உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி
29 ஆத்ம ஸாக்ஷாத் காரம்
”நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா
னானென்றெங் குந்துமென நஞானநெறி–
யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை
யாமதுவி சாரமா மாவமீமுறையே” 29
”தேகம் நான் இல்லை” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் மனதில் பதியும். ” நான்” என்பது யார்? என்ற ஆத்ம விசாரத்தை பற்றி சொல்லும்போது முதலில் இந்த தேகத்தை ”இது , ஒரு சவம் ” என்று புறக்கணிக்க முடிகிறதா? வாய் வார்த்தையாக நான் என்று சொல்லாமல் உண்மையில் இந்த நான் யார்? எங்கிருந்து இது உற்பத்தியாகிறது என்று உள் நோக்கி கவனிப்பது தான் ஞானத்தை தேடுவது.
வாயினால் அளவில்லாமல் ”நான்” இந்த தேஹமல்ல , மனம் அல்ல, பிராணன் அல்ல, ப்ரம்மம் என்று மனதளவில் மட்டும் சொல்வதும் தியானிப்பதும், உண்மையில் ஞான விசாரம் அல்ல. உண்மையாக உள் நோக்கி பிரயாணித்து அதை அலசி தேடுவது, அஹம்பாவம் எனும் அகந்தை தான் நான். அதை உருவாக்குவது மனம் என்று அறிந்து அதையும் விலக்குவது தான் ஞானவிசாரம்.
பட்டினத்தாரின் ஒரு எளிமையான அற்புத அர்த்த புஷ்டியான ஒரு பாடல்:
”ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே – மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.
உடலைச் சடலம் என்று முழுசாக, உயிரோடு இருக்கும்போதே யாருக்கு நினைக்கத் தோன்றும். அப்படி நமக்கு தோன்றினால் அநேக பட்டினத்தாரை நாம் தினமுகம் சந்திக்கலாம். அப்படி நினைக்க நெஞ்சத்தில் தைர்யம் வேண்டும். மரணம் என்றால் ஏற்படும் பயம் போகவேண்டும். ஈஸ்வரன் மேல் சிந்தை ஓட்டினால் தான் அப்படி நினைக்க தோன்றும். பற்று அற்றற்றவனால் தான் ”செத்தவர்களைப் போல திரிய முடியும்”. ஈஸ்வர சங்கல்பமும் வேண்டும். ரமண மகரிஷிக்கு 16- 17 வயதிலேயே உடலின் மரண அனுப வம் கிடைத்தது.