பெற்றோருக்கும் மற்றோருக்கும். – நங்கநல்லூர் J K SIVAN
குழந்தைகள் தெய்வ ஸ்வரூபங்கள். நல்லது எது தீயது எது, கெட்டது எது என்று தெரியாது. இந்த உலகத்தில் அவர்கள் வளர்ந்து வாழ சில விஷயங்களை அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. பெற்றோரும் குழந்தைகளை வளர்க்கும் மற்றோரும் இதை உணர்ந்து தக்க காலத்தில் குழந்தைகளுக்கு இதை எல்லாம் உணர்த்த வேண்டியது கட்டாயமாகிறது.பிறர் தொடுவதில் எது நல்ல தொடல் , எது தப்பான தொடல் எது Good touch, bad touch என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள் பெற்றோர்கள் கண்ணுக்கு குழந்தையாய் தெரியலாம்,
உலகத்தில் நமது சமூகத்தில் சில விஷ, விஷமக் கண்களுக்கு கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும். நிறைய துர்பாக்கிய சம்பவங்கள் பத்திரிகைகள், வாட்ஸாப்ப், யூ ட்யூப் மூலம் பரவி வருவதை மறக்கக் கூடாது.
குழந்தைகளை வெளியே எங்கும் தனியே கடைக்கோ யார் வீட்டுக்கோ அனுப்பும் போது கவனம் ரொம்ப தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை. ஆபத்து எந்த நேரமும் எந்த ரூபத்திலும் நேரலாம்.
பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் குழந்தைகளை அனுப்பும்போது தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட தெரியவேண்டும். அந்த . வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கம் பற்றியும் விவரங்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும். சந்தேகமாக இருந்தால் குழந்தைகளை அவர்களோடு அனுப்பவே கூடாது.
ஆட்டோ ரிக்ஷா மற்றும் சில வாகன டிரைவர்கள் பொதி மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து வண்டியில் ஏற்றுக்கொள்வதும், மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கி
றது. பணத்துக்காக குழந்தைகளை பலி கொடுக்க வேண்டுமா? யார் கூப்பிட்டால் போக வேண்டும், தெரிந்தவரோ, தெரியாதவரோ யார் எதைக் கொடுத்தால் வாங்க வேண்டும்
என்று குழந்தைகளுக்கு தெளிவாக புரியும்படி எடுத்துச் சொல்லவேண்டும். குழந்தைகள் சட்டையில், பாக்கெட்டில் வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலை பேசி எண்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு அதைச் சொல்ல பழக்க வேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயம் . எந்த குழந்தையையும் மற்ற குழந்தையோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. வயது வித்தி யாசம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, ஏழை பணக்கார வித்யாசம் குழந்தை மனதில் வரக்கூடாது.
எப்போதும் நமது விருப்பத்தை குழந்தை மேல் திணிப்பது ரொம்ப தப்பு. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, யு ட்யூப் சேனலில் பெரிதாக, வன்முறை, காதல், கொலை, சண்டை களவு காட்சிகள் பெரிதாக சப்தமாக போடாதீர்கள். அவற்றை குழந்தைகள் பார்க்க கூடாது. எப்போதும் சீரியல்களில் மூழ்காமல் குழந்தைகளுக்கு பிடித்த, அவர்கள் ரசிக்கும் காட்சிகள் பார்க்கலாம். பொதுஅறிவு பெருகும் நிகழ்ச்சி, சம்பவங்களை காட்டலாம்.
குழந்தைகளிடம் தினமும் நிறைய பேச வேண்டும், ஆடவேண்டும், பாடவேண்டும். அவர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து ரசிக்க வேண்டும். நம்மை நண்பனாக ஏற்க அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் செய்யும் தவறுகளை தன்மையுடன் கோபமில்லாமல் சிரித்துக்கொண்டே திருத்துங்கள், தண்டனை பயமுறுத்தல் வேண்டாம்.
பள்ளிக்கூடம் செல்லும்போதும், திரும்பி வரும்போது ஆவலுடன், ஆசையோடு சிரித்து அவர்களோடு மகிழ வேண்டும். CHILDREN ARE MOULDED BY PARENTS நம்மை அட்டை காபி அடித்து தான் நம் குழந்தைகள் வளர்கிறார்கள். நாம் ஜாக்கிரதையாக நல்ல முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும். பொறுமை அவசியம். படிப்பு என்பது அடிப்படை, ஆனால் அதை விட ரொம்ப முக்கியம் அவர்கள் குணம், பண்பாடு, ஒழுக்கம். பக்தி அதில் கவனம் வேண்டும். அது தான் பிற்காலத்தில் குழந்தைகளின் வாழ்வை பெருமையாகும், சீராக்கும், பாராட்டுதல் பெற வைக்கவும்.
வெறும் மொபைல், கம்பியூட்டர் tv games வேண்டாம். குழந்தைகளின் கண்ணையும் புத்தியையும் கெடுத்துவிடும். ஓடி விளையாடு பாப்பா .அவசியம். பார்க், வீட்டின் மொட்டை மாடி, மற்றும் மைதானங்களில் மற்ற குழந்தைகளோடு விளையாட பழக்க வேண்டும். குழந்தைகள் கேள்வி எளிதில் பதில் சொல்ல முடியாதவை. வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள். பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தப்பாக சொல்லி தராமல் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லி முதலில் நாம் பதில் தெரிந்து கொள்வோம். ஒருபோதும் “ச்சீ வாயை மூடு. பேசாதே”தொணதொண என்று கேள்வி கேட்காதே” என்று அவர்களை அடக்கவே கூடாது. எரிச்சல் வேண்டாம். ஆர்வம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும்.
பசி என்று குழந்தை எப்போது சொன்னாலும் ஏதாவது நல்ல சத்துள்ள உணவு உடனே கொடுங்கள், அரட்டையிலோ,சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
ஒரு முக்கியமான வார்த்தை. உலகில் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், நமது கோப தாபங்களுக்கு வடிகால் இல்லை. குழந்தைக்கு தவம் இருக்கும் குடும்பங்களில் பலர் இன்னும் துன்பத்தில் சோகத்தில் இருக்கிறார்கள். ஞாபகம் இருக்கட்டும்.