ECHCHAMMA J K SIVAN

எச்சம்மா  —   நங்கநல்லூர்  J K SIVAN

லக்ஷ்மி  என்ற பெயர்  பல வீடுகளில்  எச்சுமி,லச்சுமி , எச்சம்மா,  என்று செல்லமாக அழைக்கப் படுவது  வழக்கம்.  எத்தனையோ எச்சம்மாக்கள் தோன்றி வாழ்ந்தாலும் மறைந்தாலும்  ஒரே  ஒரு  எச்சம்மா துருவ நக்ஷத்ரம் மாதிரி  நினைவில் இருக்கிறாள்.காரணம்  அவள்  திருவண்ணாமலையில் ரமண மஹரிஷியின் கொண்ட  குருபக்தி. தியாகம். எச்சமா  மண்டகளத்தூர் லக்ஷ்மியாக வாழ்ந்து  19 வயதிலேயே  கணவனையும்  அடுத்து பிள்ளை பெண் இரு குழந்தைகளையும்  இழந்து, அநாதையாகி, மஹாராஷ்ட்ராவில் கோகர்ணம் சென்று மஹான்களுக்கு சேவை செய்தும் மன அமைதிபெறாமல் சில வருஷங்களில் திரும்பி வந்து, யாரோ சொல்லி  ரமணரைப் பற்றி அறிந்து  மலைமேல் இருந்த  ரமணர் முன்  நின்றாள். மனதில் இருந்த சோகங்கள் தானாகவே காலியாகி மனம் தெளிந்தது. விடுவாளா? அதற்கப்புறம் ஆசிரமத்தின் அருகிலேயே  சூரி நாகம்மாளோடு  தங்கி எல்லோருக்கும் சேவை புரிந்தாள் . செல்லம்மாள் என்ற பெண்ணை வளர்த்தாள் . அந்த பெண்ணும் ஒரு பிள்ளையைப் பெற்று  கொடுத்துவிட்டு இறந்தது. வாழ்க்கையில் பிடிப்பற்ற நிலையில்  ரமணரின் தர்சனம் ஆன்ம நிம்மதியை கொடுத்தது.  பல வருஷங்கள்  மஹரிஷியின் சேவையில்  பகவானின் அம்மாவாக  வாழ்ந்தாள் . .
1945ம் டிசம்பர் மாசம் 27ம் தேதி  வியாழக்கிழமை , 79 வருஷம் முன்னால் எச்சம்மாள்  விதேஹ முக்தி அடைந்தாள்.  ஒருநாள்  சூரி நாகம்மா   ”நான் இனிமேல்  ஆசிரமத்திலேயே தங்கப்போகிறேன்” என்று சொல்லி விடைபெறும்போது  ”நீ  என் குழந்தைடி ,  என்னோடு இருந்து என்னை கடைசியில் கரை ஏத்துவேன்னு  நினைச்சேன். என்னை விட்டு  தூரப்  போறே.  இனிமே  நான்  போனப்புறம் தான்  என்னை எரிக்கறதுக்கு முன்னாலே இங்கே வருவே போல இருக்கு ”  என்று  கண்ணில் ஜலத்தோடு விடை கொடுத்தாள்  எச்சம்மாள்.   அது  போலவே  ஆகி விட்டது. பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது  எப்போது  உள்ளது தானே.   எச்சம்மா  சூரி நாகம்மாவை பெண் போல் பாவித்து வளர்த்தவள் .

மறைவதற்கு ரெண்டு நாள் முன்னால் எச்சம்மாளின்  ஆசிர்வாதம் பெற  ஒரு தம்பதிகள் அவளுக்கு  பழங்கள் வாங்கிக்கொண்டு வந்தபோது   எச்சம்மாள் உள்ளே  பகவானுக்கும்  மற்ற எல்லோருக்கும் சமையல் பண்ணிக் கொண்டிருந்தாள் .  அன்னிக்கு சாயங்காலம் அவளால்  எழுந்திருக்க முடியவில்லை.   ”கொஞ்சம் ஜலம்  கொடு” என்று கேட்டு யாரோ கொடுத்தார்கள்.   ”பகவானே  ரமணா”  என்று குடித்தவள்  பேசாமல் சற்று கண்ணை மூடி படுத்தாள்.  அதற்கப்புறம் அவள் பேசவில்லை எதுவும் சாப்பிடவில்லை. உதவிக்கு இருந்த ஒரு பெண் ”பாட்டி பாட்டி” என்று குரல் கொடுத்தும் பதிலே இல்லை.  

எச்சம்மா  மரண வேதனையிலிருந்து போது  ஆஸ்ரமத்தில் மகரிஷி தியானத்தில் இருந்தார். அவள் மரண வேதனை குறைந்தது.

 வந்தவர்கள் போய் விட்டார்கள்.  ஜுரம் அனல் பொரிந்தது .  பகவானிடம் செய்தி சொன்னார்கள்.
சொந்தக்காரர்களுக்கு தந்தி போயிற்று. எச்சம்மா கண்ணே திறக்கவில்லை.   மாலை நாலு மணிக்குஒரு  மருத்துவச்சி அம்மாள் வந்து பட்டுத் துணி போர்த்தி  கைநாடி பார்த்தாள் .  எச்சம்ம்மாளுக்கு நினைவு திரும்பவில்லை.  

கூட இருந்த பெண்  ” இன்னிக்கு  பகவானுக்கு  பாட்டி இன்னும் ஆகாரமே  அனுப்பவில்லை” என்றதும் எச்சம்மாள் கண் திறந்தாள்.  ”ஏன்  என்று கேள்வி கேட்பது போல் அந்த பெண்ணைப்  பார்த்தாள் ”
”இதோ பாட்டி,  இப்பத்தான்  கொடுத்தனுப்பிச்சேன்,  நான் உன்னைப் பார்த்துண்டே இருந்ததில் கொஞ்சம் நாழி ஆயிடுத்து.”

அன்று  உண்மையில்  சாப்பாடு  பகவானுக்கு நேரத்தில்  போகவில்லை.  பாட்டிக்கு திருப்தி ஏற்படட்டும் என்று அந்த பெண் அவ்வாறு சொன்னாள். மரணத்தருவாயில் இருந்தாலும்  பகவானுக்கு கைங்கர்யம் பண்ணு வதில் அத்தனை பொறுப்பு எச்சம்மாவுக்கு.

ராத்திரி எட்டுமணிக்கு  ஏதோ   புரியாத  சத்தம் தொண்டையிலிருந்து  வந்தது. கண்ணில் ஒளி தெரிந்தது. அந்த பெண்  ஓடிப்போய் பகவனிடம் சேதி சொன்னாள் .   ஆஸ்ரமத்தில் இருந்த ஒரு டாக்டர் எச்சம்மா வீட்டுக்கு வந்தார். ” நம்பிக்கை இல்லை” என்று உதட்டை பிதுக்கி தலையை அசைத்தார்.  

27ம் தேதி  விடிகாலை  2.30 . எச்சம்மாள் பறந்து விட்டாள் . இனிமேல்  எச்சம்மா  இருந்தாள்  என்று  இறந்த காலத்தில் சொல்லவேண்டும்.   அவள் உடலுக்கு  ஜீவ பிராயச்சித்தம்  கடைசி அந்திம காரியங்கள்  நடந்தது.

எச்சம்மா  ரொம்ப கஷ்டப்படவே இல்லை,  ஒரே ஒரு நாள் படுக்கை அவ்வளவு தான்.  பகவானிடம் ”எச்சம்மா போய்ட்டா”  என்று  சொன்னபோது  ”ஓ  போய்ட்டாளா?’  அவளுக்கு எந்த கவலையும் கஷ்டமும்  இல்லாம இருக்கணும்னு   நினைப்பேன், அப்படியே ஆயுடுத்தா?

சூரி  நாகம்மா தான்  கங்காஜலத்தில் எச்சம்மாவின் உடலை குளிப்பாட்டி, விபூதி முழுதும் பூசி  ருத்ராக்ஷ  மாலை அணிவித்து விடை கொடுத்தாள்.  மத்தியானம் 2.30 மணிக்கு சூரி நாகம்மா பகவானிடம் சென்று  வணங்கியபோது  ”எச்சம்மாவுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் என்ன பண்ணினார்கள்? என்று கேட்டார்.
”சொந்தக்காரங்கள்  அவள் உடலை தகனம் பண்ணவேண்டும் என்று சொன்னார்கள் ”
மகரிஷி மெதுவாக பேசினார்:”ஆமாம்  அப்படித்தான் கணபதி  சாஸ்திரி   மற்ற  சில  பேர்கள்  விஷயத்திலும் நடந்தது”
”நான் எத்தனையோ தடவை சொன்னேன், எச்சம்மா, என்னுடைய   ஆகார கவலை உனக்கு வேண்டாம். எனக்கு எதுவும்  சமைச்சு   அனுப்பாதேன்னு, கேட்கவே மாட்டா. நீங்கள் சாப்பிடலேன்னா நான் பட்டினி கிடப்பேன் னு பிடிவாதம் பிடிப்பா.  நேத்திக்கு கூட  அனுப்பினா,  இனிமே எனக்கு எச்சம்மா சமையல் கிடையாது”  என்று எங்கோ வெறிக்க பார்த்துக்கொண்டே சொன்னார் பகவான். குரலில் விரக்தி சோகம் தெரிந்தது.
 1908லிருந்து  38 வருஷம்  ஒரு  விரதமாக  பகவானுக்கு மடி சமையல் செய்து பரிமாறியது இப்போது  ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.
முதல் நாள்  சாயந்திரம்  வேத பாராயணம் நடந்து.  எல்லோரும் அந்த  அறையை ப்ரதக்ஷிணம் வந்து  நமஸ்கரிப் பார்கள்.  பகவான்  பத்மாசனத்தில் அமர்ந்து  ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். கண்களில் ஒளி பிரகாசமாக வீசியது. வழக்கத்திற்கு மாறாக இருக்க  என்ன காரணம்??  மறுநாள் எச்சம்மா முக்தி அடைய ப்போகிறாள்  என்று அவருக்கு ஞானதிருஷ்டியில் தெரிந்திருக்குமோ?
”நாகம்மா, அதோ பார்  முதலியார் பாட்டி இருக்கிறாள் ”  என்கிறார்.  உரிய காலத்தில் அந்த பாட்டியும் மகரிஷி அருளால் முக்தி பெறப்போகிறாள் என்று உணர்த்தி இருக்கிறார்.  

முதலியார் பாட்டி பற்றி அடுத்து சொல்கிறேன்.

ReplyForward
Add reaction

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *