கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்- பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா
கேள்வி பதில் ரத்னமாலை 56-70
56. எவனுடைய ஆத்மா அவன் மரணப் படுக்கையி லிருந்த போதும் ஜெயிக்க முடியாததாக, சாந்தி பெறா ததாக இருக்கிறது?
அறிவைப் புகட்டினாலும் திருந்தாத, திருத்த முடியாத முட்டாளின் ஆத்மா. அவன் தொடர்ந்து மூச்சு நிற்கும் வரை தூயரத்திலேயே உழலும் நன்றியற்றவன். கஷ்டப்பட்டு தானே ஆக வேண்டும். திருத்துவது வேறு திருந்துவது வேறு. திருந்துவதை நாம் மட்டுமே செய்ய முடியும். அதற்கு மனம் திடமாக கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.
57. யார் சாது எனப்படுபவன் ?
நம்மைக் கேட்டால் சாது என்றால் ஒன்றும் பதில் பேசாமல், சொன்னதெல்லாம் கேட்டுக்கொண்டு, சொரணை இல்லாமல் இருக்கிறவன் தான் சாது என்போம். ஆதி சங்கரர் சொல்லும் சாது நல்ல குணம், நல்ல நடத்தை உடையவன், நல்லதே நினைப்பவன், சொல்லும் செயலும் மாறுபடாமல் சுயநலம் இன்றி இருக்கிறவன். எவனுடைய குணமும் நடத்தையும் சொல்லும் செயலும் நல்லதாகவே எப்போதும் மிளிர்கிறதோ, அவன் தான் சாது.
58. அப்படியென்றால் யார் மோசமான குணம் படைத் தவன்?
யாருடைய குணமும் நடத்தையும், சொல்லும் செயலும் பிறருக்கு தீமை பயக்குபவையாக இருக்கிறதோ அவனை.
59. யாரால் இந்த உலகம் ஜெயிக்கப்படுகிறது எனலாம்?
யார் சத்தியத்தில், உண்மையில் நாட்டம் கொண்டு அதன்படி நடக்கிறாரோ, பொறுமை சாந்தத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் தான் உலகை வென்றவர்.
60. யாரை தேவர்கள் கூட வாழ்த்தி மதிப்பார்கள்?எவரிடம் கருணை, தயை, இளகிய மனது பிரதான குணமாக இருக்கிறதோ அவர்களை.
61. எது மனதில் எப்போதும் ஒரு வித பயத்தை உண்டாக்குகிறது?
சம்சார பந்தம், உலக விவகாரங்கள், அதன் பலனாக தொடர்ந்து நிகழும் வினைகள் ஒரு பெரிய கருமை யான இருண்ட காடாக கற்றோர்கள் மனத்திலும் பயம் தரக்கூடியது. அதிலிருந்து தப்ப வழி தெரியாமல் திரு திருவென்று விழித்து நடுங்குகிறோமே அது தான் பயம்.
62. உலகில் வாழும் ஜீவன்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன?
எவர் வாக்கு சுத்தமானதோ, சத்யமானதோ, எவர் குணம் எளிமையும் உன்னதமும் கொண்டதோ அவரிடம் சகல ஜீவன்களுக்கு கட்டுப்படும். இது தான் சத்யம்.
63. ஒருவர் எந்தவிதமான வழியில் நடக்கவேண்டும்?
தர்மம் நியாயம் நேர்மை யான பாதையில் செல்பருக்கு இந்த உலகம் மட்டும் அல்ல, இனி அடுத்த உலகங்க ளிலும் நன்மையே கிடைக்கும். நம்மால் முடியாது. ஆனால் கட்டாயம் முடியவேண்டும். முயன்றால் முடியும்.
64.. யார் கண் பார்வை இழந்தவன்? எவன் செய்யும் காரியங்கள் எல்லாம் தப்பானவையோ, தவறானவையோ, தெரிந்தே அதை செயகிறானோ, அவன் கண் இருந்தும் பார்வை இழந்தவன்.
65. எவன் செவிடன்?
மஹான்கள் இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள் என்று தெரியும். அவர்கள் பேசுவது, உபதேசம் செய்வது எல்லாமும் தெரியும். அப்படி தெரிந்தும் அவர்கள் அறிவுரையை நாடாதவன், கேளாதவன் காதிருந்தும் செவிடன் தான்.
66. எவன் ஊமை?
வாயிருந்தும், அறிவிருந்தும் , பேசத்தெரிந்தும், பேச முடிந்தும், சரியான வார்த்தைகளை, தக்க நேரத்தில் புண்பட்ட இதயங்களுக்கு, இதமாக, மனதிற்கு ஆறுதலாக சொல்லாதவன், சொல்ல இயலாதவன் வாயிருந்தும் ஊமை என்பதில் என்ன சந்தேகம்?
67. எது உண்மையான தானம்?
ஒருவர் கேட்காமலேயே அவருக்கு தேவைப்படும் வஸ்துவை, அது நம்மிடம் இருக்கும்போது, மனமுவந்து அவருக்கு அதைத் தருவது தான் போற்றத்தக்க தானம்.
68. எவன் உண்மையான நண்பன்?
”டேய் இப்படி செய்யாதே” என்று நாம் தவறு செய்யா மல், பாபம் செய்யாமல் தடுப்பவன். அதனால் அவனுக்கு ஒரு பயன் இல்லாவிட்டாலும் நம்மை நல்வழியில் திசை திருப்ப இப்படி செய்வதில் ஆர்வம் கொண்டவன் உண்மை நண்பன்.
69. எது ஒருவனுக்கு ஆபரணம்?
நன்னடத்தை. குணபூஷணம்.
70. எது ஒருவன் வாக்கை, சொல்லை அலங்கரிப்பது?
அவன் வார்த்தையில் த்வனிக்கும் நேர்மை, நாணயம், சத்யம். உண்மை.