ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி.
”தசரதா, நீ உன் மகன் ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு, அநேக துஷ்ட ராக்ஷஸர்கள் என் யாகத்தை தடை செய்ய வருவார்கள் அவர்களைக் கொல்ல வேண்டும்.” பேரிடியாக விஸ்வாமித்ரரின் வார்த்தைகள் தசரதன் காதில் விழ துடிக்கிறான். சிறுவன் பதினாறு வயது கூட நிரம்பாத செல்லக்குழந்தை ராமன் எப்படி கொடிய ராக்ஷஸர்களை தன்னந்தனியாக வென்று கொல்லமுடியும். தசரதனின் மன நிலை புரிந்த விஸ்வாமித்ரர் தசரதனுக்கு உன் மகன் ராமன் சாதாரண மனிதனோ, சிறுவனோ இல்லை, ராக்ஷஸர்களை அழிக்கவென்றே அவதரித்தவன் என 100 காரணங்களை காட்டுகிறார். இது பருத்தியூர் பெரியவா எழுதி பிரசங்கங்கள் நிகழ்த்திய அற்புதமான ஒரு காவியம்.
ஸ்லோகம் 38 -50
38. तमोनिरासाय चन्द्रसूर्यादिप्रकाशमपेक्षत इति त्वम्; ‘तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाती’ति एतस्य ज्योतिरनुभाति सर्वं ज्योतिरित्यहम् ।
”தமோநீ ராஸாய சந்திர சூர்யாதி ப்ரகாசாமபேக்ஷத இதி த்வம் . தமேவ பாந்தமனுபாதி சர்வ தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதிதி எதஸ்ய ஜ்யோதிரனுபாதி சர்வம் ஜ்யோதிதி ரித்யஹம் .
”தசரதா , இருளில் ஒளி பெற சூரியனையும் சந்திரனையும் தேடும் மற்றவர்கள் போல் அல்ல ராமன். வேதம் சொல்வது கவனமிருக்கிறதா? ”ஒளி, பிரகாசம் எங்கிருந்தெல்லாம் பிறக்கிறதோ அதெல்லாம் ஸ்ரீ ராமனிடமிருந்து வெளிப்படும் ஸ்வயம் பிரகாசத்தின் பிரதிபலிப்பு” இதை நான் நன்றாக அறிவேன். நீ அறியமாட்டாய்
39. इक्ष्वाकुधनं कोसलदेशं कण्टकेभ्य उद्धर्त शक्नुयादिति त्वम्; ‘उद्धृतासि वराहेण कृष्णेन शतबाहुना’ इति अनेककोटियोजनविस्तृतां भूमिमिमा पूर्वमुद्धृतवानयमित्यहम् ।
இக்ஷ்வாகுதனம் கோசலதேசம் கண்டகேப்ய உத்தர்த்த சக்னுயதிதித்வம் ; உதந்த்ரு தாசி வராஹேண கிருஷ்ணேன சத பாஹுனா இதி அநேக கோடி யோஜந விஸ் பூமிமீமா பூர்வ முத்ருதவான யாமித்யஹம்
”அயோத்தி மகாராஜனே, கேள். இக்ஷ்வாகு வம்ச தோன்றல்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த பழம்பெரும் பெருமை வாய்ந்த கோசல ராஜ்ஜியம் ராமனால் காப்பாற்றப்படும் என்று நீ எண்ணுகிறாயே, உன் எண்ணம் நல்ல எண்ணம் தான். ஆனால் ஸ்ரீ ராமன் யார் தெரியுமா உனக்கு? கரிய நெடிய காட்டுப் பன்றி உருவெடுத்து பல கரங்களுடன் இந்த மா பெரும் பூமியையே இரண்யாக்ஷனிடமிருந்து திரும்ப பெற்று தூக்கி நிலை நிறுத்தியவன். சுருங்க சொல்லவேண்டுமானால் பூமி மீண்டும் தோன்ற காரணன் ஸ்ரீ ராமன்.
40. अस्यानन्दमुद्दिश्यास्माभिः प्रयत्नः करणीय इति त्वम्। एतस्यैव आनन्दस्य मात्रामन्यानि भूतान्युपजीवन्तीत्यहम्।
அஸ்யா னந்த முத்திஷ்யாஸ்மாபி; ப்ரபந்ந ; கரணீய இதித்வம். ஏதஸ்யைவ ஆனந்தஸ்யமாத்ரா மன்யானி பூதான்யுபஜீவந்தி த்யஹம்
”அரசனே, உன் மகன் ஸ்ரீ ராமனை எல்லோரும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறாயே, முதலில் நீ புரிந்து கொள்ளவேண்டியது என்ன தெரியுமா? ஸ்ரீ ராமனின் சந்தோஷத்தின் ஒரு துளியூண்டு தான் இந்த அகில புவன உயிர்களின் மொத்த சந்தோஷமே.
கோயம்பத்தூரில் ஒரு வக்கீல். யார் தெரியுமா? சென்னை அண்ணாசாலையில் கஸ்தூரி பில்டிங்ஸ் என்ற பிரபல கட்டிடத்தில் ஹிந்து பத்திரிகையை நிறுவி உலகளவு புகழ் பெற்ற கஸ்தூரி ரங்க ஐயங்கார் .(1859-1923). அவர் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளை அழைத்து கோயம்பத்தூரில் ராமாயண ப்ரவசனங்களுக்கு ஏற்பாடு செய்தார்.
மின் விளக்குகள் இல்லாத காலம். ஆறுமணிக்கு பிறகு கரும் கும் என்று எங்கும் இருட்டு. கொலை கொள்ளை வழிப்பறி எல்லாம் நடக்கும். சாஸ்திரிகள் பிள்ளைகள் நண்பருடன் கோவையை அடுத்த பேரூர் சிவன் கோவில் சென்று திரும்பும்போது இரவு 10மணிக்கு மேல். வழியில் ஐயோ அம்மா…..சில பெண்கள் அழுது கூக்குரலிட்டு கொண்டிருந்தார்கள். கிட்டே செல்ல பயம். திருடர்கள் ஆயுதங்களால் தாக்குவார்கள்.
வண்டிக்காரன் குதிரை வண்டியை நிறுத்த அஞ்சினான். வண்டியின் உள்ளே இருந்த சாஸ்த்ரிகள் ”வண்டியை நிறுத்து” என்று சப்தித்தார். வண்டி அருகே நிற்பதை உணர்ந்த திருடர்கள் அப்படியே ஓடிவிட்டார்கள். எல்லோரும் அஞ்சும்போது சாஸ்திரிகள் வண்டியிலிருந்து இறங்கி அந்த பெண்களை காப்பாற்றி அவர்கள் செல்லவேண்டிய இடத்துக்கு குதிரை வண்டியிலேற்றி கொண்டு சென்றார். அப்புறம் வண்டி கோயம்பத்தூர் திரும்பியது. இது போல் ஒன்றல்ல பல சந்தர்ப்பங்களில் சாஸ்திரிகள் தான் எவ்வளவு திட வ்ரதன் தைரியசாலி ராமபக்தனை எதுவும் எவரும் செய்ய முடியாது என்ற நம்பிக்கை கொண்டவர் என்ற விஷயங்கள் உள்ளன.
41. अस्य वाग्रूपा वेदा इति त्वम्, ‘अस्य महतोभूतस्य निःश्वसितं यदृग्वेदो यजुर्वेदस्सामवेद’ इत्यहम्।
அஸ்ய வாக் ரூபா வேதா இதித்வம் , ஆசிய மஹதோபூதஸ்ய நி : ஸ்வஸிதம் யதாக்வேதோ யஜுர்வேதஸ்ஸாம்வேத இத்யஹம் :
”தசரதா , ”என் மகன் ராமன் வேத சாஸ்திரங்கள் எல்லாம் கற்றவன் அவன் பேசுவதில் வேத சாரம் இருக்கும் ” என்று சொல்கிறாயே, நான் அறிந்ததைச் சொல்கிறேன் கேள். ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் எல்லாமே ஸ்ரீ ராமனின் மூச்சாகவே வெளிப்பட்டவை. அவன் சகலமும் அறிந்தவன், எல்லாவித சக்தியும் கொண்டவன் என்பது புரிகிறதா?
42. अयं प्रकृतिपरतन्त्र इति त्वम्; प्रकृतिरेतत्पर तन्त्रेत्यहम् ।
அயம் ப்ரக்ருதிபரதந்த்ர இதி த்வம் : ப்ரக்ருதிரேதத்பாரா தந்த்ரேத்யஹம்
ராமன் மாயை வசப்பட்டவன் என்று நீ நினைத்தால் அது தவறு. மாயையே அவனை நம்பித்தான் இருக்கிறது தசரதா. புரிந்து கொள் ..
43 अयं नर इति त्वम् अय पर इत्यहम् ।।
அயம் நர இதித்வம் அய பர இத்யஹம்
இந்த உலகத்திலேயே சிறந்த மனித பிறவி எடுத்தவன் உன் மகன் ராமன் என்று பெருமைப் படுகிறாயே. இன்னும் அதிகமாக பெருமைப்பட உனக்கு தெரியவில்லையே அப்பா. ஸ்ரீ ராமன் வெறும் மானிடப் பிறவி அல்ல. பிறவியே அற்ற அழியாத பரம்பொருள்.
44. अयं श्यामवर्ण इति त्वम् अयं हेमवर्ण इत्यहम् ।
அயம் ஸ்யாமவர்ணம் இதித்வம் அயம் ஹேமவர்ண இத்யஹம்.
ஒரு சின்ன விஷயம் தசரதா . நீ அவனைப் பார்க்கும்போது கருநீல வண்ணனாக பார்க்கிறாய். அவன் ஒரிஜினல் நிறம் என்ன தெரியுமா உனக்கு ? புடம் போட்ட தங்க ஒளி . கண்ணைப்பறிக்கும் பிரகாசம். பொன்னொளி. இது எனக்கு தெரியும்.
45. अयं प्रकृतिपुरुषयोरन्यतर इति त्वम्; अयं प्रकृतिपुरुषपुरुषोत्तमेषु अन्यतम इत्यहम् ।
அயம் ப்ரக்ருதி புருஷயோரந்யதர இதித்வம்;; அயம் ப்ரக்ருதிபுருஷபுருஷோத்தமேஷு அந்யதம இத்யஹம் .
”தசரதா, ராமன் நீ நினைப்பதுபோல் இந்த ப்ரக்ரிதியில் ஒரு ஜீவன் அல்ல. இந்த ஜீவன்களின் ஒட்டு மொத்த சாரமான பரமாத்மா. புருஷோத்தமன். அது எனக்கு தெரியும்.
46 अयं कालवश्य इति त्वम्; अयमकालवश्यः। शीलवश्यश्चेत्यहम्।
அயம் காலவஸ்ய இதித்வம்; அயமகாலவஸ்ய; சீலவஸ்யஸ்சேத்யஹம்
46 ராமன் உன் மகன். எல்லோரையும் போல காலத்தின் பிடியில் அகப்பட்டவன் என்று நீ கருதுகிறாயே. அவன் யார் என நான் அறிவேன். காலத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவன். பக்தர்களின் சீலத்திற்கு , பக்திக்கு மட்டுமே கட்டுப்பட்ட பக்தவத்சலன்.
47. इममस्मिन् कोसलपुरे स्थितं मन्यसे त्वम् ‘अमुम् आदित्यवर्णं तमसः परस्तात्’ इत्यहम् ।
இமமஸ்மின் கோசலபுரே ஸ்திதம் மன்யஸே த்வம் ; அமும் ஆதித்யவர்ணம் தமஸ; பரஸ்தாத் இத்யஹம் ;
நீ நினைக்கிறபடி இந்த ராமன் வெறும் கோசலை ராஜ்யத்தை மட்டும் ஆண்டு கொண்டு சுற்றி சுற்றி வருபவனா? எனக்கு தான் தெரியுமே. அவன் இந்த கரிய பிரபஞ்சத்தில் பொன்னொளி வீசும் ஆதித்யன். சூரியன்.
48. अयं प्रजापतिश्चरति कोसलपुर इति त्वम् अयं ‘प्रजापतिश्चरति गर्ने अन्तः’ इत्यहम् ।
அயம் ப்ரஜாபதிசச்சரத்தி கோஸலபுர இதித்வம் ; அயம்; ப்ரஜாபதிஸ்சரதி கணேம் அந்த: இத்யஹம்
48. என் மகன் ராமன் இந்த கோசல நாட்டின் பிரஜைகளுக்கு அதிபதி என்று உனக்கு பெருமை அல்லவா? இல்லை தசரதா. அதைவிட பெரிய பெருமை உனக்கு இருப்பதை நீ அறியவில்லை. நான் அறிவேன். ராமன் இந்த பிரபஞ்சமனைத்திலு மிருக்கும் சர்வ ஜீவன்களின் நாடி, அவர்கள் இடையே நடமாடுபவன். உறவு கொண்டவன்.
49. अयं पाणिपादादिकरणैः कार्यकर्तेति त्वम् अयम् ‘अपाणि पादो जवनो गृहीता पश्यति अचक्षुस्स शृणोत्यकर्णः’ इत्यहम्।
அயம் பாணிபாதாதிகரணை ; கார்யகர்த்தேதி த்வம் ; அபாணி பாடோ கவனோ க்ருஹிதா பஸ்யதி அசக்ஷுஸ்ஸ ஸ்ருணோத்யகர்ண இத்யஹம்
49. ஏதோ தனது கைகளாலும், கால்களாலும் உழைப்பவனா உன் மகன் ராமன் ? கைகளின் உதவி இன்றியே எதையும் கொள்பவன். கொல்பவன் .கால்களின்றியே எங்கும் வேகமாக நகர்பவன், கண்களில்லாவிடிலும் எல்லாவற்றையும் காண்பவன், காதே வேண்டாம் அவனுக்கு எதையும் கேட்க, மொத்தத்தில் நம் போல் மனிதன் அல்ல ஸ்ரீ ராமன். இது எனக்குத் தெரியும்.
५०. अयमेकदेशवर्तीति त्वम् अयम् ‘आकाशवत् सर्वगतश्च नित्यः’ इत्यहम् ।
அயமேகதேசவர்த்தாதி த்வம் ஆகாசாவத் சர்வகதஸ்ச நித்ய: இத்யஹம்
50. அவன் இங்கே இதோ உன் முன் நிற்கிறான் என்றா நினைக்கிறாய் தசரதா ? அவன் என்ன ஒரு இடத்தில் மட்டுமே காணப்படுபவனா? எங்கும் எதிலும் எப்போதும் நிறைந்தவன் என நான் அறிவேன்.
ஆஹா விஸ்வாமித்ரர் என்னமாக ராமனின் ப்ரபாவத்தை விளக்குகிறார். பருத்தியூரார் தானாக சொல்வதில்லை இதெல்லாம். ஒவ்வொரு காரணத்தின் பின்னாலும் வேதங்கள், சாஸ்திரங்கள், ஸ்தோத்திரங்கள், புராணங்களின் தத்துவங்கள் பொதிந்திருக்கின்றதை கற்றோர்கள் அறிவார்கள்.