ஸௌந்தர்ய லஹரி 13/103 – நங்கநல்லூர் J K SIVAN
13. காமஜயம்
नरं वर्षीयांसं नयनविरसं नर्मसु जडं तवापाङ्गालोके पतितमनुधावन्ति शतशः ।
गलद्वेणीबन्धाः कुचकलशविस्रस्तसिचया हठात् त्रुट्यत्काञ्च्यो विगलितदुकूला युवतयः ॥ १३॥
naraṃ varṣīyāṃsaṃ nayanavirasaṃ narmasu jaḍaṃ thavaavāpāṅgālōkē patitamanudhāvanti śataśaḥ ।
galadvēṇībandhāḥ kuchakalaśavisrastasichayā aṭhāt truṭyatkāñchyō vigalitadukūlā yuvatayaḥ ॥ 13 ॥
நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜடம் தவாபாங்காலோகே பதித மனுதாவந்தி ஶதஶ:
கலத்வேணீபந்தா: குசகலஶ விஸ்ரஸ்த ஸிசயா ஹடாத் த்ருட்யத் காஞ்ச்யோ விகலித துகூலா யுவதய:
இந்த ஸ்லோகத்தில் அம்பாள் லலிதாவின் கடைக்கண் பார்வை யாரோ ஒரு விருத்தாப்பியன், அருவருப்பான உருவம் கொண்டவன், துளியும் காம உணர்ச்சி இல்லாத ஜடம், அவன் மேல் விழுந்தால் கூட என்ன ஆகுமாம் தெரியுமா? நூற்றுக்கணக்கான இளம் மாதர்கள் தமது மேல் துணி, இடுப்புத்துணி அவிழ்ந்தது கூட தெரியாமல் அவனை இச்சையோடு தேடி ஓடிவருவார்களாம். இதன் உள்ளர்த்தம் என்ன?
மன்மதனும் கரும்பு வில், புஷ்பபாணங்கள் வைத்திருப்பவன், காமாக்ஷியிடமும் அவை உண்டு. மன்மதனை விட பல கோடி மடங்கு ஸௌந்தர்யம் கொண்டவள் லலிதாம்பிகை. இருந்தாலும் அவன் எண்ணம் சக்தி வேறு, அவள் எண்ணம் சக்தி வேறு. அவன் காமன். தேஹ திருப்தி இச்சையை தூண்டுபவன். அம்பாள் இச்சாசக்தி ஸ்வரூபிணி, மனதில் அவள் மேல் பக்தியை பாசத்தோடு நேசத்தோடு தூண்டுபவள். கடைக்கண்பார்வைக்கே
இப்படி ஒரு சக்தி என்றால் தேவியின் பூரண கடாக்ஷம் நம் மேல் நேரடியாக விழுந்தால் அப்புறம் என்ன, நமக்கு மோக்ஷத்தின் கதவுகள் திறந்து காத்திருக்கும். லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 590 இதை தான் 0 kaṭākṣa-kiṅkarī-bhūta-kamalā-koṭi-sevitā. கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதா .. என்கிறது. அவள் கடைக்கண் பார்வை லக்ஷக்கணக்கான லக்ஷ்மிகளின் அருள் பொருள் இன்பம் எல்லாமே பெறச் செய்யும்.
இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படும் க்ரூபியான வயோதிகம் இளமை, அழகு பெறுவது என்பது ஒருவன் அம்பாள் கடைக்கண் கடாக்ஷத்தால் உலக இச்சைகளை துறந்து யோகியாக ஞான ஒளி பெறுவான் என்று உணர்த்துகிறது. யௌவன ஸ்த்ரீகள் அவன் அழகில் மயங்கி மேலும் கீழும் ஆடை அவிழ்ந்தது கூட தெரியாமல் ஓடி வருவார்கள் என்பது அஞ்ஞானிகள் அம்பாள் கடாக்ஷத்தால் ஞானம் பெற்ற ஞானியைத்தேடி சகலமும் துறந்து மோக்ஷம் பெற ஓடிவருவார்கள் என்று அர்த்தமாகிறது. உலக ஈர்ப்புகளை துறப்பது தான் ஆடைகள் அவிழ்வது இங்கு. அம்பாள் கடக்ஷம் பெற்ற ஞானி என்பது அவ்வப்போது அம்பாலிளின் அருளால் உலகில் ஆங்காங்கே நம்மை நல்வழிப்படுத்த சங்கரர்,மஹா பெரியவா போல் நமக்கு கிடைக்கும் குருமார்கள். மஹா பெரியவாளுக்கே காமாக்ஷி என்று தானே பெயர்.
இந்த ஸ்லோகம் மூலம் நாம் பெறும் அறிவுரை ”நீ என்னவாக வேண்டுமானாலும் இரு, எதை வேண்டுமானாலும் செய், ஆனால் உன் எண்ணம் லோகமாதாவின் மேல் செல்லட்டும். அவள் அருளால் நீ உலக இன்பம் சகலமும் பெறுவாய், ஞானமும் அடைவாய். அப்புறம் உனக்கென்ன வேண்டும்? புண்ய நதி, புண்ய க்ஷேத்ரம் எல்லாம் தேடி போடவேண்டாம், மனதார அம்பாள் கருணையை வேண்டு. அது போதும். மற்றதெல்லாம் அவள் கடமை. அவள் பார்த்துக் கொள்வாள்.
”ஸகல விஷயங்களிலும் நமக்குள்ள சித்த விகாரங்கள் எல்லாம் நிவிருத்தியாக வேண்டும் என்பதற் காகத்தான் கரும்புவில்லையும் புஷ்பபாணங்களையும் அம்பாள் தன் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த அம்பாளுடைய கடாக்ஷம் நமக்கு ஏற்பட்டு விடுமானால், மூககவி சொல்லுகிறதுபோல் எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கிற திருஷ்டி, எந்த விஷயங்களிலும் மோகம் ஏற்படாத நிலை இவை உண்டாகிவிடும். அம்பாளுடைய கடாக்ஷம் கிடைத்தால் எவ்வளவு காமத்தை உண்டுபண்ணும்படியான வஸ்துவாயிருந்தாலும் அது காமத்தை உண்டுபண்ணாது.” என்பது மஹா பெரியவா அருள்வாக்கு.