ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்
பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 23-24
ஆதி சங்கரரை விட அவரிடம் பாடம் கற்ற அறிவுரை பெற்ற சிஷ்யர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். ஏன் தெரியுமா? இப்படிப்பட்ட ஒரு அற்புதமான குருவிடம் உபதேசம் பெற அவர்கள் என்ன தவம் செயதிருக்க வேண்டும்? எனோ நமக்கு நாலு பேரை தவிர, அதாவது ஹஸ்தாமலகர், சுரேஸ்வரர், தோடகர், பத்மபாதர், பற்றி மட்டும் தெரியும். ஏன் மற்ற சிஷ்யர்களை தெரியாமல் போய்விட்டது?. பஜகோவிந்தம் முழுதும் படிக்கும்போது தான் அவர்கள் பெயராவது நமக்கு தெரிகிறது.
23. रथ्याचर्पटविरचितकन्थः पुण्यापुण्यविवर्जितपन्थः । योगी योगनियोजितचित्तो रमते बालोन्मत्तवदेव ॥ २
rathyaa charpaTa virachita kanthaH puNyaapuNya vivarjita panthaH . yogii yoganiyojita chitto ramate baalonmattavadeva .
ரத்யாசார்ப்பத விரசிதகந்த புண்யா புண்ய விவர்ஜித பந்தா யோகி யோகநியோஜித சித்தோ ரமதே பாலோன் மத்தவ தேவா
இந்த ஸ்லோகம் கூட ஆதி சங்கரரின் ஒரு சிஷ்யரான நித்யானந்தர் எழுதியது தான். சிறந்த சிந்தனை யாளராக இருக்கிறாரே இவர்!, எத்தனை அழகாக இந்த ஸ்லோகம் புனையப்பட்டிருக்கிறது. கட கட வென்று ரயில் தண்டவாளத்தில் ஓடுவது போலத்தான் பஜகோவிந்தம் ஸ்லோகங்கள் நெருடலின்றி நாவில் புரள்பவை. ஒரு சில, அந்த ரயில் நதியின் மேல், பாலத்தின் மீது போவது போல, டடங் டடங் என்று இன்னும் மனதை கொஞ்சம் கூடவே கவரக்கூடியவை. இதில் அவர் என்ன சொல்கிறார்? ;
”நீ இந்த முற்றும் துறந்த துறவியைப் பார். நன்றாக கவனி. அவனுக்கு ஆடைக்கு பஞ்சமே இல்லை. உலகத்தில் எத்தனை கந்தல், கிழிசல் தெருவெல்லாம் கிடக்கிறதோ, அதெல்லாம் கிடைக்கும் வரை, அவனுக்கு ஆடைக்கு பஞ்சமே இல்லை. அவன் சுகவாசி. சுதந்திரமானவன். சத்வ, ரஜோ, தமோ குணங்களைக் கடந்தவன். நிலையாக ஓரிடத்தில் நில்லாதவன். இறைவனோடு சதா நினைவில் ஒன்றியவன். எனவே தான், பரிசுத்த, கலப்படமில்லாத, பரிபூரணானந்தத்தில் திளைப்பவன். அவன் மனோநிலைக்கு ஏதாவது ஒரு உதாரணம் சொல்லுங்களேன் அப்போது தான் கொஞ்சம் புரியும் என்கிறாயா? சொல்கிறேன் கேள். அவன் பச்சைக் குழந்தை மாதிரி. மனமே இல்லாத, மனம் அற்ற உன்மத்தன் போன்றவன். குழந்தைக்கும் பைத்யத்துக்கும் மனம் என்று ஒன்றில்லை, மனம் இருந்தாலும் அதில் எதுவும் நிலையில்லை. இப்படி ஒரு நிலைமை வேண்டுமா? அப்படியானால் உடனே சொல்லுங்கள் ”கோவிந்தா. கோவிந்தா” என்று. மனதை ஆனந்தமயமாக்கிவிடுவான்.
24. . कस्त्वं कोऽहं कुत आयातः का मे जननी को मे तातः । इति परिभावय सर्वमसारम् विश्वं त्यक्त्वा स्वप्न विचारम् ॥ २३॥
kastvaM kohaM kuta aayaataH kaa me janani ko me taataH . iti paribhaavaya sarvamasaaram. vishvaM tyaktvaa svapna vichaaram..
கஸ்த்வம் கோஹம் குத ஆயாதாஹ் காமே ஜனனீ கோ மே தாத: இதி பரி பாவய சர்வமஸாரம் விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்”
இந்த அசாத்தியமான ஸ்லோகத்தின் சிருஷ்டி கர்த்தா ஆதிசங்கரரின் மற்றுமொரு சிஷ்யர் சுரேந்த்ரர்.
”அப்பனே, யாரப்பா நீ?இதற்கு நீ பதில் சொல்லும் முன்பு நானே ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன். உன்னை யாரென்று கேட்கும் நானே யார்? என்று எனக்கே தெரியவில்லையே! நாம் இருவருமே எங்கிருந்து வந்தவர்கள்? நமக்கு அம்மா யார்? அப்பா தான் யார்? இவர்களுக்கும் எனக்கு என்ன பந்தம்?எங்கிருந்து வந்தார்கள் சிலகாலம் இருந்து விட்டு பிறகு எங்கு செல்கிறார்கள்? அப்புறம் ஏன் என்னை நினைக்கவில்லை?
ஒரு அருமையான தமிழ் சினிமா பாட்டு அர்த்த புஷ்டி நிரம்பியது. கேட்டது ஞாபகம் வருகிறது . ”அண்ணன் என்னடா தம்பி என்னடா இந்த அதிசயமான உலகத்திலே!’ இந்த கேள்விகளை மூச்சு விடாமல் கேட்டுக் கொண்டே இருப்போம். உடலில் எதுவுமே சாரமற்றது! உலகே மாயம், வாழ்வே மாயம், நிலையாக நாம் காணும் சுகமே மாயம். உலகும் அதைச் சார்ந்ததும் நொடியில் மறையும் கனவு. இந்த எண்ணம் தோன்றினால் தான் வழி பிறக்கும். அதற்கு வழித் துணையாக இருக்கும் அவனை, அந்த கோவிந்தனை பாடு. பஜி .
புதிதாக ஏதாவது சிந்தனை செய்து சொல்ல நான் சங்கரர் இல்லை. சங்கரர் சொன்ன சில அருமை யான எளிய சிந்தனைகள் இவை. அவருடைய எல்லாருக்கும் தெரிந்த பஜ கோவிந்தம் ஸ்லோகங்களை எடுத்துச் சொல்லும்போது புதிய சக்தி, சந்தோஷம் மனம் நிரம்பி வழிகிறது. அதை உங்கள் பக்கம் திருப்பி நான் அனுப்புவது பலருக்கு பிடித்திருக்கிறது என்று உங்கள் கமெண்ட்கள் மூலம் அறியும்போது அடேடே மேலும் இது போல் நிறைய விஷயங்கள் இருக்கிறதே. அதையெல்லாம் கூட சேர்ந்து அனுபவிக்கலாமே. காசா பணமா செலவே இல்லை? , நமக்கோ தூக்கம் இல்லை, உட்கார்ந்து எழுதுவோமே , என்ற எண்ணம் கூடுகிறது. செய்வோமா?