பொய் எனும் சக்தி – நங்கநல்லூர் J K SIVAN
”ஸார் நான் பொய் கிய் எல்லாம் பேசவே மாட்டேன். எனக்கு பிடிக்காது. பொய் பேசறவங்களோடயும் நான் பேசமாட்டேன், சேரமாட்டேன். ”இப்படி நிறைய பேர் சொல்கிறார்களே உங்களுக்கு தெரியுமா? அது தான் அண்டப்பொய். ஆகாஸப் பொய். நம்பவே நம்பாதீங்க அந்த ஆளை. பொய் பேசாதவனே கிடையாது. கொஞ்சூண்டாவது பொய் பேசாமல் எவனும் கிடையாது. எப்போ எதுக்கு, எப்படி, ஏன், பொய் பேசறோம்? காரணம் இருக்கு. நம்மைப் பற்றி உயர்வாக மற்றவர் நினைப்பதற்கு. நம்மை நாமே சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கும்போது. நம்மை நாமே கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக்கொள்வோமா ?
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்றனர் நமது முன்னோர். இது உண்மையா? நிச்சயம் என்று எல்லோரும் சொல்ல முடிகி றதா? பொய்யால் தான் வாழ்க்கையே நடக்கிறது என்று சிலரை, ஏன் பலரைப் பார்த்து வருந்துகிறோமே.உண்மை பொய்த்து விட்டதா? பொய் தான் புகழையும் பெருமையையும் தருகிறதா? அப்படித்தானே நிறைய பேர் நம்புகிறோம்.
பொய் சொல்லாமல் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். ஒரு பொய் சொன்னதால் தர்மன் தேர் தரையில் அழுந்தியது.ஹரிச்சந்திரன் பொய் பேசத்தெரியாமல் வாழ்ந்தவன். பொய் நம்மை உள்ளே உறுத்தும். துன்பப்படுத்தும் என்று இன்றும் வாழ்பவர்கள் சிலர் இருக்கிறார்கள்.
குழந்தைகளே பொய் சொல்லாதீர்கள், அது பாபம் என்று பள்ளிக்கூடத்தில் சொல்லித் தருகிறோம். வீட்டில் பெற்றோர் அறிவுறுத்து கிறோம். பெரியவர்கள் சொன்னால் அது பெரிய தவறு என்கிறோம். அப்படியென்றால் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்வது ஒரு புகழக்கூடிய தகுதியாக ஏன் சிலருக்கு இருக்கிறது?. வானத்தை வில்லாக வளைப்பேன் என்று எல்லாம் பொய் சொல்பவனை சாமர்த்தியக்காரன் என்று ஏன் பாராட்டுகிறோம்?.
நிறைய பேர் வாழ்வில் காதலே பொய்யால் தான் உருவாகிறது. வாழ்க்கை கட்டிடமே பொய் என்கிற அஸ்திவாரத்தில் தான் ஸ்ட்ராங்காக நிற்கிறதே.
கருப்பு கோட்டு போட்ட வக்கீலுக்கு மூலதனமே பொய் என்று எத்தனை பேர் தலையாட்டுகிறோம். அழகாக ஜோடித்து பொய் சொல்வோர் அதில் சிறந்த வழக்கறிஞர்களாமே. அப்படி பொய் சொல்லாத தெரிந்தவனுக்கு ல் நிறைய பீஸ் fees கொடுக்க வேண்டும்.
அரசியல்வாதி என்பவனுக்கு ஆதார சுருதியே பொய் என்று அநேகர் சொல்கிறார்களே. அது தெரியாதவன் பிழைக்க தெரியாதவனாமே?
பெரிய நிர்வாகிக்கு வியாபாரத்தில் பொய் அழகாக அலங்கரிக்கப்பட்ட மூலதனம். சிரித்துக்கொண்டே நம்பிக்கை ஊட்டி நம் தலையைத் தின்பவர்கள் பெரிய வியாபாரிகள் ஆச்சே.
கல்யாணமாகாதவன் சொல்லும் பொய்யெல்லாம் தற் பெருமைக்காகவா? தன்னுடைய இமேஜ் உயரவேண்டும் என்ற ஆர்வத்தால் தானே சின்ன சின்ன பொய் அன்றாட வாழ்வில் அவசியம் ஆகிறதே.
கவிஞன், கதை சொல்பவன் பொய்யை நம்பித்தானே வாழ்கிறான் . அது தானே அவன் ஜீவனம். அதை கற்பனா சக்தி மிக்கவன் என்று எல்லவா புகழ்கிறோம்.
வேலைக்காரன் முதலாளியிடம் சொல்கிற பொய் அவனை வேலையில் நீடிக்க வைக்கிறதே.
அநேக குடும்பத்தில் கணவன் மனைவியிடம் காலம் தள்ளுவதே இந்த பொய் அஸ்த்ரப்ரயோகம் என்கிற ஜீவனோபாயத்தால் அல்லவா?
உண்மையாகவே சத்யமேவ ஜெயதே என்பதற்கு என்ன அர்த்தம். வாய்மை உண்மையில் வெல்லுமா. பழைய காலத்தில் மட்டும் வென்றதா? இன்னும் வெல்லுகிறதா என்று கவலையாக இருக்கிறதே? யாருக்காவது தெரி ந்தால் சொல்லலாம்.
பொய் அசிங்கம் என்றால் அதற்கு எதிர்மறையாக வாய்மைக்கு அடையாளம் மூன்று சிங்கம் மட்டும் தானா ?
”கிருஷ்ணா, நீ சொல்லடா. நீ பொய் சொன்னாலும் அதை நிஜமாக்கிக் காட்டும் தகுதி, சக்தி உனக்கு மட்டும் தான் இருக்கிறது. எங்கள் கதி என்ன?