OOTHTHUKKAADU J K SIVAN

காளிங்கநர்த்தனன் –    நங்கநல்லூர்  J K  SIVAN

ஆவணி மாத காற்று  மாலையில் இதமாக வீசியது. சில   நேரங்களில்  மழையில்லாமல்  சிறிது உஷ்ணத்தோடு பெருமூச்சு  விடும்.   அந்த வேளையில் வீட்டு வாசலில் இருக்கும் வேப்ப மரத்தடியில்  உட்காருவது எப்போதும் சுகமோ  சுகம்.  வழக்கமாக அமரும் சாய்வு நாற்காலி யில் சிவன்  உட்கார்ந்து கதை சொல்லவும் அதை கேட்க அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகள் ரெடியாக இருந்தார்கள்..

“தாத்தா..இன்னிக்கு என்ன கதை சொல்ல போறேள்” என்று ஒருவன் கேட்க,

 “இப்போ தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினோம்.  ஆகவே கிருஷ்ணன் பத்தியே ஒரு கதை சொல்றேன்.
போன வருஷம் ஒரு பழைய கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.  அந்த ஊரிலே  இருக்குற குளத்துல ஒரு அருமையான அழகான கிருஷ்ண விக்ரகத்தை கண்டு பிடிச்சு அதை  அந்த ஊர்  கோவில்ல பிரதிஷ்டை பண்ணி எல்லோரும் தரிசனம் பண்ணுகிறார்கள். .அதை பத்தி தான் சொல்ல போறேன்”.
 “என்ன விக்ரஹம் அது? நவநீத கிருஷ்ணனா?”,
 “இல்ல, அது ஒரு அழகான காளிங்க நர்த்தன கிருஷ்ணன் . அந்த மாதிரி ஒரு அழகான விக்ரஹத்தை நான் இது வரை பார்த்ததே இல்ல”.
 “கேக்கறதுக்கே, ரொம்ப நன்னா இருக்கே..எங்க இருக்கு அது?
 “யாருக்கெல்லாம், ஊத்துக்காடு பத்தி தெரியும்?” என்று கேட்டார் சிவன் தாத்தா

 “ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்னு கேள்வி பட்டு இருக்கேன். இந்த ஆடாது அசங்காது வா கண்ணா பாட்டு பாடினது அவர் தானே”, என்றான் மணி.

 “அவருக்கு வேங்கடகவினு கூட பேரு  இருக்கு. அவர் ஒரு 300 வருஷத்துக்கு முன்னாடியே ஆயிரக்கணக்கான பாட்டுகள் எழுதி, இன்னிக்கி சில நூறு தான் கிடைச்சு இருக்கு.  ரொம்ப பெரிய கிருஷ்ணா பக்தர்..நாரதரே வேங்கட கவியா அவதரிச்சு இருக்கார்னு சொல்லுவார் கள்.  அவர் பொறந்த ஊர் தான் இந்த ஊத்துக்காடு.

”எங்கே தாத்தா அந்த ஊர் இருக்கு?”‘

” நம்ம கும்மோணத்துக்கு தென் மேற்கே, 12 கி.மீ.தூரத் தில்  ஆவூர் -திட்டை  சாலையில்   ஊத்துக்காடு கிராமம் இருக்கு.  அந்த ஊருக்கு பக்கத்துல தான் திருக்கருகா வூரும் அதுல கர்ப ரக்ஷகாம்பிகை கோவிலும் இருக்கு”,

சோழன் காலத்து கோவில். நாரதர்  வேண்டிண்டதாலே  குடிக்கிற நீர் ஊற்று தோன்றின இடம், அது தான் ஊத்துக்காடு. புராதன   காளிங்க நர்த்தன கிருஷ்ணன் இருக்கிற கோவில். வேதநாராயண பெருமாள், லக்ஷ்மித் தாயார் இருக்கா. “சரி சரி மேலே சொல்லுங்கோ”

“இந்த காளிங்க நர்த்தன பெருமாள் சந்நிதிலே போய் நின்னாலே மனசு அந்த யமுனை நதிக்கும் அந்த காளிந்தி மடுவுக்கும் தானா போயிடறது. நான்  பிருந்தாவனம் டூர்  போனப்போ எனக்கு  யமுனாநதி காளிங்க நர்த்தனம் பண்ண இடம்  எல்லாம் பார்க்க  ஆனந்தமாக இருந்தது.  அஞ்சு வயசு கிருஷ்ணர் அந்த பெரிய  ஐந்து தலை நாகத்தின் தலைமேல் நின்று கொண்டு ஒரு கையால  காளிங்கன் என்கிற அந்த சர்ப்பத்தின் வாலை பிடிச்சுண்டு, இடது கால் அதோட தல மேலயும், வலது கால் காத்துல தூக்கிண்டும் நிக்கற கோலம் இருக்கே, அது கண் கொள்ளா காட்சி..

இந்த ஊத்துக்காடு  கோவில்ல அப்படியே  நிற்கிறார் கிருஷ்ணன்.  கோவில் பட்டாச்சார்யார் கற்பூர
 ஹாரத்தி பண்ணி  கிட்டக்க காட்டின போது, அந்த வலது கால்ல  காளிங்கன் வால்  வேகமாக அடிச்ச தழும்பு தெரிஞ்சுது. எனக்கு அப்படியே புல்லரிச்சு போயி, அந்த நிமிஷம் நான் ஒரு கோபியா  மாறி பிரிந்தா வனத்துக்கே  மனசிலே  பறந்து போய்ட்டேன்.”

“கேக்கும் போதே மனசு அங்கே போயிடுத்து தாத்தா, அப்போ அந்த கோவில் ரொம்ப பேமஸ்” இல்லையா?”   என்றான் சுந்து.

“ஆமாம்டா, நெறைய பேர் அந்த கோவிலுக்கு, ராகு தோஷம், சர்ப்ப தோஷம் பரிகார நிவர்த்தி பண்ண
வந்துண்டே இருப்பா. எல்லோரும் கண்டிப்பா ஒரு தடவை போயி பார்க்க வேண்டிய ஸ்தலம் அது”, என்கிறார் சிவன் தாத்தா

“கண்டிப்பா போகணும், அதுவும் உங்களோட கண்டிப்பா ஒரு தடவை அங்க போகணும்”

“போகலாம், போகலாம், மழை வர மாதிரி இருக்கு, மொதல்ல உள்ள போகலாம் வாங்கோ”

அனைவரும் வீட்டிற்குள் சென்றனர்  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *