குஞ்சித பாதம் – நங்கநல்லூர் J K SIVAN
தூக்கிய பாதம் கொண்ட நடராஜர் ஒரு அற்புதமான உருவம். சிறந்த தத்வம். அதுவும் சிதம்பரத்தில் காட்சி தரும் தில்லை நடராஜ மூர்த்தியின் தூக்கிய இடது பாதத்தைப் பற்றிப் பாடாத புலவர்களோ, மஹான்களோ, பக்தர்களோ, ரிஷிகளோ, ஞானிகளோ கிடையாது. குஞ்சித பாதம் என்று அழைக்கப்படும் அந்த ஈசனுடைய திருவடியைத் தரிசனம் செய்தவர்களுக்கு மோட்சம் நிச்சயம். கோபாலக்ரிஷ்ண பாரதியார் பாடல்கள் ஒவ்வொன்றும் அந்த மஹிமையை பாடுகிறது.
தமிழ் உலகம் கண்ட இரட்டைப் புலவர்களை தெரியாத தமிழன் இருக்க முடியாது. ஒருவர் முடவர், ஒருவர் குருடர். முடவர் குருடர் தோளில் அமர்ந்து ஒவ்வொரு பாடலையும் முடவர் ரெண்டடி, குருடர் ரெண்டடி என்று பாடி பல ஊர்களுக்குச் சென்றவர்கள், பல க்ஷேத்ரங்களில் சிவா தர்சனம் செய்தவர்கள். சிதம்பரம் நடராஜனை அவர்கள் வர்ணிக்கும் அழகு இது:
”தில்லை மூவாயிரவர் பூசை புரி பாதம்
தேவருடனே இருவர் தேடரிய பாதம்
வல்லமாகாளியுடனே வாதுபுரி பாதம்
மாமுனிவர்காய் யமனை மார்பில் உதைபாதம்
சொல்லவே பரவையிடம் தூது சென்ற பாதம்
தொல்புலி பதஞ்சலியும் தொண்டு செயும் பாதம்
அல்லலாம் ஏழ்பிறவி தீர நடமாடும்
ஆதிபுலி யூரர் திருவம்பலவர் பாதம்”
சிதம்பரம் தீக்ஷிதர்கள் அன்றாடம் மனமுவந்து பூசை செய்யும் பாதம்-, அடிமுடி காண இயலாத ஸ்தாணுமூர்த்தியின் பாதம். தேவர்கள் காண இயலாத பாதம், பத்ரகாளியுடன் போட்டி போட்டு ஊர்த்வ தாண்டவமாடி அவளை வென்ற ஆடிய பாதம், மார்க்கண்டேயருக்காக யமனை
உதைத்த கால ஸம்ஹார மூர்த்தியின் திருப்பாதம். பக்தன் தோழன் சுந்தர மூர்த்தி நாயானாருக்காக பரவையிடம் தூது சென்ற
பாதம், பதஞ்சலி, வியாக்ரபாத ரிஷிகள் பூஜித்து வணங்கிய பாதம், ஏழு பிறவிகளை நீக்கி பக்தர்களுக்கு மோக்ஷம் தரும் நடராஜர் பாதம்..
இந்த இரட்டைப் புலவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து பின் மரணம் அடைந்ததும் ஒரே நாளில் என்று அறிகிறோம். ரெட்டைப் புலவர்களை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். மீண்டும் ஒரு சிறு குறிப்பு:
மதுரைக்கு சொக்கநாதர் தரிசனம் பெற வருகிறார்கள். வைகையில் படிக்கட்டில் முடவர் அமர்ந்திருக்க குருடர் துணிகளை அலசுகிறார். திடீரென்று நீர்மட்டம் அதிகமாக, துவைக்கப்பட்டு கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியை வைகை நீர் அடித்துச் சென்றது. இது தெரியாத குருடர் மற்றொரு துணியை துவைத்துக் கொண்டிருக்கிறார். கரையில் அமர்ந்த முடவர் கண்ணுக்கு வெட்டி அடித்துச் செல்லப்பட்டது தெரிந்தும் அவரால் என்ன செய்ய முடியும்? ஒரு பாடல் பிறக்கிறது: முடவர் பாடுகிறார்:
”அப்பிலே தோய்த்திட் டடித்தடித்து நாளுமதைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ – செப்பக்கேள்
ஆனாலும் கந்தை அதிலும்ஓர் ஆயிரம்கண்
போனால் துயர்போச்சு போ.
‘ஏற்கனவே கந்தல் வேஷ்டி, திரும்ப திரும்ப அதை தண்ணீரில் தோய்த்து, கல்லின் மேல் டபார் டபார் என்று அடித்தால் தப்பி ஓடிவிடாதா? ஆகவே தப்பித்தால் போதும் என்று ஓடிப்போய் விட்டது”
இதற்கு குருடர் பதில்:
”சொல்றேன் கேள். அந்த கந்தல் வேஷ்டியில் ஆயிரம் கண்கள். ஓட்டைகள். கிழிசல்கள். போகட்டுமே’
முடவர் விடவில்லை; தொடர்கிறார்:
”கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?’- எண்ணிப்பார்
“இக்கலிங்கம் போனாலென்ன எகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை”.”
முடவர்: அதென்னப்பா அப்படி சொல்லிட்டே நீ. ஆயிரம் ஓட்டை கந்தல் என்றாலும் இரவில் குளிருக்கு போர்த்திக் கொள்ளவாவது உதவுமே”குருடர்; அதற்கென்ன இப்போ? போனது போய்விட்டது. போகட்டும். இந்த துணி இல்லை என்றால் இன்னொரு துணி அந்த சொக்கலிங்கம் தரமாட்டானா என்ன?கலிங்கம்: ஆடை . முண்டு: துண்டு துணி, சவுக்கம். ரெட்டைப் புலவர்கள் நிறைய பாடி இருக்கிறார்கள். படிக்க கேட்க அற்புதமாக இருக்கும்.