காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்நங்கநல்லூர் J K SIVAN
மார்ச் 31, 2024 அன்று நண்பர் வரதராஜனுடன் காஞ்சிபுரம் சென்றேன். கூரம், தூசி மாமண்டூர் மற்றும் காஞ்சியில் சில கோவில்களை தரிசிக்க முடிந்தது. அதில் முக்கியமான ஒன்று காஞ்சியில் உள்ள அற்புதமான பெரிய சிவாலயம் காஞ்சி ஏகாம்ரேஸ்வரர் ஆலயம்.
காஞ்சிபுரம் ஏகாம்ரநாதர் கோயிலைத்தான் பழைய சமய நூல்கள் கச்சியேகம்பம் எனச் சொல்கிறது. பஞ்ச பூதஸ்தலம். மாமரம் தான் ஸ்தல விருக்ஷம். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதார க்ஷேத்ரம். சாக்கிய நாயனார் முக்தியடைந்த ஸ்தலம்.
அம்பாள் பெயர் ஏலவார் குழலி. சிவனை பூஜித்து வழிபட தவம் புரிய கயிலையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு வருகிறார். கம்பாநதி தீரத்தில் திருவருளால் மண்ணில் ஸ்வயம்புவாக எழுந்த சிவலிங்கத் திருவுருவை பூஜிக்கிறார். கம்பா நதியில் ஒருநாள் வெள்ளம் ப்ரம்மாண்டமாக உருவாக உமா தேவி பயந்து அந்த மண் சிவலிங்கத்தை இறுகத் தழுவ வெள்ளம் அடங்கி, அவள் பயம் நீங்கியது. காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் ஆலயம் மும்மூர்த்திகள் வழிபட்ட ஸ்தலம். ஏகாம்பரருக்கு இங்கே வெள்ளக்கம்பர், கள்ளக் கம்பர், நல்லக்கம்பர் எநிறு பெயர். அதைத்தவிர ஊருக்கே திருவேகம்பம் என்று பழைய நூல்களில் படிக்கிறோம்.
காஞ்சிபுரம் ஒரு புண்யஸ்தலம். இங்கே கச்சியேகம்பத்துடன், கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சி நெறிக் காரைக் காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்பு ஸ்தலமும் ஆக ஆறு சிவாலயங்கள் உள்ளன. கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் 1400 வருஷங்களுக்கு மேல் வயதானது., இரண்டாம் நரசிம்ம பல்லவன் கட்டியது. கோயிலில் பழைய கல்வெட்டுக்கள் கொண்டது. செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலாக முதலில் இருந்தது. எத்தனையோ ராஜாக்கள் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். தெற்கு வாயிலில் உள்ள பிரதான பெரிய இராஜ கோபுரம், விஜயநகர ராஜா கிருஷ்ண தேவராயர் கட்டியது. ஆயிரம்கால் மண்டபம் பிரமிக்க வைக்கிறது.
ஆலயத்தின் சிறப்பை திருவாவடுதுறை ஆதீன மாதவச் சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்த களிப்பு, ஏகம்பர் யமக அந்தாதி பட்டினத்தாரின் திருவேகம்ப முடையார் திருவந்தாதி ஆகியவை பாடுகின்றன. பட்டினத்தாரின் கச்சி ஏகம்பமாலையை மட்டும் தனியாக பதிவிடுகிறேன். அற்புதமான தத்வ பாடல்கள்.