ஸௌந்தர்ய லஹரி 37/103 – நங்கநல்லூர் J K SIVAN
37. விசுத்தி சக்கரத்தில் பார்வதி பரமேசுவர த்யானம்
विशुद्धौ ते शुद्धस्फटिकविशदं व्योमजनकं शिवं सेवे देवीमपि शिवसमानव्यवसिताम् ।
ययोः कान्त्या यान्त्याः शशिकिरणसारूप्यसरणे- विधूतान्तर्ध्वान्ता विलसति चकोरीव जगती ॥ ३७॥
viśuddhau tē śuddhasphaṭikaviśadaṃ vyōmajanakaṃ śivaṃ sēvē dēvīmapi śivasamānavyavasitām ।
yayōḥ kāntyā yāntyāḥ śaśikiraṇasārūpyasaraṇē- vidhūtāntardhvāntā vilasati chakōrīva jagatī ॥ 37 ॥
விஶுத்தௌ தே ஶுத்தஸ்படிக விஶதம் வ்யோம் ஜனகம் ஶிவம் ஸேவே தேவீமபி ஶிவஸமான வ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: ஶஶிகிரன ஸாரூப்ய ஸரணே: விதூதாந்தர் த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ 37
லலிதாம்பிகே, நீ வீற்றிருக்கும் விசுத்தி சக்கரத்தில் தெளிவான பளிங்கு போன்ற ரூபத்தை உடைய, ஆகாச தத்வத்தை தோற்றுவிப்பவராகிய பரமேஸ்வரனையும், அவரது ஸங்கல்பத்திற்கு ஏற்ற பொருத்தமான பத்னி தேவி உன்னையும் நான் ஒன்றாக சேர்த்து நமஸ்கரிக்கிறேன் அம்மா.
தாயே, நீ எப்படிப்பட்டவள் தெரியுமா, சொல்கிறேன் கேள். பூரண பால் நிலாவின் ஒளியில் மனம் களித்து விளையாடும் சகோர பக்ஷி போல் உன் காருண்ய அருள் நிலவொளியில் அஞ்ஞான இருள் மறைந்து ஞான ஒளி எங்கும் நிலவுகிறது. அந்த ஞான நிலவில் களிக்க வேண்டுகிறேன். அதற்கு நீ அருளவேண்டும் என்று சேவிக்கிறேன்”.
ஸ்ரீ சக்ர உபாசனையில் குண்டலினி சக்கரங்களில் விசுத்தி சக்ரம் பதினாறுதள கமலம் கொண்டது. ஆக்ஞா சக்கரத்தில் ஆத்ம தத்வம் விளக்கப்பட்டது. அந்த ஆத்ம தத்துவத்திலிருந்து தான் பரந்த விண்வெளி ஆகாசம் உருவாகியது.. இங்கு ஆத்மா மனஸ். சந்த்ரஸ்தானத்தில் உள்ள பார்வதியும் சூரியஸ்தானத்தில் உள்ள பரமேசுவரனும் விசுத்தி சக்கரத்தில் விளங்கும்போது மற்ற ஆனந்தங்கள் அகன்று விடுகிறது. பதினாறு நித்யைகளின் நிலவும் அப்போது இல்லை. சிவ தம்பதிகளின் ஆனந்தமயமான ஒளியே எல்லா ஜீவர்களுக்கும் ஜீவாதாரம்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் நமது சிதம்பரம் ஆகாச தத்துவ உபாஸனை க்ஷேத்திரம். சிவனுக்கும் சக்திக்கும் இவ் வுபாஸனையில் வ்யோமேசுவரன் என்றும் வ்யோமேசுவரி என்றும் பெயர். அவர்கள் 72 ஆகாச மயூகங்களுடன் உபாசிக்கப் படுவர். சிவன் அர்த்த நாரீசுவர மூர்த்தி எனப்படுகிறார். ஆதி சங்கரர் சூரிய சந்திர ஒளி போல் சிவனின் ஒளி அனைத்தும் பெற்று அம்பாள் ஸ்படிகம் மாதிரி தனக்கென்று ஒளியற்ற சிவனில் தனது சிவந்த ஒளியை நிரப்பி இருவரும் ஒரே வண்ணத்தில் ஜ்வலிக்கிறார்கள், நான் கண்டு களிக்கிறேன்” என்கிறார்.
லலிதா ஸஹஸ்ரநாமம் 476வது நாமம் டாகினி எனும் யோகினி விசுத்தி சக்ர நாயகி இளஞ்சிவப்பு வர்ணத்தவள் என்கிறது.
எல்லா மந்திரங்களுக்கும் தலையாயது பரப்ராஸாத மந்திரம். அதற்கு ஹம்ஸ மந்த்ரம் என்றும் பெயர். ”ஹ ”சிவன். ”ஸ” அம்பிகை என்று அதில் அர்த்தம்.