ஸூர்தாஸின் பக்தி – நங்கநல்லூர் J K SIVAN
மாலத்தீவில் நான் வசித்தபோது நல்ல வெய்யில் சுள்ளென்று உறைக்கும். சிறிய தீவு என்பதால் எல்லோரும் நடந்தோ சைக்கிளிலோ தான் செல்வார்கள். அமைச்சர்கள் அதிகாரிகள், சாதாரணர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்த அடுத்த வீட்டுக்காரர்களாகவோ சொந்தக்காரர்களாகவோ தான் இருப்பார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் வானம் பொத்துக்கொண்டது போல் மழை பெய்யும். தரையில் எங்கும் தண்ணீர் தேங்காது. பவழப் பாறைகளாலான தரை என்பதால் அத்தனை நீரையும் ஒரே உறிஞ்சு உறிஞ்சி நீர் காணாமல் போகும். சேறு இருக்காது. புல் முளைக்காது. காக்கை பறக்காது. நாய் பார்க்க முடியாது. யானை எருமை என்னவென்றே தெரியாது. எங்கு போனாலும் எல்லோர் கையிலும் ஒரு குடை இருக்கும். இப்படி திடீர் திடீர் என்று மாறி மாறி வரும் சீதோஷ்ணம் ஏன் ஞாபகத்துக்கு வந்தது என்றால் கிருஷ்ணனும் ராதையும் அப்படி உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவர்கள். எப்போது விளையாடுவார்கள், எப்போது சண்டை வரும், எப்போது ஒருவரை ஒருவர் மீண்டும் தேடுவார்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவார்கள், நீ முதலா, நான் முதலா என்று எல்லாம் சொல்லவே முடியாது.
பிருந்தாவனத்தில் பண்டீர வனத்தில் ஒருநாள் பொன்னிற மாலைப் பொழுது. கிருஷ்ணன் ஆனந்தமாக கதம்ப மரத்தடியில் அதன் உயரமான வேரில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்தவன் சட்டென்று வாசிப்பதை நிறுத்தி எதையோ உற்று தனக்குள் கவனித்துக் கொண்டிருக்கிறான்.
“கிருஷ்ணா, ஏன்ன ஆச்சு உனக்கு ஏன் உன் தலை எதையோ ரசித்தவாறு அசைந்து கொண்டிருக்கிறது?” ராதை கேட்கிறாள். “……….”
உன்னைத்தான் கிருஷ்ணா, நான் கேட்பது உன் காதில் விழவில்லையா?”
“………”
” கிருஷ்ணா” என்று உரக்க கூவின ராதை, அப்படி என்ன ரொம்பவுமே ரசித்து கேட்டுகொண்டிருக்கிறாய்? கிருஷ்ணன் தோளை அசைத்து ராதை கேட்டாள்.
” ஆஹா! என்னமா பாடறார் அவர். என்னை எப்போதும் கட்டி போட்டே வைத்து விடுகிறார். விடுபட முடியவில்லையே?” என்றான் கண்ணன்.
” எப்பவும் சூர்தாஸ் சூர்தாஸ் என்று ஒரு குருட்டுத் தாத்தாவைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறாயே அப்படி என்ன
சூர்தாஸ் உன்னை மயக்கி வைத்திருக்கிறார்? நானே சென்று அவரைப் பார்க்கிறேன் என்று ராதை சொல்ல “நீ அவர் கிட்டே போகாதே, வேண்டாம் போகாதே” — கிருஷ்ணன் தடுத்தான்
“ஏன் அவர் கிட்டே போக கூடாது? கண்டிப்பாக போகபோகிறேன்” சூர்தாஸ் பாடிக்கொண்டிருந்த கோவிலுக்கு ராதை செல்கிறாள். பிறவிக் குருடரான சூர்தாஸ் அருகில் அவள் போய் நின்றதும் அவளது கொலுசு சப்தத்தின் தெய்வீக நாதம் எழுப்பியதும் உணர்ந்த சூர்தாஸ் கையை நீட்டி அவள் காலைத் தொட்டு . கொலுசை பிடித்துகொண்டார்.
“விடுங்கள் என் காலை” என்றாள் ராதை. ஸூர்தாஸ் ராதையின் கால் கொலுசை விடவில்லை அவர்.
“தாத்தா நான் ராதை , கிருஷ்ணனைச் சேர்ந்தவள், காலை விடுங்கள் ” .
“எனக்கு நீ யார் என்று தெரியாது. பார்க்கவும் முடியாது. போய் கிருஷ்ணனை வரச்சொல், அழைத்துக் கொண்டு வா. அதுவரை உன் கொலுசு என்னிடம் ஜாக்கிரயாக இருக்கும்” . ராதையின் காலிலிருந்து கொலுசை உருவி எடுத்து வைத்துகொண்டார்.
ராதை ஓடினாள். கிருஷ்ணனோடு வந்தாள். கிருஷ்ணன் பரமபக்தனான ஸூர்தாஸின் பக்தியை மெச்சி பார்வை அளித்தான். ஸூர்தாஸ் உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள்” என்றான்.
” கிருஷ்ணா, நான் உன்னைப் பார்த்ததே இல்லை. காது நிறைய உன்னை பற்றிக் கேட்டிருக்கிறேன் வாய் நிறைய உன்னை பாடிக்கொண்டே இருக்கிறேன் கண் கொடுத்த உன்னை கண் நிறைய பார்த்து விட்டேன் எனக்கு வேண்டியது கிடைத்து விட்டது .இந்த உலகில் நான் பார்க்கவேண்டியது எதுவுமே இல்லை. இத்தனை வருஷம், நான் கண் பார்வை இல்லாமலேயே வாழ பழகிவிட்டேன். தயவு செய்து என்னை மீண்டும் குருடனாக்கிவிடு. உன்னை பார்த்த கண்ணால் வேறு எதையும் நான் பார்க்க விரும்பவில்லை”
“ அம்மா என் தாயே, ராதா, என்னிடம் வா. உன் காலை நீட்டு. நானே போட்டுவிடுகிறேன் உனக்கு கொலுசு” கண்ணனும் ராதையும் திரும்பும்போது ராதை கிருஷ்ணனிடம் ஸூர்தாஸ் பற்றியே வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
”ராதா, இதற்கு தான் சொன்னேன் ஸூர்தாசை போய்ப் பார்க்காதே, ஸூர்தாஸிடம் போகாதே வேண்டாம் ” என்று. அப்புறம் நீ என்னைப் பற்றியே பேசமாட்டாய் என்று எனக்கு தெரியும். புரிகிறதா? என்றான் கண்ணன்.