அருணாசல அஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN
அஷ்டகம் 1 – 3.
திருவண்ணாமலை எனும் அருணாசலம் தக்ஷிணா மூர்த்தி ஸ்வரூபம் . அடிமுடி காணமுடியா பரமேஸ்வர ஸ்தாணுமாலய ஸ்வரூபம். . பல்லவ ராஜ்யத்தில் இது தொண்டை மண்டலத்தை சேர்ந்தது. நிறைய எளிதில் ஏறமுடியாத கரடு முரடு மலைகள் இருந்தது. 2800 அடி உயரம். திருவண்ணாமலைக்கு பல பெயர்கள் உண்டு: முன்பு திரு அண்ணா நாடு, திருவண்ணாமலை
, அருணாசலேஸ்வரம், சிவலோகம், சோணகிரி, சோணாசலம், சுணசைலம், அருணாத்ரி, அருணகிரி, சோணகிரி, சுதர்சனகிரி, ஜோதி லிங்கம், தேஜோ லிங்கம், லிங்கஸ்தானம். தொன்மையான மலை. அகஸ்தியர் தொல்காப்பியர் போன்ற சித்தர்கள் தவமிருக்கும் மலை. வேதங்களாலும் புராணங்க ளாலும் சகல க்ஷேத்திரங்களிலும் உயர்ந்த உன்னத மான அக்னி க்ஷேத்ரம் எனப்படுவது.
ஒருவன் மோக்ஷம் பெற சிதம்பரம் போகவேண்டும், அல்லது திருவாரூரில் பிறக்க வேண்டும், இல்லை யென்றால் காசியில் இறக்கவேண்டும், ஆனால் அவன் சைதாப்பேட்டையில் இருந்தாலும் உட்கார்ந்த இடத்திலேயே அவன் திருவண்ணாமலையை நினைத்தாலே மோக்ஷம் பெறலாம் என்று பேசப்படும் க்ஷேத்ரம். முக்திஸ்தலம். திருவண்ணாமலையும் அண்ணாமலையாரும் வேறல்ல ஒன்றே. அண்ணா மலை தான் அருணாசலேஸ்வரர். அருணாசலேஸ்வரரை ஜோதிஸ்வரூபமாக பார்க்க தரிசிக்கவே.கார்த்திகை தீபம். நக்கீரர் ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையை பாடியிருக்கிறார்.
நல்லவேளை இன்னும் 25 ஏக்கருக்கு குறைவில்லாமல் பரவி இருக்கிறது. எத்தனையோ ராஜ வம்சங்களை அசையாமல் அண்ணாமலை பார்த்திருக்கிறது. ” யார் உயர்ந்தவர்” என்று ப்ரம்மாவும் விஷ்ணுவும் போட்டி யிட்ட போது அடி முடி காணாமுடியாமல் ஸ்தாணு லிங்கமாக சிவன் வளர்ந்து ப்ரம்மா விஷ்ணு கர்வம் அழிந்து ஞானம் பெற்ற ஸ்தலம்.
இப்படிப்பட்ட அருணாச்சலத்தை அஷ்டகமாக 8 பாடல்களை ரமண மகரிஷி எழுதி இருப்பது நமது பாக்யம். அதை தான் இங்கே தருகிறேன்: பாடலை பதம் பிரித்து அன்வயமாக தந்துள்ளேன்: அர்த்தம் புரியும்:
1” அறிவு அறு கிரி என அமர்தரும். அம்மா, அதிசயம் இதன் செயல் அறி அரிது ஆர்க்கும். அறிவு அறு சிறு வயது அது முதல் அருணாசலம் மிக பெரிது என அறிவின் இலங்க, அது திருவண்ணாமலை என ஒருவரால் அறிவு உற பெற்றும் அதன் பொருள் அறிகிலன். அறிவினை மருள் உறுத்து அருகினில் ஈர்க்க, அருகு உறும் அமயம் இது அசலம் ஆ கண்டேன்”
”அருணாசலம் அமைதியான, ஞான மலை. எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ஆத்ம ஸ்வரூபம். சிறு வயது முதல் என் மனதில் ஆத்ம ஞானம் அறியாத போதும் என் ன்னுள்ளே ஒரு ஒளி வீசியவாறு என்னைக் கவர்ந்த சிகரம்.என்னால் புரிந்து கொள்ள முடியாத மிக உன்னத புனித மலை. திருவண்ணாமலை என்ற பெயரை கேள்விப்பட்டபோது அதனர்த்தம் தெரியாது. மஹத்வம் தெரியாது. அதை நெருங்கும் நேரம் வந்தபோது அசலம் என்றால் என்ன என்பது புரிந்தது.
2 ”கண்டவன் எவன் என கருத்தின் உள் நாட, கண்டவன் இன்றிட நின்றது கண்டேன். ‘கண்டனன்’ என்றிட கருத்து எழ இல்லை; ‘கண்டிலன்’ என்றிட கருத்து எழுமாறு என்? பண்டு நீ விண்டு இலை விளக்கினை என்றால், விண்டு இது விளக்கிடு விறல் உறுவோன் ஆர்? விண்டிடாது உன் நிலை விளக்கிட என்றே விண் தலம் அசலமா விளங்கிட நின்றாய்.”
அருணாசலத்தை காண்பவனாக நான் என் மனதில் காண்பது யார் என்று விசாரம் பண்ணுகையில் காண்பவன் எனும் எண்ணம் மறைந்தது. மனதில் நான் ”கண்டேன் ”எனும் எண்ணம் எழவில்லை.எப்படி நான் காணவில்லை என்று அதால் எண்ணமுடியும்? கண்டது, காண்பது, காணப்பட்டது என பேதம் எங்கே எழும்? அருணாச்சலம் அசலமாக அசைவின்றி உறைந்து ஞானமலையாகி நின்றது தக்ஷிணாமூர்த்தி மெளனமாக எல்லையற்ற ஞானமாக அமர்ந்ததாக தான் தோன்றும்.
3 ”யான் நின்னை உரு என எண்ணியே நண்ண, நீ தான் நிலமிசை மலை எனும் நிலையினை. உன் உரு அரு என உன்னிடில், விண் நோக்குற உலகு அலை தரும் ஒருவனை ஒக்கும். உன் உரு உனல் அற உன்னிட, முன் நீர் உறு சருக்கரை உரு என உரு ஓயும். என்னை யான் அறிவுற, என் உரு வேறு ஏது? அருண வான் கிரி என இருந்தோய் இருந்தனை.”
அருணாசலமே , நான் உன்னை ஒரு மலையுருவாக எண்ணினால் பூமியில் நீ மலையாக நிற்கிறாய். உருவுமின்றி. அருவமாக எண்ணிடில், யாரோ ஆகா சத்தை காண கால் போன போக்கில் திரிந்து அலைவது போல் உணர்கிறேன். உன் உருவை எண்ணாமல் நினைக்கும்போது ஆத்ம விசாரத்தில் நான் யார் என தேடுகையில் நீ சமுத்ரத்தில் கலந்த சர்க்க பொம்மை. நான் யார் எனஉணரும்போது எனக்கு உருவம் எது? நீயன்றி வேறு ஒரு உருவம் உண்டோ? ஸர்வ சாக்ஷியாக நிற்பது அருணாசலா நீ ஒன்றே.