ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்
பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் -29-30
29 .गेयं गीता नाम सहस्रं ध्येयं श्रीपति रूपमजस्रम् । नेयं सज्जन सङ्गे चित्तं देयं दीनजनाय च वित्तम् ॥ २७॥
geyaM giitaa naama sahasraM dhyeyaM shriipati ruupamajasram neyaM sajjana saNge chittaM deyaM diinajanaaya cha vittam
கேயம் கீதா நாமசஹஸ்ரம் தேயம் ஸ்ரீபதி ரூமஜஸ்ரம் நேயம் சஜ்ஜன சங்கே சித்தம் தேயம் தீன ஜனாயச வித்தம்
இதை இயற்றிய ஆதிசங்கரரின் சிஷ்யர் பெயர் சுமத்ரர். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் கேட்கவும், அதில் பங்குகொள்ளும் பாக்கியமும் எனக்கு கிட்டியது . கிட்டத்தட்ட 30 வருஷங்களுக்கும் மேலாக ஒவ்வொரு சனிக்கிழமையும் விடாது யார் வீட்டிலாவதோ, பொது இடத்திலோ, கோவிலிலோ க்ஷேத்ரத்திலோ தவறாமல் பாராயணம் செய்து வரும் ஒரு குடும்பம் திருமதி லதா ராமானுஜம் குடும்பம். (1000 மாவது விஷ்ணு சஹஸ்ரநாமத்தை 1000 பேருடன் சேர்ந்து குருக்ஷேத்ரத்தில் பீஷ்மர் உபதேசித்த இடத்திலேயே அமர்ந்து பாராயணம் செய்தவர்கள்), என் வீட்டின் அருகிலேயே இருப்பதால் தான் இந்த சத்சங்கம் எனக்கு கிட்டியது. முடிந்த போதெல்லாம் அவர்களோடு சேர்ந்து சில வாரங்கள் விஷ்ணுவை பாராயணம் செய்தேன் .
சுமத்ரர் இந்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறார்:
”அப்பனே நீ நல்ல பையனாக கீதையைப் படி, முக்கியமாக விஷ்ணுவை மனதில் த்யானம் செய். இதயத்தில் கட்டிப் போடு. விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய். கஷடமே இல்லை. நிறைய தடவை கேட்டுக் கொண்டே வந்தால் தங்கு தடங்கல் இன்றி மனதில் பதிந்து விடக்கூடிய அற்புத வார்த்தைகள் கொண்ட ஸ்லோகம். சொல்லவும் நாவுக்கு சுகமானபடி பீஷ்மர் சொன்னதை, வேத வியாசர் நமக்கு எழுதி தந்திருக் கிறார்.
பரந்த மனது, பரிசுத்த மனது வாய்ந்தோரைச் சேர். இதற்கு பெயர் தான் சத் சங்கம். செல்வத்தை தேவை யானவர்களுக்கும் ஏழைகளுக்கும் வினியோகி. தானம் செய். இதனால் உனக்கு என்ன ஆகும் என்று சொல்ல வில்லையே என்று யோசிக்கிறாயா? நீயே விஷ்ணு ஆனபிறகு வேறு உனக்கு நான் என்ன சொல்லத் தேவை? கோவிந்த நாம பஜனை யிலிருந்து உயரே போக ஆரம்பிப்போம். ஆதார ஸ்ருதியாக நீ சொல்லவேண்டியது ” ஹே கோவிந்தா! என்ற நாமம் ஒன்றை மட்டுமே தான்.
30. .सुखतः क्रियते रामाभोगः पश्चाद्धन्त शरीरे रोगः ।यद्यपि लोके मरणं शरणं तदपि न मुञ्चति पापाचरणम् ॥ २८॥
sukhataH kriyate raamaabhogaH pashchaaddhanta shariire rogaH . yadyapi loke maraNaM sharaNaM tadapi na muJNchati paapaacharaNam.
சுகதா க்ரியதே ராமா போகா பச்சாத் தந்த சரீரே ரோகாயத்யபி லோகே மரணம் சரணம் ததபி ந முஞ்ச்ஜதி பாபா ச்சரணம்
ஹே, மானுடா, எப்போது நீ ஆசையில், மோகா வேசத்தில், உன்னை இழந்து விட்டாயோ உன் உடல் இனி உனக்கு சொந்தமில்லை. பல வியாதிகளுக்கு அது தீனியாகிவிட்டதை புரிந்துகொள். வாசலுக்கு வெளியே மரணம் காலிங் பெல் அடிக்கிறதே. உன்னைக் கூட்டிப்போக காத்திருக்கிறது ஒரு எருமை மாடு, அதன் மேல் ஒரு இரக்கமில்லாதவன் கையில் ஒரு நீண்ட சுருக்குக் கயிறுடன் காத்திருக்கிறான், என்று தெரிந்தும் கூட இன்னுமா பாப வழியில் போய்க் கொண்டிருப்பாய்? இப்போதாவது உன்னை மாற்றிக்கொள். இப்போது கூட அதற்கு நேரம் இருக்கிறது. இதிலிருந்து தப்பவும் உனக்கு ஒரு வழியிருக்கிறதே அதை நினைவில் கொண்டாயா? கெட்டியாக கோவிந்தனைப் பிடித்துக்கொள். எவ்வளவு நேரமாக உனக்காக அவன் தனது காக்கும் கரங்களை உன்னை நோக்கி நீட்டிக் காத்திருக்கிறான். நீ அவனை அணுகாவிட்டால், அவனை விட்டு தூரமாகவே விலகிப்போனால் அதற்கு அவன் என்ன செய்வான்? ”ஹே கோவிந்தா”என்று மனமாரச் சொல். அவன் உன்னருகே வருவான்.