THIRUPPALLI EZHUCHCHI J K SIVAN

திருப்பள்ளியெழுச்சி –  நங்கநல்லூர்  J K  SIVAN
மணிவாசகர்

மார்கழி 23ம்  நாள் 

திருப்பெருந்துறை எனும்  ஆவுடையார் கோவில் நமக்கு கிடைத்தது  மணிவாசகரால் தான். ஆத்மநாதர்  யோகாம்பாள் தரிசனம் அற்புதமாக பெறுகிறோம்.  இந்த ஆலயத்தைப் பற்றி சில ருசிகர தகவல்களைக் கூறிவிட்டு  ஆத்ம நாதரை துயிலெழுப்ப  திருப்பள்ளி
எழுச்சி  மணிவாசகரோடு சேர்ந்து  பாடுவோம்.

”கடல் கிழக்கு, தெற்கு  கரை பெரு வெள்ளாறு,
குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில்
ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோனாட்டிற் கெல்லை யெனச் சொல்”  

சோழநாட்டின் எல்லையை மணிவாசகர் பாடுகிறார் இப்படி.

”வெள்ளாறது வடக்காம், மேற்குப் பெரு வெளியாய், தெள்ளார் புனற்கன்னி தெற்கா கும் – உள்ளார ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்பாண்டிநாட் டெல்லைப் பதி”  என்று கம்பரும்  சோழநாட்டின்  எல்லையை குறிப்பிடுகிறார்.

திருப்பெருந்துறை சிவனான ஆத்ம நாதர்   கோவிலில் கொடி மரம்,  பலி பீடம், நந்தி இல்லை கர்பகிரஹத்தில் லிங்கம் இல்லை. லிங்கமற்ற ஆவுடையார் மட்டும் தான். ஏதோ பூதங்கள் வந்து பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள், சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியதாக ஒரு தகவல். சிறந்த சிற்ப பொக்கிஷம்.  வாழ்வில் ஒரு தரமாவது தரிசிக்க வேண்டிய புனித  ஆலயம்.   எனக்கு இன்னும்   அந்த பாக்யம் கிட்டவில்லை.

இந்த ஆலய மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கல் சங்கிலி அற்புதமாக செதுக்கப் பட்டு உயரத்தில் தொங்குவதால் நமது விஷ(ம)க்  கைகள் படாமல் காப்பாற்றப்  பட்டிருக்கிறது.

நமது ஹிந்து சனாதன தர்மத்துக்கு நீர் வார்த்து வளர்த்தவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள்  தவிர  சைவ சமய குரவர்கள்  எனப்படும்  நான்கு  பெரும்  தூண்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிவாசகர் ஆகிய  நால்வர்.  இதில் மணிவாசகர்.  திருவாதவூரில் பிறந்ததால்  வாதவூரன் என்ற இயற் பெயர்  கொண்ட  பாண்டிய நாட்டில் ஒரு பிராமண குடும்பத்தில் உதித்தவர்.  இளமையிலேயே  சிவ பக்தி, ஞானம்  கொண்ட இவரை  ராஜா  அரிமர்த்தன பாண்டியன் தனது   ராஜ்யத்தின் தலைமை மந்திரியாக  நியமித் தான்.  சித்தத்தை   சிவன் பாலே  வைத்திருந்த  வாதவூரரை  பாண்டிய  மன்னன்  ஒரு நாள்  அழைத்தான்.

”வாதவூரரே ,  நாம்  குதிரைகள் வாங்கி  நமது குதிரைப் படையை பலப்படுத்த வேண்டிய  அவசியம் வந்துள்ளது.   நீரே இதற்கு தக்கவர். உமக்கு  தான் எங்கே நல்ல குதிரைகள் கிடைக்கும்,  அவற்றின்  தரம், மதிப்பு,  எவ்வளவு குதிரைகள் நாம் நமது படை வலிமைக்குப்  பெற வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்யும் தன்மை உண்டு.  எனவே இந்த முக்யமான பொறுப்பைத் தங்களிடம் விடுகிறேன். இதோ அரசாங்க கஜானா வின் செல்வம்  தங்கக்காசுகள் கொண்ட  பைகள்.  இதை செலவழித்து நல்ல குதிரைகள்  வாங்கிக்  கொண்டு வாருங்கள்  ”

‘அப்படியே  செய்கிறேன் மன்னா”   என்றார்  வாதவூரார்.
‘வாதவூரரே  நீர்  எந்த காரியத்தையும் புத்திசாலித்தன மாக சிந்தித்து ஆராய்ந்து செய்பவர் . எனவே நமக்கு நல்ல குதிரைகள் சீக்கிரமே கிடைக்கும்படி செய்ய வேண்டும் ” என்றான் ராஜா.

பொற்காசு மூட்டைகளுடன், ஆள் படையுடன் குதிரை களைத் தேடி  புறப்பட்ட வாதவூரர்  சிவனை வேண்டி னார்.

‘சோமசுந்தரா, எல்லாம் உன் சித்தம். நாட்டைக்  காக்க குதிரை. என் மனக் குதிரையை  அடக்க ஒரு  குரு. ரெண்டையும் தேட இது நல்ல சந்தர்ப்பமாக  அமையட் டும்”.

மதுரை சொக்கனின் விபூதியை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு கிளம்பினார்.  திருப்பெருந்துறை  எனும் ஊரை  இருட்டுக்கு முன் சென்று அடைகிறார்.

‘இந்த ஊர்  அமைதியாக  இருக்கிறது.   இன்று இங்கேயே தங்குவோம்” .  

வாதவூரரை  ஏதோ காந்தமாக திருப்பெருந்துறை கவர்ந்தது.  திருப்பெருந்துறை  ஈசன்  ஆத்மநாதனின்  முடிவல்லவா அனைத்தும்.  சிவனுக்கு  வாதவூரர்  அங்கே தங்குவதில்  பரம  சந்தோஷம் . ”இதோ வந்து விட்டான் என் வாதவூரன். என் மனம்  கவர்ந்த பக்தன்  எனக்கு கிடைத்துவிட்டான்”  என  ஆத்மநாதன் மகிழ்ந்தான்.
”இங்கே சிவன் கோவில் ஏதாவது உள்ளதா?
 சிவனடியார்கள், ஞானிகள் யாரேனும் உள்ளனரா?”-   வாதவூரர் அந்த ஊர்க்காரர்களைக்  கேட்கிறார்.

”ஐயா,  சற்று தூரத்தில் ஒரு குருந்த மரத்தடியில் ஒரு முதிய சிவனடியார்   எப்போதும் அமர்ந்து இருக்கிறார். யாருடனும் பேசுவதில்லை.   அவரைப் போய்  பாருங்கள்”’
 ஒரு வயோதிக பிராமணர் கையில் சிவ ஞான போதம் என்ற ஓலைச்  சுவடியை வைத்துக் கொண்டு ஒரு குருந்த மரத்தடியில் உற்கார்ந்திருந்தார்.   அருகே  ஒரு  பழைய கால சிதில மடைந்த சிறிய சிவன் கோவில். அந்த சாதுவைச் சுற்றிலும்  சில  சிஷ்யர்கள்.அந்த   பழைய  சிதிலமான  பெருந்துறை சிவன் கோவில்   உள்ளே  நுழைந்தார் வாதவூரர். சிலையானார். ஆத்ம நாதர் வாதவூரர் ஆத்மாவில் கலந்தார். கண்களில் பிரவாஹம்  பொங்கியது.   அந்த கோவிலைக்  கால்கள்  பல ப்ரதக்ஷணங்கள்  சுற்றின.   ‘ ஹர ஹர மஹாதேவா    ஓம்  நமசிவாய”   என்ற சப்தம் காதில் ரீங்காரமிட்டுக்  கொண்டே  இருந்தது.   மனம் பாகாய் உருகியது. சற்றுத்  தள்ளி இருந்த ஒரு குருந்த மரத்தடியில் சிவந்த மெலிந்த வெண் தாடி சடை முடியோடு ஒளி வீசும் கண்கள் ”வா   உனக்காகவே  காத்திருந்தேன்  வா ”  என  அழைத்தன.

கன்றுக்குட்டி தாயிடம் சென்றது. நீண்ட நாள் தேடிய தாய் சேய்க்கு கிடைத்து விட்டாள். வாதவூரர்  தடாலென் று அந்த பிராமண சாது காலடியில் வீழ்ந்தார். இவரே என் குரு என அறிந்து மகிழ்ந்தார். வார்த்தைகள் வெளி வரவில்லை.    ”சிக்” கென’ ப் பிடிக்கத் தான்  அவருக்குத் தெரியுமே.

குருவின்  கால்களை பிடித்துக்கொண்டு ”ப்ரபோ, என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு அருள்வீராக” என்று கெஞ்சினார்.

”நான் இதற்காகத்  தானே வந்து காத்திருக்
கிறேன்”
ஆத்மநாதர்   முதியவர்  வடிவில் மனதில் மகிழ்ந்தார் .வாதவூரர் பாதாதி கேசம் வரை ஏதோ   ஒரு புரிபடாத சக்தி தன்னுள் புகுந்ததை  உணர்ந்தார். சிவஞானம் அவரை ஆட்கொண்டது.   வானில் மேகக்கூட்டத்தில் பார்க்கும் இடத்தில் எல்லாம்   கரிய சிவலிங்க கூட்டங் கள். அத்தனைக்கும்  மழை அபிஷேகங்கள்.  இடி எனும்  பேரிகை, உடுக்கு, மத்தள முழக்கம். சிவகணங்கள் கண்ணுக் கெட்டிய வரை பேரானந்தத்தில் ஆழ்த்து கிறார்கள்.  முனிவர்கள், ரிஷிகள், மானுட பக்தர்கள் வெண்ணிற பூச்சோடு…….செருகியி ருந்த  கண்கள் திறந்தன.   மீண்டும்  லேசாக  அரை பாகம்  மூடின ….நினைவு அழிந்தது. மீண்டும் நினைவு பெற்றபோது தான் குருநாதர் திருவடிகளில் மயங்கிக்  கிடப்பதை வாதவூரர் உணர்கிறார்.

”குருநாதா, பரம்பொருளே, என்னை ஆட்கொண்ட தெய்வமே, என் நெஞ்சத்தை  உருக்கி என்னை சிவமாக்கிய செல்வமே, எல்லாம் உன் உடைமை யே, எல்லாம் உன் அடிமையே, எல்லாம் உன்னுடைய செயலே’  என்று தனது ஆபரணங்கள் செல்வங் கள் அனைத்தையும் அந்த   குருவின்  பாதத்தில் சமர்ப் பித்தார்.  சகலமும் துறந்தவர்  துறவியானார். த்யானத்தில்  மனம் லேசானது. கண்களில் பரவசம். மணிப்ரவாளமாக சிவ ஸ்துதி நாவில்  பெருக்கெடுத்துப் பாடல்களாக  உருவெ டுக்க  அருமைத்  தீந்தமிழில் சிவனைத்  துதித்து  வாசகங்கள்  மணி மணியாக வெளிவந்து அவற்றை மாலையாக சிவனுக்குச் சூட்டினார்.

”அப்பனே, வாதவூரா, நீ  ”மணி வாசகனடா”. இங்கேயே இரு ”
ஆத்மநாதர் அன்போடு அழைத்தார். நமக்கு மணிவாசகர் கிடைத்தார். கண் மூடி குருவை கீழே விழுந்து வணங்கிய மணிவாசகர் கண் திறந்து எழுந்தபோது ப்ராமண முதியவரைக்  காணவில்லை. கதறினார். பக்தி பரவசமாக தன்னை மறந்த நிலையில் தேடல் தொடர்ந்தது.

இனி திருப்பள்ளி எழுச்சி 3ம்  பாடல்

”கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு
தேவ! நல் செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்!
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.!”

‘பரமேஸ்வரனே,  திருப்பெருந்துறையில்  உறையும்   த்ரி நேத்ரா, யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்குள்  ஒளிரும்  எளியவனே! எம் தலைவனே! பொழுது விடிந்துவிட்டதை அறிவிக்க  இதோ பார், அழகிய குயில்கள் கூவுவதை. கோழிகள் கூவுகிறது ; பறவைகள் ஒலிக்கிறது. சங்குகள்  முழங்குகிறது. நக்ஷத்ரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது.  இருள் விலகுகிறது.  எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் தரிசனம் செயது மகிழ காட்டுவாயாக! பள்ளி எழுந்தருள்வாயாக”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *