பத்ரகிரியார் புலம்பல் – நங்கநல்லூர் J K SIVAN —
நம்பும்படி மட்டும் அல்ல, நம்ப முடிந்தால் தான் ஒரு விஷயத்தை உண்மை என்று ஒப்புக்கொள்ள முடியாது. நம்ப முடியாத சில ஆச்சரியங்களும் நடந்திருப்பது தான் உண்மை. வடக்கே ஒரு குப்த ராஜா, சன்யாசியாகி தெற்கே வந்து பர்த்ருஹரி என்ற அவன் பெயர் திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி கோவில் வாசலில் பட்டினத்தாரின் சிஷ்யனாக உட்கார்ந்து நமக்கு பத்ரகிரியாராக இருப்பது உண்மைதானே. நம்ப முடிகிறதா இதை?
ஒரு மனிதன் எதிர்பார்த்தது, கனவு கண்டது , எல்லாம் கை வராமல் போனால் விரக்தி வருகிறது. பெருத்த ஏமாற்றம் அவனை உலுக்கி, உள்ளிருக்கும் அறிவை ஆட்டுவிக்கிறது. தான் செய்த குற்றம் தான் ஒருவனை கடைசிவரை முள்ளாய் குத்தி குதறி அவனை அமைதி இழக்கச் செய்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம்? எது காரணம்? துன்பம் வரும்போது மட்டும் கடவுளை நினைக்கச் செய்கிறதே. அது எது? ஞானம் பிறக்க தியாகம் தேவையாயிருக்கிறதே!
இதெல்லாம் ஒருவன் தன்னுள் தானே நோக்கி அலசுவதன் வெளிப்பாடு. உள்ளே சுத்தமானால் வாயில் வார்த்தை ஞானமாய் புறப்படுகிறது. பார்வை சமமாகிறது . எண்ணம் தெளிவாகிறது. ராஜா சீர் பட்டு விட்டான்! புரிந்து கொண்டுவிட்டான் எது தேவை எது தேவையல்லாதது, எது நிரந்தரம், எது அழிவற்றது, எதைப் பிடிக்க வேண்டும்,. எதை விடவேண்டும், எதில் நாட்டம், எதில் நோக்கம், என்று எல்லாம் தேடல் உள்ளே ஆரம்பித்துவிட்டதே அதுவே பர்த்ருஹரி என்கிற பத்திரகிரியார் புலம்பல். ஒவ்வொரு எழுத்தும் தத்வம்.
“நீரில் குமிழ்ப்போல் நிலையற்ற வாழ்வை விட்டு உ ன்
பேரில் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்?
நீர்மேல் காற்று வண்ண வண்ண குமிழ் களை உண்டாக்கி கண்ணைப் பறிக்கிறதா. சில வினாடிகளில் உடைந்து நீரோடு காத்து காணாமல் போகிறது. அது தான் உலக வாழ்க்கை. இதை சாஸ்வதம் என்று நம்பாமல் உன்னை நம்பி சரணடைந்து,உன் கருணை வெள்ளம் என் மேல் எப்போது பெருக்கெடுக்குமோ?
‘அன்பைஉருக்கி, அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடர் அ றுப்ப தெக்காலம்?
எல்லா உயிர்களும் நீயே என்றுணர்ந்து, அந்த ஞானத்தால் உன் மேலான அன்பை எல்லா உயிர்கள் மேலும் செலுத்தி உலக துன்பங்களிலிருந்து விடுபட பாசம் நேச பந்தங்களை அறுத்து உய்வது எப்போது?
”மனதை ஒரு வில்லாக்கி, வான் பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி, எய்வதினி எக்காலம்?
நான் ஒரு புது அம்பு விடவேண்டும். என் மனது தான் வில். அதில் விண்ணிலே காணும் உன் மேல் பக்தி தான் நாண் . எனக்கு நீ அளித்த அறிவு தான் அம்பு. அது கொண்டு செல்வது தான் சகல உயிர்கள் மேலும் அன்பு. என் அம்பு எப்போது செல்லும்?
”அருணப்பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம்?
இதோ காலையில் சூரியன் உதித்துவிட்டான். ப்ரபஞ்சம் பூரா அவனுடைய பொன்னொளியில் குளிக்கிறது. அது போல உன் கருணை வழங்கும் திருவடியில் நான் முழுதுமாக என்னை இழந்து சேர்வது எப்போது?
”பொன்னில் பலவிதமாம் பூடணம்உண் டானதுபோல்
உன்னில் பிறந்து உன்னில் ஓடுங்குவதும் எக்காலம்?
தங்கம் ஒன்று தான். அந்த உலோகத்தை உருக்கி அடித்து, உருட்டி, வளைத்து, நசுக்கி, மெருகூட்டி பல வித கண்கவரும் ஆபரணங்களை உருவாக்குவது போல், உன்னிலே பிறந்து, உன்னால் வளர்ந்து, உன் வழியே வாழ்ந்து முடிந்து உன் திருவடியையே நான் மீண்டும் சேர்வது எப்போது?
”சூரியனின் காந்தஒளி சூழ்ந்துபஞ்சைச் சுட்டதுபோல்
ஆரியநின் தோற்றத்து அருள்பெறுவ தெக்காலம்?
சூரியனின் சுடரொளி பஞ்சை நெருங்கி அதை சுட்டெரிப்பது போல, பகவானே, உன் திவ்ய தரிசனம், அருள் பெற்று என்னிடம் உள்ள அகம்பாவம், அஞ்ஞானம் எரிந்து மறைவது எப்போது?
”கருக் கொண்ட முட்டை தனை கடல்ஆமை தான் நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல் உனைஅடைவை தெக்காலம்?
ஆமை கடலிலிருந்து கரைக்கு சென்று பள்ளம் தோண்டி முட்டையிட்டுவிட்டு கடலுக்கு திரும்பிவிடும். கடலிலிருந்து தனது முட்டையை நினைத்து அது தக்க காலத்தில் பொரிந்து அதிலிருந்து ஆமைக்குஞ்சு கடலுக்கு நடந்து வந்து தாயைச் சேறும். அது போல் நான் உன்னிலிருந்து வந்தவன். உன்னையேஅடையவேண்டும். அதற்கு உன் சங்கல்பம் எனக்கு எப்போது கிடைக்கும்?
”கடைந்த வெண்ணெய்மோரில் கலவாத வாறதுபோல்
உடைந்து தமியன்உனைக் காண்பதுவும் எக்காலம்
பால் தயாராகி, தயிரைக் கடைந்து மோர் ஆகி, மோர் மேல் அதிலிருந்து உருவான வெண்ணை மிதக்கிறது. மோரோடு சேர்வதில்லை. நான் உன்னிலிருந்து உதித்தாலும், மோரிலிருந்து வெண்ணைபோல் இந்த உலக பந்தங்கள், மாயையிலிருந்து விலகி, அதோடு சேராமல் உன்னை வந்து அடைவது எப்போது?