திருமந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN
திருமூலர்
கூகையும் பாம்பும் கிளியோடு பூனையும்
நாகையும் பூழு நடுவி லுறைபவன்
நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடுமாறே”
பகவான் சிருஷ்டியில் இந்த பரந்த உலகில் ஒன்றோடொன்று துளிக்கூட சம்பந்தமில்லாத, ஒன்றை ஒன்று கொன்று தின்னும் சேர்ந்து ரந்து இருக்க முடியாத ஜீவன்கள் படைக்கப்பட்டு அவையும் இந்த பூமியில் வாழ்கின்றன. மனிதர்களை எடுத்துக்கொண்டால் அடேயப்பா, ஒரே ரத்தமாக ஒரே குடும்பத்தில் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் பெண்களே ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ முடியவில்லையே. இதுவும் இறைவன் சித்தம். தவளையும் அதை விழுங்கும் பாம்பும் நீரிலேயே வாழ்கிறது. அழகிய பச்சைக் கிளியும் அதைக் கொல்லும் பூனையும், புறாவும், மைனாவும் ஒன்றால் ஒன்று பாதிக்கப்படாமல் சேர்ந்து மொத்தமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அததன் வம்சமும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை எதற்காக நமக்கு திருமூலர் ஞாபகப்படுத்துகிறார் மேலே சொன்ன திருமந்திரத்தில் தெரியுமா?
நம் உடல் என்பது ஒரு தனி உலகம். அதில் எத்தனையோ அங்கங்கள். இவை ஒன்றொடொன்று சேர்ந்தவை இல்லை. எதிரும் புதிருமானவை எனலாம்.
மனித மனத்திலும் அந்தமாதிரி தான் பல உண்டு. அறியாமை என்பது தவளை மாதிரி. காமம் என்பது பாம்பு. சாத்வீகம் புறா, தர்மம் கிளி என்றால் அதற்கு எதிரியாக, நேர்மாறாக, அதர்மம் என்பது பூனை மாதிரி.
நாம் அதிகம் கவனம் செலுத்தி வளர்க்காத சிற்றறிவு தான் சிட்டுக்குருவி. அறியாமை எனும் கழுகு அதை விழுங்குகிறது. ஞானம் எனும் எலி ஓசை எழுப்பி சிற்றறிவை அஞ்ஞானத்திலிருந்து காப்பாற்றுகிறது என்று பாடுகிறார் திருமூலர். பலே பலே.
”காடு புக்காரினி காணார் கடுவெளி
கூடு புக்கானது ஐந்து குதிரையும்
மூடு புக்கானது ஆறு உள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவணையாமே”
அறியாமை, அஞ்ஞானம் என்பதை இருள் என்கிறோம். காடு என்கிறோம். அதில் சிக்கி வெளியே வர வழி தெரியாமல் தவிப்பவர்கள் அதிகம். திக்குத் தெரியாத காட்டில் என்ற அருமையான பாரதியார் பாடல் கூட ஒன்று இருக்கிறது. நான் அடிக்கடி பாடுவேன். அதில் மனிதர்கள் சிக்கி தவிக்கும்போது, உழல்கின்ற போது , அவர்களால் ஞான ஒளியை அறிய முடியாதே.
இன்னொரு உதாரணம். நமது தேகம் என்பது ஒரு கூண்டு வண்டி. இதை ஐந்து குதிரைகள் வெவ்வேறு திசையில் இழுத்துக்கொண்டு ஓடுகிறது. எப்படி எங்கே போய் சேரமுடியும்? இந்த ஐந்து குதிரைகள் என்று சொன்னது நமது ஐந்து புலன்கள். மிகவும் சக்தி வாய்ந்தவை. அவைகளிடம் மாட்டிக்கொண்டு, அவை இழுத்துக் கொண்டு போகும் பக்கம் அங்குமிங்கும் அலைகிறோம்.
நமது தேகத்தை சூழ்ந்து கொண்டிருப்பது மனம் எனும் கூடாரம். கூடாரத்துக்குள் ஒட்டகத்துக்கு கூடாரத்தில் தலை மட்டும் நீட்ட இடம் கொடுத்தால் அவ்வளவு தான். கூடாரத்துக்குள் நுழைந்து அதை சின்னாபின்னமாக்கிவிடும் என்று பேசுகிறோம், சொல்கிறோம். ஒன்று இரண்டல்ல இப்போது நமது மனம் என்னும் கூடாரத்தில் ஆறு ஒட்டகங்கள் உள்ளே தலை நீட்டிக்கொண்டே நுழைந்து வந்துவிட்டன. காம, க்ரோதம், மோகம், மதம், மாற்சர்யம், அகம்பாவம் இவை தான் அந்த ஆறு ஒட்டகங்கள். கோவிந்தா கோவிந்தா… மனம் இந்த ஆறினிடமும் மாட்டிக்கொண்டு அலைக்கழிக்கப்படுகிறது.
ஒட்டகங்கள் தலை நீட்டாமல் கூடாரத்தை மறைக்க திரை போடவேண்டும். . மனத்தை கட்டுப்படுத்தும் திரை தான் திட சித்தம் , ஸ்தித பிரஞை. ஞானம், தியானம் என்பது மட்டுமே மனதை திடப்படுத்தக் கூடியது. ஐம்புலன்களிடமிருந்து காப்பாற்றக்கூடியது.