”மஹா பெரியவா எனும் வைத்யநாதன் ”
நங்கநல்லூர் J K SIVAN
சந்யாசிகள் ஆவணி பௌர்ணமியிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரை நாலு மாதங்கள் ”சாதுர்மாஸ்யம்” என்று ஒரே இடத்தில் தங்கி தியானம் பாராயணம் பூஜை, பிரசங்கம் என்று ஈடுபட்டிருப்பவர்கள். மஹா பெரியவா இப்படி காஞ்சியில் சாதுர்மாஸ்யம் இருந்த சமயம் ஒருநாள் ஒரு அம்மா தன்னுடைய இரண்டு பெண்களில் இளையவளோடு பெரியவாளை தரிசனம் பண்ண வந்தாள். மூத்தவளுக்கு கல்யாணமாகி விட்டது. இளையவள் M A படித்துவிட்டு வேலையில் இருந்தவளுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தாள் அந்த அம்மா. ஆனால், திடீரென்று ஒருநாள் அந்தப் பெண் ஏனோ புத்தி ஸ்வாதீனம் இல்லாதவள் போல் பேசவும், சிரிக்கவும் ஆரம்பித்தாள். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசவே அக்கம் பக்கம் இருப்பவர்கள், ”இவள் எதையோ பார்த்து பயந்து விட்டாள், காத்து கருப்பு வேலை, மூளைக் கோளாறு” என்று ஆளாளுக்கு தெரிந்த உபாயங்களை எல்லாம் அம்மாவுக்கு சொன்னார்கள். டாக்டர்கலிடம் சென்றபோது அந்த ஸ்கேன் இந்த ஸ்கேன், டெஸ்ட், லேப் டெஸ்ட், எக்கச் சக்க சோதனைகள் எடுக்க வைத்து பணம் கரைந்தது.
”வேலூருக்கு கூட்டிக் கிட்டு போயி மூளையில ஒரு ஆபரேஷன் பண்ணினா எல்லாம் சரியாயிடும்” என்று சிலர் சொல்ல ஆரம்பிக்க அந்த அம்மாவுக்கோ வயிற்றில் நெருப்பு. ஏகக் கவலை! கல்யாணம் பண்ணப் போற சமயத்தில் பெண்ணுக்கு இப்படி ஒரு கஷ்டமா? அவளுக்கு தெரிந்த ஒரே பெரிய டாக்டர் காஞ்சியில் இருக்கும் மஹா பெரியவா. ஆகவே தான் அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு காஞ்சிக்கு வந்தாள். சாயங்காலம் வரை காத்திருந்தும் மஹா பெரியவா தரிசனம் பெற முடியவில்லை. இரவு முழுவதும் அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு “ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர” என்று ஜபித்த வண்ணம் இருந்தாள். அந்தப் பெண்ணோ, கத்திக் கத்தி மயக்கம் அடைந்து விட்டாள். மறுநாள் காலையில் மறுபடியும் மடத்துக்கு சென்று பெரியவாள் தரிசனம் கிடைத்ததும் கதறி தீர்த்து விட்டாள் அந்த அம்மா.
“பெரியவாதான் எப்படியாவது காப்பாத்தணும்! திடீர்னு புத்தி பேதலிச்ச மாதிரி ஆயிட்டா…நல்ல குழந்தை, கல்யாணத்துக்கு பாத்துண்டு இருக்கறச்சே, இப்படி ஆயிடுத்து பெரியவா நீங்க காப்பாத்துங்கோ! ”
அந்தப் பெண் பெரியவா முன் பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கி நின்று கொண்டிருந்தாள். அவர் அருட் கடாக்ஷம் அவள் மேல் விழுந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் மடத்துக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணினார்கள். மூன்றாவது நாள், பெரியவா அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டே, “அபிராமி அந்தாதி தெரியுமா உனக்கு, தெரிந்தால் சொல்ல ஆரம்பி!…” என்று உத்தரவிட்டார். நல்லவேளை அந்த பெண்ணுக்கு அபிராமி அந்தாதி நல்ல பழக்கம். பெரியவாளுடைய கமலத் திருவடிகளை பார்த்துக் கொண்டே அந்த பெண்ணும், “தாரமர்க் கொன்றையும் ஷண்பக மாலையும் சாற்றும், தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே!..” என்று கணீரென்று சொல்ல ஆரம்பித்தாள் ! அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது!
வரிசையாக பாடிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் நடுவில் மயக்கமடைந்தாள். அவளை அப்படியே இருக்கட்டும் விட்டுடு” என்று சொல்லிவிட்டார் பெரியவா. கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவள், முற்றிலும் பூரணமாக குணமடைந்திருந்தாள் ! அம்மாவும், பெண்ணும் பெரியவாளின் திருவடிகளில் கண்ணீரைக் காணிக்கையாக்கினார்கள். பெரியவாளுக்கு அந்த பெண்ணுக்கு என்ன ப்ராப்ளம் என்று திருஷ்டியில் தெரிந்திருக்கிறது. எந்த டாக்டருக்கும், பெண்ணுக்கும், அவள் அம்மாவுக்கும் நமக்கும் தெரியாத ரஹஸ்யம் இது. அதற்கு எது வைத்தியம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அது தான் அபிராமி அந்தாதியோ? அல்லது அவருடைய காருண்ய கடைக்கண் பார்வை தான் மருந்தோ, வைத்யமோ?
மஹான்களின் கருணாகடாக்ஷம் ஒரு முறை நம் மேல் விழுந்தாலே போதும்! கோடி கோடி ஜன்ம வினைகளை பொசுக்கிவிடும்! அது நமக்கு ப்ரத்யக்ஷத்தில் தெரியக்கூட தெரியாது. நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் “அவர் இஷ்டம்” என்று இருந்து விட்டால், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிஸுவைப் போல், நாம் நிஸ் சிந்தையாக இருக்க, அவர் தாயுமான ஸ்வாமியாக இருந்து நம்மை ரக்ஷிப்பார்! இது சத்யம்! பெரியவாள் வாழ்ந்த காலத்தில், ஏன் இப்பவும் கூட அவர் பக்தர்களுக்கு அவர் தான் வைத்யநாதன்.
This article appeared in the free weekly newspaper NEIGHBOUR SPEAKS being circulated widely covering Mambalam, Ashoknagar, T.nagar- every saturday this series of article on the above topic from J K Sivan would be published.