பூணல் – நங்கநல்லூர் J K SIVAN
பூணல் பிராமணர்கள் மட்டுமல்ல மற்ற சில வகுப்பினரும் அணிவது தெரிந்ததே. பூணல் என்றால் அணிவது, தரிப்பது என்று .அர்த்தம். பூ நூல் என்று மெல்லிய பருத்தி நூலை முப்புரியாகி அணிவதையும் குறிக்கும். வேதகாலத்தில் ஐந்து வயகத்தில் பூணுல் போட்டுவைப்பார்கள். உபநயனம் என்று அதற்கு பெயர். ப்ரம்மோபதேசம் என்று தந்தையால் மகனுக்கு உபதேசிக்கப்படும் மந்திரத்தோடு பூணல் அணிவிப்பது சம்ப்ரதாயம். உப நயனம் என்றால் ப்ரம்மத்துக்கு அருகில் அழைத்துச் செல்வது என்று பொருள். வருஷா வருஷம் ஆவணி மாதம் அவிட்டம் நக்ஷத்ரத்தன்று உபகார்மா என்ற சடங்கு, பூணுலை புதுப்பித்துக் கொள்வது வழக்கம். அவரவர் குல, குடும்ப வழக்கம் அவர்கள் பின்பற்றும் வேதம் ஆகியவற்றை பின்பற்றி பூணல் அணிந்து கொள்கிறார்கள்.
நீங்க என்ன வேதம்?நாங்க சாம வேதம், ரிக் வேதம், யஜுர்வேதம் என்று பதில் சொல்கிறோம் ஆனால் அந்த வேதம் என்னஎன்பது பற்றி தெரியாது. அறிந்து கொள்ளவும் விருப்பமோ, நேரமோ இல்லை என்பது பரிதாபமான விஷயம்.
ஆவணி அவிட்டம் உபாகர்மா ஆற்றங்கரை, குளத்தங்கரை, கோவில்கள் என்று பொது இடத்தில் கூடி கொண் டாடப் பட்டது. இப்போது அநேகர் அவரவர் வீட்டுக்குளேயே. சிலர் வாத்தியார் உதவியுடன், சிலர் ஆன்லைன் வாத்யார் உதவியோடு மொபைல் பார்த்துக் கொண்டே பூணல் போட்டுக்கொள்கிறார்கள்.
உபாகர்மா என்றால் வருஷா வருஷம் ”ஆரம்பிப்பது’’ என்று அர்த்தம். எதை? வேதங்கள் கற்பதை.அன்று பூணலை புதுப்பித்துக் கொள்கிறோம். இதற்கு சில விதி முறைகள்.
ஆவணி அவிட்டம் எனும் உபா கர்மாவை யஜுர் வேதக் காரர்கள் ஆடி, பௌர்ணமி என்று கொண்டாடுகிறார் கள். அதாவது ஆவணி பிறப்பதற்கு முன்பே ஆவணி அவிட்டம் என்று பெயர் அதற்கு.
ரிக் வேதக்காரர்கள் அவிட்ட நக்ஷத்ரம் என்றைக்கோ அன்று கொண்டாடுகிறார்கள். சாம வேதக்காரர்கள் அப்புறம் கிருஷ்ண பக்ஷ ஹஸ்த நக்ஷத்ரத்தன்று என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உபாகர்மா வுக்கு அடுத்தநாள் காயத்ரி ஜபம். அதைப் பற்றி தனியாக சொல்கிறேன்.
மஹா விஷ்ணு ஹயக்ரீவராக குதிரை முகத்தோடு புறப்பட்டு, ப்ரம்மதேவனிடமிருந்து வேதங்களை திருடிக்கொண்டு சென்ற மது கைடபர்களை தேடி கண்டுபிடித்து யுத்தம் செய்து வென்று வேதங்களை மீட்ட நாள் என்பது ஐதீகம். இதனால் ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் பெயர் உண்டு.
பிராமண குழந்தைகளுக்கு ஐந்து, ஏழு எட்டு வயதில் உபநயனம் செய்யும் வழக்கம் விட்டுப் போய்விட்டது. கல்யாணத் தன்றே பூணல் போட்டுக் கொள் பவர்கள் அநேகர் இப்போது. சமீபத்தில் ஒரு நண்பர் மகனுக்கு எழுவயதில் உபநயனம் நடந்தது.தலையில் குடுமி, சாஸ்திரத்தில் நம்பிக்கை கொண்ட வாத்யார் வீட்டு பையன். இடையில் கோவண தாரியாக மேடையில் பளபளவென்று நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் உத்ராக்ஷத்தோடு அவனுடைய தேஜஸ் நிறைந்த முகத்தைப் பார்த்து ‘பகவானே ‘என்று வேண்டினேன்.
வேத காலத்தில் அதி புத்திசாலி யாக, மஹா மேதாவி யாக ஞானம் நிறைந்த குழந்தை களுக்கு ஐந்து வயதில் உபநயனம் செய்வித்தார்கள். இந்த ரகம் முக்கால் வாசி ரிஷி குமாரர்கள்.
உபநயனம் என்பதில் ரெண்டு கார்யங்கள் இருக்கிறது. ஒன்று பூணூல் தரித்த பின் ஆசாரம், ஒழுக்கம் கண்டிப் பாக பின்பற்ற வேண்டும். இந்த ஸம்ஸ் காரம் ஒருவ னை ஆன்மீக உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது
ரெண்டாவது உபநயனத்தில் பூணூல் போட்டுக் கொண்டவன் ஒரு பெரியவரிடம், அப்பாவிடம், குருவிடம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க முற்படுவது. உள்ளும் புறமும் சுத்தமாயும், பவித்ர மாகவும் இருப்பதற்காக தான் பூணல். இது தான் சார் உபநயனம், ப்ரம்மோ பதேசம் . உப நயனம் என்ற வார்த்தை களுக்கு காயத்ரீ மந்திரத்தை கற்றுக் கொள்ள குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல் என்று அர்த்தம்
வேதத்தை ஓதி தர்ம சாஸ்திரங்கள் அர்த்தம் புரிந்து கொள்ள தெரிந்து கொள்ள உத்தராயணம் எனும் ஆறு மாச காலம். தை மாதத்திலிருந்து ஆனி வரை உத்தராயணம். ஆடி முதல் மார்கழி வரை தக்ஷி ணாயனம்.
ஆடி அமாவாசைக்கு பிறகு ஆவணி எனும் ஸ்ராவண மாசம். ஆவணி மாசம் என்று கணக்கு . பௌர்ணமி அன்று ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்வது வழக்கம். இதுவரை பூணலை ஆணியில் மாட்டி வைத்துவிட்டு என்றாவது ஒருநாள் வாத்யார் போட்டுக்கொள் என்று சொன்னபோது தேடி போட்டுக்கொள்வது நின்று போகட்டும். பூணல் முதுகு சொரிந்து கொள்ள ஒரு சாதனம் என்ற எண்ணமும் வேண்டாம்.கொஞ்சமாவது அதன் தாத்பரியம் உணர்ந்து பயன் பெறுவோமே. நமது முன்னோர்கள் அனுபவத்தில் கண்டு பயனடைந்தவர்கள் சொல்வதை மதித்து பின்பற்றுவது நமது கடமை அல்லவா? அர்த்தம் புரிந்தால் எந்த மந்திரமும் ஆர்வத்தை ஊட்டும்.