LIFE IS LIKE THIS. J K SIVAN

இது தாண்டா  வாழ்க்கை –   நங்கநல்லூர்  J K  SIVAN 

உலகத்தில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான  வாழ்க்கை இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை. ஒருவனுடைய வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அதுவே  என்றும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வயதாக ஆக  வாழ்க்கையில் பல் வேறு மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பொதுவாக  எல்லோருக்கும் உண்டான  சில விஷயங்களை அவ்வப்போது சிலர்  சொல்வதை ஒரு இடத்தில்  எழுதி வைத்திருந்தேன். அதைக் கொஞ்சம் விண்டு தருகிறேன். அது என்னவென்று தெரிந்து கொண்டால் ஏதாவது பயன் உண்டா என்று பாருங்களேன். 

வாழ்க்கை என்பது முழுசாக  வாழ்வதற்கு. ஒவ்வொரு சோதனையிலும் தைரியமாக அதை எதிர் கொள். நடுங்காதே.
வாழ்க்கை என்பது நாம்  எதிர்பார்த்தபடி அமைவதோ,  நடப்பதோ  அல்ல. தத்தளிக்கும்போது இதை மறக்காமல் இரு. அழாதே. வருவதை எதிர்கொள்ளும் கர்ணனாகிவிடு. ஏற்றுக்கொள். எதிர்நீச்சல் போடு.
நல்லது எது நடந்தாலும், எவர் மூலமாக நிறைவேறினாலும்  நன்றி சொல்ல தயங்காதே.
நம்பிக்கையை மட்டும் தளரவோ, நழுவவோ விடாதே.

பேசுபவனாக இருப்பதை விட  கேட்பவனாக இரு. ரொம்ப நல்லது. பேசினாலும் உன்னைப் பற்றி பேசாமல் அடுத்தவர்களை பற்றி பேசு, இகழ்ந்து அல்ல, பெருமையாக, பாராட்டி. புரிகிறதா? அப்போது தான் உன்னைப்  பற்றியும்  பிறர்  அப்படிப்  பேசுவது உன் காதில் விழும். சமூகத்தில் நீ  உயர்ந்தவனாக மதிக்கப்படுவாய்.

எதையும் ஆக்க பூர்வமாக  அணுகு.  உனக்கோ பிறருக்கோ எப்படி பயன்படும் என்ற சிந்தனையில் சேவை மனப்பான்மையோடு அந்த காரியத்தை செய்.உனக்கென்று சில கோட்பாடுகளை தனித்வமாக அமைத்துக்கொண்டு அதன் படி நட.  உன்  எல்லையை நீயே தாண்டாதே.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு  என்பார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த காரியமும் செய்யாதே, முடிவெடுக்காதே. யோசிப்பதற்கு தான் உனக்கு மூளை கொடுக்கப்பட்டிருக்கிறது.

சோம்பேறி என்று பேர் எடுக்காதே. சுறுசுறுப்பாக இயங்கு. சோம்பேறித்தனம் உன் வாழ்க்கையின்  இன்பத்தை, சுகத்தை,  திருடிவிடும்.
‘ஆமாம் சாமியாக’ எதற்கெடுத்தாலும் ஆமாம் என்று தலை ஆட்டி  ஒப்புக்கொள்ளாதே.  தீவிரமாக யோசி. , தெரியவில்லையென்றால்  நம்பிக்கைக்குகந்த நல்ல நண்பர்களை கலந்தாலோசி.
உடம்பில் சக்தி இருக்கும்போதே  நாலு இடங்களுக்குப் போ.  பார்.  நிறைய  மக்களைச்  சந்தித்து நட்பைப்  பெருக்கிக் கொள் . அது தான் செல்வம்.
கண்,  காது, புத்தி, எல்லாவற்றையும் நன்றாக  கவனிக்க,  புரிந்து கொள்ள,  உதவுபவை.  உஷாராகவே எப்போதும் இரு.
தக்க சமய சந்தர்ப்பங்களை அவை அருகே வரும்போது கெட்டியாக பிடித்துக் கொள்ள உதவும்.

பயப்படுவது தப்பு. அது உனக்கு  நம்பர் ஒன்  எதிரி.  இடம் கொடுக்காதே. வாழ்க்கையை நரகமாகிவிடும்.
”நான், தான்”  என்ற அகம்பாவம் வேண்டாம்.  நீ ஒரு புல் , கொசு,  உன்னை விழுங்கி சாப்பிடும் சாமர்த்தியக் காரர்கள் அறிவு ஜீவிகள் சுற்றிலும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கவேண்டும்.  அவர்களில் அநேகர்  நல்லவர்கள்.   உனக்கு வழிகாட்டுபவர்கள். அகம்பாவத்தால், கர்வத்தால் அவர்களை இழக்காதே.  பொன் முட்டையிடும் வாத்துகள் அவர்கள். கொன்றுவிடாதே.

உடல் பயிற்சி அவசியம். நல்ல ஆரோக்யமான உடம்பு உனக்கு  போனஸ்.  புதையல்.   கோட்டை விட்டுவிடாதே.மனதின் ஆரோக்கியத்துக்கு உடல் ஆரோக்யம் அவசியம்

யாரைக் காதலிக்கிறாயோ,இல்லையோ, முதலில் நீ உன்னைக்  காதலி. உன்னை  உயர்த்துவதும், நீ நல் வழியில் நடப்பதற்கும் உன் மனம், இதயம், புத்தி, உடல் ரொம்ப நெருக்கமானவைகள்.

”மறப்போம்  மன்னிப்போம்”  என்பது அருமையான பாடம்.  தவறு எல்லோரும் தான் செய்கிறோம். நீ தவறு செய்தாலும் அதை உணர்ந்த அடுத்த கணமே  தைரியமாக  ஒப்புக்கொண்டு  உன் தவறுக்கு  மன்னிப்பு கேட்க தயங்காதே. அது உன்னை வாழ்க்கையில் உயர்ந்த பண்பாளனாக உயர்த்தும். அதேபோல் பிறர் தவறு செய்தாலும்  மன்னித்து மறந்து விடு. 

நீ செய்த தவறுகளை மறக்காதே. மீண்டும் அதே, அத்தகைய  தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள உதவும்.எதற்கும் உணர்ச்சி வசப்பட்டுவிடாதே. நீ சிவாஜி கணேசனோ,  மார்லன் ப்ராண்டோவோ  அல்ல. வாழ்க்கை  ஒரு சோதனைக் களம் . அதில் வெற்றிபெறவேண்டியது அவசியம். வெற்றி பெற்றவன் தான் புத்திசாலி.

இன்னும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *