பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
நான் சொன்னதை செய்வியா?
‘கிருஷ்ணா எனக்கு ஒரு வரம் தரியா?” என்று கிருஷ்ணனை கேட்டேன்.”உனக்கு என்னடா குறை? இந்த வயசிலே உனக்கு என்ன ஆசை அப்படி?””ஐயோ கிருஷ்ணா ஆசை ஒண்ணுமே இல்லை. நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க முடியலே””ஏன்? என்ன விஷயம் அது?””அதையேன் கேக்கறே கிருஷ்ணா, என்கிட்டே ஒரு சாம்சங் அன்றாய்டு போன் இருக்கு.அதிலே 7000 மெசேஜ் நான் இன்னும் படிக்கலே, முடியலே, இத்தனைக்கும் எப்போவும் போனும் கையுமாவே இருக்கேன் என்று என் பேர்ல என் மனைவி உச்ச நீதி மன்ற வழக்கு போட்டு நிலுவையில் இருக்கே. என் ப்ராபளம் என்ன வென்றால் ஆயிரக்கணக்கான வாட்ஸாப்ப் செய்திகள் , போட்டோக்கள் ராவும் பகலும் அனுப்பி, ”அப்புறம் போனில் நான் உங்களுக்கு அனுப்பிச்சேன் பார்த்தீளா, என்ன நினைக்கிறேள் ?” என்று என் அபிப்ராயம் கேட்பவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன். எப்படி அதை எல்லாம் பார்ப்பது. வாழ்நாள் போறாது போல் இருக்கே கிருஷ்ணா. இன்னும் ஐம்பது வருஷம் எக்ஸ்ட்ரா கொடேன்.”ஏண்டா 84 போறலியா உனக்கு?””என்ன பேசறே நீ ஒண்ணும் தெரியாம கிருஷ்ணா? இத்தனை வருஷம் கேட்டேனா, இப்போ தானே ரெண்டு மூணு வருஷமா…., இந்த வாட்ஸாப்ப் மெஸேஜ் தொந்தரவு எல்லாம் சமீபத்திலே வந்தது தானே, அது தவிர, டெலிக்ராம் னு ஒண்ணு , யூட்யூப் னு ஒண்ணு . கலிகாலத்தில் ராக்ஷஸன் இந்த ரூபத்தில் வருவான்னு நீ ஒரு இடத்திலேயும் சொல்லலியேப்பா”
++
சரி, அப்படி எனக்கு வந்த ஒரு வாட்ஸாப்ப் மெசேஜ் லே ஒரு அருமையான விஷயம் குப்பையிலே குந்து மணி மாதிரி கிடைச்சுதே இப்போ அதை பத்தி மட்டும் பேசுவோம். அதைச் சுருக்கமா சொல்றேன்.
காஞ்சிபுரத்திலே ஒரு கிழவி. அவளுக்கு மஹா பெரியவாளை ஒரு நாளாவது பாக்கலேன்னா தூக்கமே வராது. தினமும் வந்து தூரத்திலே நின்னு பார்த்துட்டு நமஸ்கரித்துவிட்டு போவாள். ஒவ்வொருநாளும் எத்தனையோ பணக்காரர்கள், பெரிய மனிதர்கள் காரில் வந்து கூடை கூடையாக பெரியவாளுக்கு என்னென்னமோ பொருள்கள் ஏதாவது வாங்கி வந்து சமர்ப்பிக்கிறார்களே , நம்மால் ஒண்ணுமே செய்ய முடியவில்லையே. என்ன செய்வது ?இது நாம் வந்த வழி” என்று பெருமூச்சு விடுவாள்.
அவளை மஹா பெரியவா கவனிக்காமல் இல்லை. ஒருநாள் அவள் ஏக்கப்பெருமூச்சு விடுவதைப் பார்த்து விட்டு ”என்ன உனக்கு மனசிலே குறை, சொல்லு என்கிட்டே” என்று கேட்டார் மனமுருகி பெரியவாளிடம் தனது இயலாமையைச் சொல்லி விட்டாள்.
‘அட இது தான் உன் மனசுலே குறையா … அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.. நீ பார்த்திருக்கியோல்லியோ,, நான் யார் கொண்டுவந்து தர வஸ்துவையும் தொடறது கூட கிடையாது. நான் ஆசைப்பட்டு அதெல்லாம் கேட்டதும் இல்லை; இதெல்லாம் என் மனசுக்குப் பிடிக்குமோ ன்னுட்டு கூட அதெல்லாம் கொண்டு வரவா நினைச்சுப் பார்க்கிறதில்லே. அது சரி நீ எனக்குப் பிடிச்ச ஒரு வேலை சொல்றேன், செய்யறியா ?”
சாமி என்ன கேக்கபோவுதோ என்று தவிப்போடு அந்த பாட்டி காத்து நின்றாள்.
”சொல்லுங்க சாமி” என்று ஈனஸ்வரத்தில் பதிலளித்தாள்.
“நம்ம கோசாலை ரொம்ப பெரிசு இல்லை. அந்த சாதாரண மாட்டுக் கொட்டிலில் இருந்து பசுஞ்சாணி எடுத்து, வரட்டி தட்டு. காய வைத்துக் கொண்டு வந்து தினமும் கொடுப்பியா. மடத்திலே தினமும் ஹோமம் நடக்கிறது. சுத்தமான பசுஞ்சாணி வரட்டியை உபயோகப்படுத்தணும். அந்த நல்ல கார்யத்தை உன்கிட்டே ஒப்படைக்கிறேன். நீ செய்யேன்”பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!சிட்டாய் பறந்தாள் பாட்டி கோசாலைக்கு.
கோணி கோணியா கோமேதகம், பவுன், வைரம் கொட்டி நிரப்பி வந்து தந்தாலும் தொடாத அந்த ப்ரம்மஞானி சாணியால் வறட்டி தட்டி தாயேன் என்று கேட்கும்போது அவர் அடி மனதில் ஆழத்தில் இருந்த ஆர்வம், ஆசை, எளிமை, அந்த பக்தை மேல் பாசம், எல்லாம் அந்த பாட்டிக்கு புரிந்ததோ இல்லையோ, நமக்கு நிச்சயம் புரியும்.