ஸௌந்தர்ய லஹரி – 29/103 நங்கநல்லூர் J K SIVAN
பரமசிவனை வரவேற்கும் வைபவம்
किरीटं वैरिञ्चं परिहर पुरः कैटभभिदः कठोरे कोटीरे स्खलसि जहि जम्भारिमुकुटम् ।
प्रणम्रेष्वेतेषु प्रसभमुपयातस्य भवनं भवस्याभ्युत्थाने तव परिजनोक्तिर्विजयते ॥ २९॥
kirīṭaṃ vairiñchaṃ parihara puraḥ kaiṭabhabhidaḥ kaṭhōrē kōṭīrē skhalasi jahi jambhārimukuṭam ।
praṇamrēṣvētēṣu prasabhamupayātasya bhavanaṃ bhavasyābhyutthānē tava parijanōktirvijayatē ॥ 29 ॥
கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித: கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயாதஸ்ய பவனம் பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர் விஜயதே 29
”அம்மா, லோகமாதா, பரமேஸ்வரி, விஷ்ணு இந்திரன், ப்ரம்மா முதலான சகல தேவர்களும், தெய்வங்களும் கிரீடம் உன் திருவடியில் பட சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துக் கொண்டிருக்கும்போது அதோ என்ன ஆச்சர்யம். திடீரென்று, உன்னைத் தேடி பரமேஸ்வரன் வந்து கொண்டிருக்கிறாரே, என்று வரவேற்க அவரையே பார்த்துக்கொண்டு காலடியில் கவனம் வைக்க தவறி விடாதே. அவசரமாக எழுந்திருக்கிறாயே, கீழே பார்த்து நட. கைடபாசுரனைக் கொன்ற விஷ்ணுவினுடைய கிரீடம் உன் பாதத்தை இடறி விட்டு விடப்போகிறது. இந்திரனுடைய மகுடத்தை விட்டு ஒதுங்கி உன் காலடியைத் தள்ளி வை. தட்டி தடுமாறிவிடப் போகிறது. இப்படியெல்லாம் உன் சேடிகள் உன்னை ஜாக்கிரதையாக நகர சொல்கின்ற வார்த்தைகள் கேட்கிறது என்று ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தை அமைத்திருக்கிறார்.
மேலே சொன்னது மேல் பூச்சாக அர்த்தம். உள்ளர்த்தம் என்ன தெரியுமா?
சிவனைக் கண்டதும் அம்பாள் குதூகலத்தில் துள்ளி எழுகிறாள் என்பது குண்டலினி பிரயாணத்தில் சக்தி சிரத்தில் ஸஹஸ்ராரத்தை காண்பது. அதை அடைவது. சஹஸ்ராரத்தில் காமேஸ்வரி காமேஸ்வரனோடு இணைகிறாள். இந்த நிலையில் சக்தி உபாசகன் முக்தி அடைகிறான். பரமாத்மாவை திடீரென்று ஒருநாள் தான் உபாசனையில் காணலாம். கிரீடங்கள் என்று சொல்வது இங்கே முக்தி அடைய முடியாமல் நடுவே எதிர்ப்படும் இடையூறுகள் முடிச்சுகள், க்ரந்திகள் . ப்ரம்மா விஷ்ணு இத்யாதி என்பது ப்ரம்ம க்ரந்தி, விஷ்ணு க்ரந்தி, ருத்ர க்ரந்தி. எனப்படும் முடிச்சுகள். ஸஹஸ்ராரத்தை அடைவதற்குள் இந்த முக்கிய க்ரந்திகளைத் தவிர மற்ற சிறிய தடைகள், க்ரந்திகளும் உள்ளன.