கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆற்றுப் படலம்
கம்ப ராமாயணத்தில் பால காண்டம். அயோத்தியா காண்டம். ஆரணிய காண்டம். கிஷ் கிந்தா காண்டம். சுநீதர காண்டம். யுத்த காண்டம் என ஆறு காண்டங்களில் மொத்தம் 28000 பாடல்களுக்கு மேல் கம்பர் இயற்றியிருக்கிறார். அத்தனையும் நாம் இங்கே பகிரப்போவதில்லை. முக்கியமான சில பாடல்கள் மட்டும் ஜனரஞ்சகமாக கவிதை நயத்தோடு எளிமையாக இருக்கும் சிலவற்றை அறிவோம்.
12. ஆசுஅலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.
கோசலநாட்டில் ஓடும் நதி சரயு. அதன் அழகை முதலில் வர்ணிக்கிறார் கம்பர். வளமான நாடு. நேர்மையான ஆட்சி புரியும் அரசன். எல்லோரும் சந்தோஷமாக நன்னடத்தையோடு நெறி பிறழாது வாழும் பிரதேசம்.
13. நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று. ஆர்கலி மேய்ந்து. அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டகே.
சிவபெருமானின் நெற்றியில் ஒளிவீசும் வெள்ளை திருநீறு போல் மேகங்கள் சரயுவின் மேல் இருந்து புறப்பட்டு கடலை அடைந்து நீராவி பெற்று கரிய மேகங்களாக கோசலத்தில் மீண்டும் திரும்பிவந்து மாரியாக பொழிந்து மீண்டும் சரயுவின் மேல் சிவனின் வெள்ளை திருநீறு போன்ற மேகங்களாக காட்சி அளித்ததாம்.
14. பம்பி மேகம் பரந்தது. “பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றதும்” என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.
சமுத்ரத்துக்கு நதி பதி என்று பெயர். நதிகளின் கணவன். கடலுக்கு மாமன் மலைகள். அங்கிருந்து தானே ஆறு பெருகுகிறது. ஆகவே கடலிலிருந்து புறப்பட்ட மேகம் மலைகள் மேல் ஆசையாக நின்று மழையாக பொழிந்து ஆறு உருவாகிறது . கடல் நீர் மேகம் மாமன் மலையின் உஷ்ணத்தை குளிர்விக்க கருமேகமாக மலை மேல் நின்று மழை பொழிந்தது.
15. புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி. வான்.
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்.
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின். வழங்கின – மேகமே.
சூரிய ஒளியில் ஹிமாச்சலம் தங்கமயமான ஜொலிக்கிறது. வானத்துக்கும் இமய உச்சிக்கு இடைவெளி இல்லாமல் மேகம் நிறைத்தது.