளிஅதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டு விட்டது. சில க்ஷணங்களுக்குப்பின் மறுபடிபோய்த் தழுவிக்
கொண்டது. மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல், மறுபடியும் கூச்சல்; இப்படியாக தொடர்ந்தது.
“என்ன, கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்தை கூட பேச மாட்டேனென்கிறாயே? வேறொரு சமயம் வருகிறேன், போகட்டுமா?” என்றேன்.
“அட போடா! வைதிகம்! வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்று கொண்டிரு. இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் . போய் விடாதே, இரு” என்றது கந்தன்.
நின்று மேன்மேலும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சிறிது நேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது. உடனே பாட்டு. நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு. இரண்டே ‘சங்கதி’. பின்பு மற்றொரு பாட்டு.
கந்தன் பாடிமுடிந்தவுடன், வள்ளி. இது முடிந்தவுடன்,
அது. மாற்றி மாற்றிப் பாடி — கோலாஹலம்!
சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே யிருக்கும். அப்போது வள்ளி தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும். அது தழுவிக் கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்! இங்ஙனம் தொடும் போது வள்ளிக்குக் களிப்பு. நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப் போனேன். நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.
நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளி தூங்கிக் கொண்டிருக்க, கந்தன் என் வரவை எதிர்நோக்கி யிருந்து.
என்னைக் கண்டவுடன், “எங்கடா போயிருந்தாய், வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே”
“அம்மா நல்ல நித்திரையா?”என்று கேட்டேன்.
ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என்முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என்னென்று சொல்வேன்! காற்றுத் தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வைர ஊசிபோல் ஒளிவடிவமாக இருந்தது.
“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.”
காற்றே, போற்றி. நீயே கண்கண்ட பிரமம்.
அவன் தோன்றிய பொழுதிலே வான முழுதும் ப்ராணசக்தி நிரம்பிக் கனல்வீசிக்கொண்டிருந்தது.
ஆயிரமுறை அஞ்சலிசெய்து வணங்கினேன்.
காற்றுத்தேவன் சொனான் : “மகனே, ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை. அது செத்துப்போய் விட்டது. நான் ப்ராணசக்தி. என்னுடனே உறவு கொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு உயிர்த்தி ருந்தது’; சுகம்பெற்றது. சிறிது களைப்பெய்திய வுடனே அதை உறங்க — இறக்க — விட்டு விட்டேன். துயிலும் சாவுதான். சாவும் துயிலே. நான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்துவிடும். நான் விழிக்கச்செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான்
சக்தி குமாரன், என்னை வணங்கி வாழ்க” என்றான்.
“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி. த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி.”++
பாரதியார் கதையை சுருக்கிக் கொடுத்தேனே. கதை எப்படி? பாரதிக்கு ஒரு ஜே போடுங்கள்.