ARUPATHTHU MOOVAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN
கணநாத நாயனார்
ஒவ்வொரு சிவாலயத்திலும்   ஒரு பக்கத்தில் சுவரோரமாக  வரிசையாக  63 பேர் நிற்பார்கள். எல்லோரையும்  ஒரே மாதிரியாகத்  தான் சிற்பிகள்  ரெண்டு-ரெண்டரை  அடி  உயரத்தில்  சடைமுடியை தூக்கிக்கட்டியவாறு, இரு கரம் கூப்பி நிற்க  வடிவம் அமைத்து  வைத்திருப்பது வழக்கம். ஒவ்வொருவரும் யார் என்று கீழே சில இடங்களில் பெயர் பொறிக்கப்  பட்டிருக்கும் அல்லது அவர்கள் தலைமேல் சுவற்றில் பேரை பெயிண்ட் அடித்து வைத்திருப்பார்கள்.   சில கோவில்களில் இருட்டில் கருப்பாக  நிற்பது தான் நாம்  கண்டது.
கோவிலில் பிரகாரத்தில் சுற்றிவரும்போது பலர் கண்ணில் அறுபத்து மூவர்கள்  படுவதே இல்லை. யாரும் ஒரு நிமிஷமாவது  நின்று அவர்கள் பெயர்களைப்   படிப்பதுமில்லை.  பிரகாரத்தில் கால்  வேகமாக நகரும். நம்முடைய  இந்த குணாதிசயத்தால்  இந்த அறுபத்து மூன்று சிவனடியார்கள், நாயன்மார்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. நஷ்டம் நமக்கு தான்.  தமது தீவிர பரிசுத்த பக்தியால் சிவனை மகிழ்வித்த  அன்பர்கள் இவர்கள்.  இவர்களின் பக்தியில் ஆயிரத்தில்,  லக்ஷத்தில்,  ஒரு பகுதியானது நமக்கிருந்தால் நமது ஜென்மம் கடைத்தேறும் என்பதில் சந்தேகமே இல்லை.  இன்று ஒரு நாயனாரை  அறிமுகப்படுத்துகிறேன்.

புராதனமான  புகழ் பெற்ற  ஒரு   திவ்யமான  க்ஷேத்ரம்  சீர்காழி.  அங்கே  ப்ராமண குலத்தில்  பிறந்த ஒரு சிவபக்தர் கணநாதர்.அப்பா அம்மா வைத்த பெயர்  வழக்கம்போல் தெரியவில்லை.
 சீர்காழியில்   கோவிலில் சிவனுக்கு  ஒரு பெயர்  தோணியப்பர்.   கணநாதர்  தோணியப்பரிடம் அளவற்ற பக்தி கொண்டவர்.  சிவன்கோவிலுக்கு எப்போதும் சென்று வழிபட்டு   சிவனுக்கும் அவன் தொண்டர்களுக்கும்  தன்னாலான  சேவைகளைச் செய்து வருவார். அதைவிட வேறெதிலும் அவருக்கு மனதில் இடமில்லை.
திருக்கோவில், நந்தவனம் மற்றும் தெப்பம் முதலியவற்றை கேடுறாமல்  பாதுகாத்து அவ்வப்போது செப்பனிட்டு சிறப்பாக வைத்துக் கொள்வதைத்  தம்முடைய வாழ்கையின்  லட்சியமாக ஏற்றுக்கொண்டு  சந்தோஷமாக பணி  புரிவார். சிவனடியார்களைக் கண்டால்  கொள்ளைப்  பிரியம்.  அவர்களுக்கு தேவையானவற்றை அளிப்பதில்  திருப்தி.  இதில் விசேஷம் என்னவென்றால்  சிவன் நாமத்தை பாடிக்கொண்டு  கோவிலுக்கும் தொண்டர்களுக்கும் சேவை செய்யும் முறையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பார்.  எப்படி நந்தவனங்களை பராமரிப்பது, பூக்களை பறித்து மாலை தொடுப்பது என்று அவர்களை ஊக்குவித்து மகிழ்வார். அருமையான வாத்தியார்.
ஆலய  விக்ரஹங்களுக்கு திருமஞ்சனப் பணி, கோவிலில் வேளாவேளை  விளக்குகளைத்  துடைத்து  தீபம் ஏற்றுவது,  தரையை எல்லாம்  பெருக்கி   சுத்தம் செய்வது போன்றவற்றில் எப்போதும் தன்னை  ஈடுபடுத்திக் கொள்வார். திரு முறைகளை மனப்பாடம் செயது  பாடி, மற்றவர்களுக்கும் கற்பிப்பார்.  ஆகவே அன்பும் பாசமும் கொண்ட  கணநாதரை எப்போதும் அன்பர்கள் சூழ்ந்து கொண்டிருந்ததில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?
சீர்காழி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது  திருஞான சம்பந்தரை விட  சீர்காழி கோவிந்தராஜனின் பக்தி பாடல்கள் என்று தான் தோன்றுகிறது.  ஆனால் சீர்காழியின் புகழ் அங்கே  தோன்றி வளர்ந்த  சைவ சமய குரவர்களில்  ஒருவரான  ஞானக் கொழுந்து திருஞான  சம்பந்தரால்  தான்.  அன்னை உமையால்  ஞானப்பால் கொடுக்கப்பட்டு வளர்ந்தவர்  சம்பந்தர் .  கணநாதருக்கு  ஞான சம்பந்தர் பதிகங்கள் மிகவும்  விருப்பம் என்பதால் அவரை சீர்காழியில் வணங்கி பாடி மற்றவர் களுக்கும்  கற்பித்து எளிய  வாழ்க்கையை சிவத்தொண்டில் கழித்து கைலாச பதவி அடைந்தவர்  கணநாதர்.  அவர் இயற்பெயர்  தெரியாது போனாலும்  பரமேஸ்வரன்  ‘ இனி நீ தான்  சிவகணங்களுக்கு சரியான நாதன்’  என்று  நியமித்ததால்  அவரை நாம் கணநாதர் என்ற நாமத்தில் தான் அறிகிறோம்.
சுந்தரரின்  திருத்தொண்ட தொகையில்  வரும் ஒரு வரி:   கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” எவ்வளவு பதவிசு  சுந்தரருக்கு.
கணநாத நாயனார் குருபூசை பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *