கேள்வியின் நாயகன். நங்கநல்லூர் J K SIVAN
வில், அம்பு, கத்தி, கோடாரி, ஈட்டி, வாள் , கதாயுதம், யானை, குதிரை, தேர் காலாட்படை, என்று மனிதர்கள் பலத்தோடும் வீரத்தோடும், உயிரை லக்ஷியம் செய்யாமல் 18 நாட்கள் போரிட்டு அநேகமாக அனைவருமே இறந்த ரத்தக் காடு தான் குருக்ஷேத்ரம். ஹரியானாவில் இப்போது உள்ளது. தர்மக்ஷேத்ரம் என்றும் பெயர். கீதைஸ்தலம். குரு என்கிற ராஜாவின் வம்சத்தினர் தான் கௌரவர்களும் பாண்டவர்களும். சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள். பெரியப்பா பாண்டுவின் பிள்ளைகள் ஐவர் தான் . சித்தப்பா பிள்ளைகள் நூறு பேர் துரியோதனாதியர். கௌரவர்கள்.
மஹா பாரத யுத்த பூமி யான குருக்ஷேத்ரம் சரஸ்வதி நதியும் த்ரிஷத்வதி நதியும் சங்கமிக்கும் இடம். இதைத் தனது ராஜ்யமாக தேர்ந்தெடுத்தவன் குரு என்கிற ராஜா. அங்கே எட்டு மஹிமைகள் உண்டு. தபஸ், சத்யம், மன்னித்தல்,தயை, சுத்தம், தானம், பக்தி, ப்ரஹ்மசர்யம், இவை மலிந்த பிரதேசம் குருக்ஷேத்ரம்.
மஹா விஷ்ணு ராஜா குருவுக்கு ரெண்டு வரம் கொடுத்தார். ஒன்று. குருக்ஷேத்ரம் புண்ய பூமி யாக இருக்க.
ரெண்டாவது அங்கு மரணமடைந்த எவரும் விண்ணுலகம் சேர்வார்கள். குருக்ஷேத்ரம் எத்தனையோ ராஜாக்கள், ராஜ்யங்களை பார்த்திருக்கிறது. எண்ணற்ற ஹிந்துக்கள் சென்று தரிசித்து வணங்கும் ஸ்தலம் குருக்ஷேத்ரம். எனக்கு ஒரு முறை தரிசிக்க ஆசை. இன்னும் அங்கே செல்லும் பாக்யம் கிட்டவில்லை.
என் எண்ணம் பின்னோக்கி படுவேகமாக சென்று இதோ நான் துவாபர யுகத்தில் மஹா பாரத யுத்த சமயத்துக்கே இட்டுச் சென்றது. குருக்ஷேத்ரத்தில் பதினெட்டு நாள் யுத்தம் முடிந்து 19வது நாளில் நிற்கிறேன்.
நேற்று தான் மஹா பாரத யுத்தம் நடந்து முடிந்தது. சஞ்சயன் நடந்து முடிந்த சகல விஷயங்களையும் ஒன்றுவிடாமல் முதல் நாள் முதல் விரிவாக கண்டவன். இதோ என் எதிரே அவன் தனியாக நிற்கிறான்.
அவனுக்கே ஆச்சர்யம். குருக்ஷேத்ரம் ஒரு பெரிய யுத்த பூமியா, இல்லை துவாபர யுகத்தில் மிகப்பெரிய மயான பூமியா? ஆஹா, எங்கும் ரத்த வெள்ளம், உயிரற்ற உடல்கள், சேதமான ஆயுதங்கள், தேர்கள், …… 18 நாள் யுத்தம் பல உயிர்களைக் குடித்து விட்டதே. எங்கும் அரைகுறை உயிர்களின் ஈனஸ்வரங்கள் ஓய்ந்து போய் விட்டன. காக்கை, கழுகு, பிணந்தின்னி மிருகங்களின் அசைவைத் தவிர வேறெந்த நடமாட்டமும் இல்லை. பொட்டு சப்தமும் காணோமே. இது தான் மயான அமைதியோ? அத்தனை பிணங்களும் சில நாட்களுக்கு முன்பு எவ்வளவு, அகம்பாவத்தோடு பேசிய பேச்சாளிகள்? எவ்வளவு வீரமான சொற்கள். படைகள் கொண்ட பலசாலி ராஜாக்கள்? இதோ இப்போது காக்கை நரி கழுகு ஓநாய் தான் அவற்றை சுற்றி. மற்ற உறவினர்கள் வீராதி வீர சூரர்கள்.எங்கே அவர்கள் நாடு நகரம், யானை குதிரை படை எல்லாம்?
சஞ்சயன் சுற்றிலும் பார்த்தான். அவனுக்கு பரிச்சயமாக இருந்த எல்லோருமே காணாமல் போன இடமாக அல்லவா ஆகிவிட்டது இந்த குருக்ஷேத்ரம். இங்கே தான் கிருஷ்ணன் தேர் ஓட்ட அர்ஜுனனும், தனியாக பீமனும் வாழைக்காய் சீவுவது போல் எண்ணற்ற உயிர்களை சூறையாடி னார்கள். எறும்பு புற்றை மிதித்து நசுக்கிய யானையாக பீமன் கௌரவ சேனையை அழித்தானே . ஓஹோ , இது தான் ‘உலகே மாயம் வாழ்வே மாயம் ” பாடவேண்டிய இடமோ?
சஞ்சயனுக்கு உடல் வியர்த்தது. மார்பு படபடவென்று . .அங்கே அவன் தியாக இல்லை. இன்னும் வேறு யாரோ அவனோடு அங்கே இருப்பது போல் தோன்றியது. ஆமாம் இதோ குரல் கேட்கிறதே.
”சஞ்சயா என்ன புரிந்து கொண்டாய்?”
”யார் பேசுவது? திரும்பிப் பார்த்த சஞ்சயன் முன் ஒரு காவி அணிந்த முதியவன்.
”ஐயா நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள் இங்கே யுத்த பூமியில் ?- சஞ்சயன் .
” சஞ்சயா, நீ என்ன செய்கிறாய் நினைக்கிறாய் அதைச் சொல். ….உனக்கு உண்மையிலேயே இங்கே நடந்தது என்ன என்று புரிந்ததா? அப்போது தான் குருக்ஷேத்ரத்தின் அர்த்தம் புரியும் ”
” சுவாமி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. எனக்கு மஹாபாரதம் ஒரு கதையல்ல, ஒரு தத்துவம் என்றஅளவு தான் புரிகிறது”
“நீ கெட்டிக்காரன். ஆமாம் மஹாபாரத யுத்தம் ஒரு தத்துவம் தான். உன் மனதில் எழுகிற சந்தேகங்கள் எனக்கு புரிகிறது . நானே சொல்கிறேன் கேள்.
”சஞ்சயா, திவ்ய நேத்ரங்கள் கொடுக்கப்பட்டதால் நீ இருந்த இடத்திலிருந்தே குருக்ஷேத்திர மஹா பாரத யுத்தத்தை முழுதும் திவ்ய தரிசனம் பெற்று திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்னவன் அல்லவா?. நான் கேட்பதற்கு பதில் சொல். பாண்டவர்கள் யார்?
”நீங்களே சொல்லுங்கள்”
”உன்னுள்ளே இருக்கும் ஐந்து புலன்கள் .
”கௌரவர்கள் யார் தெரியுமா?
”தெரியவில்லை, அதையும் சொல்லுங்கள் சுவாமி”
“உனக்கு உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் நூறு தப்பிதங்கள். ஒவ்வொரு நாளும் உன்னுடைய ஐந்து புலன்கள் அவற்றோடு போராடுகிறதே. எப்படி என்று தெரியுமோ?”
‘சத்தியமாக என்னால் உணர முடியவில்லை சுவாமி சொல்லுங்கள் ”
“ கிருஷ்ணன் தேரில் பூட்டி குதிரைகளை ஓட்டினானே , அந்த குதிரைகள் தான் உன் மனம், ஐம் புலன்கள். குதிரைகளை அடக்கி ஓட்டியவ கிருஷ்ணன் தான் உன் உள்ளே இருக்கும் ஆத்மா, அந்தர்யாமி. மனசாக்ஷி. வழி காட்டி. அவன் உன்னை செலுத்தும்போது வாழ்க்கை குதிரை ஜோராக ஓடும்..”
”சுவாமி, ஒரு சந்தேகம்?கெட்டவர்கள் என்று தெரிந்தும் ஏன் பீஷ்மாச்சார்யார், த்ரோணர் போன்றவர்கள் கௌரவர்களுக்கு உதவி யுத்தம் புரிந்தார்கள்?”
‘சஞ்சயா, வயதானால் மட்டும் ஒருவன் பெரியவன் இல்லை. தவறு செய்வது எல்லோர்க்கும் சகஜம். தெரிந்து செய்வது தான் குற்றம். அதற்கு எல்லோரும் தண்டனை பெற்று பலனை அனுபவிக்கவேண்டும். பாண்டவர்கள் அவர்களையும் போரிட்டு அழிக்கத்தான் வேண்டியிருந்தது. அது புரியவேண்டுமானால் முதலில் கீதை சொல்வது உனக்கு புரிய வேண்டும். கிருஷ்ணன் கீதையை நமக்கு அதற்காகத் தான் உபதேசித்தான்.”
”கர்ணன் என்பது யார் சுவாமி ?.”
‘கர்ணன் என்பது உனது புலன்களோடு ஒட்டிய உறவு. சகோதரன் மாதிரி. அதன் பெயர் ஆசை. ஆசையால் தான் எல்லா துன்பங்களும் விளையும். திருமூலர் சொன்னது நினைவிருக்கிறதா. ‘ ஆசை படப் பட ஆகி வரும் துன்பங்கள். ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்.” தவறுகளைச் செய்ய தூண்டிவிடுவது தான் ஆசை. கௌரவர்களுக்கு கர்ணன் போல…”
சஞ்சயன் மனதில் எண்ணங்கள் சுழன்றன. நடந்ததை எல்லாம் ஆரம்பத்திலிருந்து மீண்டும் சினிமாவை ரீ வைண்ட் REWIND பார்ப்பது போல் கவனித்தான். குரல் நின்றது.
சஞ்சயன் குருக்ஷேத்திர பூமியை மீண்டும் சுற்றி முற்றிலும் பார்த்தான்.
”ஆஹா, ஆசையால் விளைந்த பலன் இது தான்.. பேராசை பெரு நஷ்டம்..பொறாமை…… புரிந்துவிட்டது.
சஞ்சயன் முகம் வியர்த்தது. நெஞ்சம் படபடத்தது. சத்யம் வெல்லும். பொறுத்தார் பூமி ஆழ்வார்…. பாண்டவர்கள் வென்று பூமி ஆண்டார்கள்… உண்மை புலப்பட்டது.
தன்னுடன் பேசியவரை ஏதோ கேட்க திரும்பினான்.. எங்கே அந்த துறவி…..
ஓஹோ..வாழ்க்கை தத்துவம் தான் இத்தனை நேரம் உருவமெடுத்து என் முன் தோன்றியதோ??.ஒருவேளை அது தான் கிருஷ்ணனோ? இல்லை என்னுள் ஆத்மா பேசுவதை யாரோ பேசுவது போல் உணர்கிறேனோ?
கீதையை உடனே மீண்டும் முதலிலிருந்து படிக்கவேண்டும். புரியாத , தெரியாத விஷயங்கள் அதிலிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.