பாட்டி வைத்தியம் – நங்கநல்லூர் J K SIVAN
சிவன் கோவிலில் பிரதோஷம். பாட்டி ஓரமாக நின்று ஸ்லோகம் சொல்லிக்கொண்டு அபிஷேகத்தை பார்த்து ஆனந்தப் பட்டுக்கொண்டிருந்தாள் . அவளைப் பார்த்து விட்ட சில மாமிகள் அவளை கேள்விகள் கேட்க முனைந்தார்கள்.
”அபிஷேகம் எல்லாம் முடியட்டும். ஈஸ்வரனை தரிசனம் பண்ணப்பறம் ப்ரஹாரத்திலே உந்கார்ந்துண்டு பேசுவோம் ”என்று அவர்களை அடக்கினாள் பாட்டி.அபிஷேகம், அர்ச்சனை, தரிசனம் முடிந்து பிரசாதம் வாங்கிக்கொண்டு துர்க்கை சந்நிதி எதிரே ஒரு மேடையில் அமர்ந்தாள் பாட்டி. கேள்விகள் ஆரம்பித்துவிட்டது.
”எங்காத்துக்காரருக்கு உதடு வெடிச்சு எரியறது . என்ன பண்ணலாம்?நம்ம தெருவிலேயே கருப்பண்ணன் கரும்பு சாறு விக்கிறான் பாரு.அவன் கிட்ட போய் கொஞ்சம் கரும்பு சக்கையை கேட்டு வாங்கு. அதை அடுப்பில் எரித்து சாம்பலாக்கி, அந்த பொடியை வெண்ணெயோடு கலந்து, உதட்டில் தடவிண்டே வா. ஆறே நாளில் உதட்டு வெடிப்பு குணமாகும்.
”குடல் புண்ணுக்கு என்ன பண்ணனும் பாட்டி?”
மஞ்சளை ஜலத்திலே தோய்ச்சு, குமுட்டி அடுப்பு தணலில் வாட்டி அது சாம்பல் ஆகணும். அந்த மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டா குடல் புண்னை ஆத்திடும் .
”பாட்டி , என் பிள்ளை சாமாவுக்கு வாயு தொல்லை ஜாஸ்தியா இருக்கு. ஏதாவது வைத்தியம் சொல்லுங்கோ ”
”ஆத்திலே வேப்பம் பூ இருக்குமே, அதை உலர்த்தி தூளாக பொடிச்சுக்கோ. அந்த பஸ்பத்தை வெந்நீரில் கொஞ்சம் போட்டு குடிச்சா வாயுதொல்லை நீங்கும். வயித்தில் இருக்கிற புண் நீங்கும்.
‘கோகிலா,ஏண்டி வயித்தை அமுக்கிண்டு கஷ்டப்படறே . என்னாச்சு உனக்கு?”வயத்து வலி தாங்க முடியலே பாட்டி”
”ஆத்துக்கு உடனே போ., வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி பண்ணி, மோரை கடைஞ்சு நீர்க்க அதோடு கலந்து ஒரு டம்ளர் குடி. வயித்து வலி குறையும். போயிடும். ரெண்டு நாள் குடிச்சா அப்புறம் வயத்தை வலிக்காது. ”எனக்கு மலச்சிக்கல் இருக்கே என்ன பண்ணலாம். தொந்தரவா இருக்கே.””செம்பருத்தி இலை பறிச்சு வெயிலே சத்த நேரம் வைச்சுட்டு பொடி பண்ணி தினமும் ரெண்டு வேளை சாப்பிடு. அப்புறம் மலச்சிக்கல் இருக்காது ”
”பாட்டி சீதபேதிக்கு என்ன கொடுக்கலாம்?”மலை வாழைப்பழத்தை வாங்கி நன்னா நசுக்கி, நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டா சீதபேதி குணமாகும்னு எங்க மாமியார் சொல்லி இருக்கா”.
”என்னடி உன் காலிலே இப்படி பித்த வெடிப்பு இருக்கே ஒன்னும் மருந்து சாப்பிடலியா நீ?
”என்ன சாப்பிடறதுக்கு தெரியலே பாட்டி””நாட்டு மருந்து கடையிலே இல்லேன்னா தோட்டங்களிலேயே கண்டங்கத்திரி இலையை பறிச்சு சாறை எடுத்து வெள்ளக்கார ஊர்லேருந்து வருதே பாட்டில் லே, ஆலிவ் எண்ணை, அதிலே காய்ச்சி தடவு. பித்த வெடிப்பு போயிடும் . வெள்ளைக்காரா, பணக்கார, ஆலிவ் எண்ணையை உடம்புலே பூசிப்பாள் னு கேள்விபட்டிருக்கேன்.
”அடிக்கடி மூச்சுப்பிடிப்பு லே கஷ்டப்படறேன் பாட்டி””சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இதெல்லாம் ஒண்ணுபோல ஒரே அளவா எடுத்துக்கோ. சாதம் வடிச்சு காஞ்சி இருக்கு பாரு,அதிலே கலக்கு. மறுபடியும் சுட வை. மூச்சு பிடிப்பு இருக்கிற இடத்திலே மூன்று வேளை தடவு . குணமாகும்.
பாட்டி கன்ஸல்டிங் அவர் முடிஞ்சுடுத்து. எழுந்துட்டாள். போங்கோடி , ஆத்திலே போய் பலகாரத்துக்கு அரிசி உப்புமா பண்ணனும். நாளைக்கு பாப்போம்.