அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN கலிய நாயனார்
ரத்தமே எண்ணெய்
நமக்கு ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டாத பெயர்கள் நிறைய நன்றாக ஞாபகம் இருக்கும். அற்புதமான மனிதர்கள் பெயர் தெரியவே தெரியாது. அப்படி ஒரு முக்கியமானவர் பெயர் தான் இன்று நாம் அறிந்துகொள்ளும் கலிய நாயனார். ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த பெயர் தெரிந்திருந்தால் கூட நாம் மிகச் சிறந்த சிவபக்தர்கள்.சைவ சமயத்தில் அறுபத்து மூன்று சிறந்த சிவபக்தர்களை சிலையாக சிவாலயங்களில் வடித்து நிற்க வைத்திருக்கிறார்களே அதில் இவர் ஒருவர். நாயன்மார்கள் என்று மொத்தமாக அவர்களுக்கு பெயர்.
வழக்கம் போல சிலர் அவர் எட்டாம் நூற்றாண்டு, அதற்கு முற்பட்டவர், இல்லை 12ம் நூற்றாண்டுஎன்று சொல்லி என்ன பயன்? நாம் அறிவது சென்னையில் உள்ள திருவொற்றியூரில் சக்ரபாடி தெருவில் வானியர்கள் வாழ்ந்தார்கள் அதில் ஒரு வசதியான எண்ணெய் வியாபாரம் செய்யும் வாணியர் குடும்பத்தில் பிறந்தவர் கலியநாயனார் . அங்கே அதிஷ்டானம், சமாதி ஏதாவது இருக்கிறதா? எனக்கு தெரியவில்லை. அந்த ஊர்க்காரர்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.
கலியநாயனார் செக்குகள் வைத்து எண்ணெய்கள் தயாரித்து விற்கும் வியாபாரி.. செல்வந்தராக இருந்தாலும் அத்தனை செல்வத்தையும் திருவொற்றியூர் தியாகராஜன் ஆலய விளக்கேற்றும் திருப்பணிக்கு அளித்தவர். விளக்குகள் ஏற்றி என்றும் தீப ஒளிமயமாக்குவது அவரது முக்கிய திருப்பணி. இது தான் தீபாவளி. கலிய நாயனாரை உலகம் அறியவேண்டாமா? திருவொற்றியூர் தியாகராஜன் ஒரு திருவிளையாடல் செய்தான். அதன் விளைவாக முதலில் கலியரை பரம ஏழையாக்கினான். எண்ணெய் வியாபாரம் நின்றது. வருமானம் இல்லாவிட்டாலும் கலியநாயனார் தனது விளக்கேற்றும் திருப்பணியை நிறுத்தவில்லை. கூலி வேலை செய்து பிழைத்தபோதும் திருவொற்றியூர் தியாகராஜன் ஆலயத்தில் விளக்கு ஏற்றும் பணியை எப்படியோ செய்து வந்தார். உற்றார் ஊராரிடம் எண்ணெய் வாங்கி திருப்பணி தொடர்ந்தது. வேலையும் நின்றுபோய் சாப்பாட்டுக்கே கஷ்டம் கொடுத்தான் தியாகராஜன். இறைவன் சோதனை நன்மையில் தான் முடியும். இருப்பதை எல்லாம் விற்று விளக்கேற்றினார். இனி தன்னிடம் எதுவுமில்லை, எண்ணெய்க்கு வழியில்லை என்ற நிலை வந்தது.
”தியாகராஜா, இனி என்னால் எண்ணெய் எங்கும் பெறமுடியாத நிலையில், என்னால் முடிந்தது நீ தந்த இந்த தேகத்தில் இருக்கும் ரத்தத்தை எண்ணையாக உபயோகித்து உனக்கு விளக்கேற்றுவது தான்”.
கோவிலுக்குச் சென்றார். வரிசையாக விளக்குகளை அடுக்கி வைத்தார். தன் உடலை வாளால் வெட்டி சொட்டும் ரத்தத்தை விளக்குகளில் நிரப்ப முயன்றார். போட்டு தயாராக இருந்தது விளக்குகள். ஓங்கின வாளை ஒரு கரம் வலுவாக பிடித்தது.கோவிலில் இருந்த அனைத்து விளக்குகளில் எண்ணெய் நிரம்பி ஜக ஜோதியாக தீபங்கள் எரிந்தன.
தன்னைத் தடுத்தது தியாகராஜன் என்று அறிந்த கலிய நாயனார் அப்படியே தியாகராஜன் முன் சாஷ்டாங்கமாக சாய்ந்தார். ரிஷபாரூடனாக பரமேஸ்வரன் அவருக்கு காட்சி அளித்து அவரை மீண்டும் செல்வந்தராக்கி, அவர் திருப்பணி கடைசி வரை தொடர்ந்து புரிய வாழ்வளித்தான். கடைசியில் கைலாசத்தில் சேர்த்துக் கொண்டான் என்று சொல்கிறது பெரியபுராணம். திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஆடி மாதம் கேட்டை நக்ஷத்ரம் அன்று கலியநாயனார் குரு பூஜை தொடர்கிறது. இதுவரை இந்த புராதன ஆயிரம் வருஷ கோவிலுக்கு செல்லாதவர்கள் முடிந்தபோது சென்று தரிசியுங்கள்.